1 உங்களுடனே சேர்ந்து ஆராதிப்பதில்… இப்பொழுது செய்திக்கு போவதற்கு முன்பாக, இங்கே என்னுடைய அருமையான நண்பர் டாக்டர் லீ வேயில் மேடையில் இருக்கிறார். அவர் லீமா ஓஹேய்யோவிலுள்ள "முதல் பாப்டிஸ்ட்" சபையை சேர்ந்தவர். லீமாவில் நடந்த கூடுகைக்கு அவரும் ஒரு நிதி உதவியாளராக இருந்தார். இன்றிரவு இங்கு வரும்போது ஓஹோயோ கூடுகையை குறித்து மக்களுக்கு ஒரு சில நிமிடம் பேசும்படி அவரிடம் கேட்டிருந்தேன். இப்பொழுது டாக்டர் லீ வேயில் அவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மிக மகிழ்ச்சியடைகிறேன். அவர் பரிசுத்த ஆவியை பெற்ற மற்றுமொரு பாப்டிஸ்டு நபர் ஆவார்.
(சகோதரன் லீ வேயில் அனேக மக்கள் சுகமடைந்ததைக் குறித்து சாட்சி பகர்கிறார்) ஆமென். சகோதரன் லீவேயில் அவர்களே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
2 ஒரு பாப்டிஸ்ட் போதகருக்கு இவையெல்லாம் மிதமிஞ்சிய காரியமாய் இருக்கிறதல்லவா? நல்லது. சகோதரன் லீவேயில் அவர்களை நம்முடன் கொண்டிருப்பதற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அவர் எப்பொழுது வேண்டுமானாலும் நம்மை வந்து சந்திக்கும்படி நம்முடைய கதவுகள் அவருக்காக எப்பொழுதுமே திறந்திருக்கிறது. மற்றும் இன்றிரவிலே நாம்… நாளை இரவு கர்த்தராகிய இயேசுவை அடக்கம் செய்த நாளாக அனுசரிக்கப்படுகிறது.
ஞாயிற்று கிழமை காலையிலே ஆறு மணிக்கு சூரியோதய ஆராதனை நடைபெறும். அதற்கு பின் வருகிறதான கூட்டங்களைக் குறித்து சகோதரன் அறிவிப்பை கொடுத்திருக்கிறார் என விசுவாசிக்கிறேன். இப்பொழுது சற்று நேரம் நாம் ஜெபம் செய்யலாம்.
ஆசீர்வதிக்கப்பட்ட தேவனே, உம்முடைய வார்த்தையே சத்தியமாய் இருக்கிறது. மற்றும், இந்த வார்த்தையை கையாண்டு பயமுமின்றி மக்களுக்கு கொடுக்கிற மனிதர்களுக்காக நன்றி செலுத்துகிறோம். இதோ இன்றிரவு நாங்கள் இந்த வேதாகமத்தை திறந்து அதனுடைய பக்கங்களை திருப்பும்போது, ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவர் தாமே வந்து வார்த்தையின் புரிந்து கொள்ளுதலை எங்களுக்கு அருள்வாராக. இதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே கேட்கிறோம். ஆமென்.
3 இந்த மகத்தான இரவானது நம்முடைய ஆசீர்வதிக்கப்பட்ட தேவன் சிலுவையில் அறையுண்ட நாளாக அனுசரிக்கப்படுகிறது. இவ்வேளையிலே நான் அவருடைய விலையேறப்பெற்ற சொந்த உதடுகளிலிருந்து உரைக்கப்பட்ட, அவருடைய புஸ்தகத்திலே எழுதப்பட்ட வார்த்தைகளை வாசிக்க விரும்புகிறேன். அதை பரிசுத்த மத்தேயு எழுதின 4-ஆம் அதிகாரம்… 47 மற்றும் 48 ஆம் வசனத்தில் இதை வாசிக்கிறோம்.
உங்கள் சகோதரரை மாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படிச் செய்கிறார்களல்லவா?
ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறது போல், நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.
4 இன்றிரவு ''பரிபூரணம்" என்ற தலைப்பின் பேரில் பேசப் போவதாக ஏற்கனவே கூறியிருந்தோம். நம்முடைய கர்த்தர் சிலுவையிலறையப்பட்டதான இந்த இரவில் இதைக்குறித்து தியானிப்பது மிகவும் வினோதமாகக் காணப்படலாம். நீங்கள் ஒருவேளை வானொலியிலே, இந்த உலகத்தின் பாவங்களுக்காக நம்முடைய கர்த்தர் மரித்த இந்த பயங்கரமான நகளைக் குறித்து அனேக செய்தியாளர்களின் வித்தியாசமான பிரசங்கங்களைக் கேட்டிருப்பீர்கள். ஆனால் நான் அதைக் குறித்து விவரிக்க வேறொரு வழியை இன்றிரவிலே தெரிந்திருக்கிறேன். இது கொஞ்சம் வித்தியாசமானதாக இருக்கும். உங்களை கொஞ்சம் புத்துணர்வூட்டுகிறதாகவும் இருக்கக்கூடும். மற்றும் நாம் இதை கொண்டுவர முயற்சிக்கும்போது ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவர் தாமே வார்த்தையின் ஏவுதலைத் தருவாராக (வார்த்தையை ஊக்குவிப்பாராக)
தேவனாகிய கர்த்தர் பரிபூரணத்தைக் கோருகிறார். ஆகவே குறைவுள்ளது எதுவுமே தேவனுடைய பிரசன்னத்திற்குள்ளாகப் போக முடியாது என்பதை நம்முடைய சிந்தையில் கொண்டிருக்க வேண்டும். நம்முடைய ஆராதனையும் மற்றும் எல்லாமுமே பரிபூரணமாகத்தான் இருக்கவேண்டும்.
5 இப்பொழுது தேவன் ஏதேன் தோட்டத்திலே ஆதாமையும் ஏவாளையும் கொண்டிருந்தார். அவர்கள் பாவம் செய்து, பாவத்தினாலே (கீழ்படியாமையினாலே) தேவனுடைய நியாயப்பிரமாணத்தை மீறினார்கள். ஆகையால் மீறுதல் நடைபெறும்போது… கீழ்படியாமை நியாயப்பிரமாணத்தின் மீறுதலாக இருக்கிறது. ஆகவே அவர் பரிசுத்தராய், எந்த ஒரு கலப்படமில்லாதவராய் இருக்கிறபடியால், ஒரு துளி அசுத்தம் கூட அவருடைய பிரசன்னத்தில் நிற்கமுடியாது என்பது தேவனுடைய நியாயப் பிரமாணமாயிருக்கிறது. எனவே மீறுதலினாலே பாவமானது இவ்வுலகத்திற்குள்ளாக வந்திருக்குமானால், பாவியானவன் தேவனுடைய சமூகத்திற்குள் மறுபடியும் வந்து நிற்பதற்கு முன் பாவமானது முதலாவது சரி செய்யப்பட வேண்டியதாக இருக்கிறது.
6 இப்பொழுது, நியாயப்பிரமாணம் (சட்டம்) இல்லையென்றால் நீதி என்ற ஒன்று இருக்காது. நீதிக்கு நியாயப்பிரமாணம் அவசியமாயிருக்கிறது. ஆகையால் நியாயப்பிரமாணம் நிறுவப்படும்போது, அது நீதி ஒன்று உண்டு என்று எடுத்துக் காட்டுகிறது.
இப்பொழுது நியாயப்பிரமாணத்தினாலே எந்த மாம்சமும் இரட்சிக்கப்படுவதில்லை. நியாயப்பிரமாணமானது நம்மை இரட்சிக்க முடியாது. நியாயப்பிரமாணமானது நம்மை சிறைக்குள் வைக்கிற காரியமாக மாத்திரமே இருக்கின்றதேயன்றி நம்மை மீட்கக் கூடிய வல்லமை அதற்கு இல்லை. நியாயப்பிரமாணமானது, நாம் பாவிகள் என்பதை மாத்திரமே நமக்கு காண்பித்து நம்மை குற்றவாளிகளாக தீர்க்கிறது. அதுதான் நியாயப்பிரமாணத்தின் வேலை. ஆக்கினை தீர்ப்பை கொண்டு வருவதுதான் அதனுடைய வேலை. நீ எங்கே தவறு செய்திருக்கிறாய் என்பதை காட்டுவதே அதனுடைய வேலை. ஆகையால் நியாயப்பிரமாணம் தானாகவே நம்மை இரட்சிக்க முடியாது. அதினால் நம்மை குற்றப்படுத்த மாத்திரமே முடியும்.
அதுமட்டுமல்ல, தேவன் பரிசுத்தராயும் நீதிபரராயும் இருக்கிறதினாலே அவர் நிச்சயம் வழக்கு விசாரனையை கொண்டிருக்க வேண்டும். அவர் பாவியை நியாயந்தீர்க்க வேண்டும். ஏனெனில் அவன் கிருபையின் எல்லைக் கோட்டைத் தாண்டி சட்டத்தை மீறுகிற பிரஜையாக மாறினான். அப்படியென்றால் அவனை கண்டிப்பாக நியாயந்தீர்க்க வேண்டும்.
ஒவ்வொரு சட்டமும் தண்டனையை கொண்டதாக இருக்கிறது. ஆகவே தேவனுடைய நியாயப்பிரமாணத்தை மீறுகிறவனுக்கு மரணமே தண்டனையாயிருக்கிறது. அப்படியென்றால், அது மனித இனத்திற்கு மரணத்தைக் கொண்டு வர வேண்டும். மற்றும் முழு மனுக்குலமும் இந்த நியாயப்பிரமாணத்தின் தண்டனைக்குட்பட்டதாகவே இருக்கிறது.
7 ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபோது அவர்கள் மறுபடியும் தேவனுடைய சமூகத்தில் வந்து நிற்கவேண்டுமென்றால், முதலாவது அந்த பாவமானது முடிவு கட்டப்பட்டாலொழிய வேறு எந்த வழியோ அல்லது எந்த ஒரு தீர்வோ இல்லாதிருந்தது. பாவம் செய்த எந்த ஒரு நபரும், அது சிறியதாயிருந்தாலும் பெரியதாயிருந்தாலும், அது எவ்வகை பாவமாக இருந்தாலும், பாவத்தை செய்தவர் பரிசுத்த தேவனின் பிரசன்னத்தில் வந்து நிற்பதற்கு முன்பாக, அந்த ஒவ்வொரு பாவமும் நிவர்த்தியாக்கப்பட வேண்டும்.
ஆகவே, ஆதாமும் ஏவாளும் பாவம் செய்து நியாயப்பிரமாணத்தை மீறின போது அவர்கள் மரணத்திற்குட்பட்டவர்களாயிருந்தார்கள். அங்கே நியாயப்பிரமாணமானது நிறைவேற்றப்பட வேண்டியதாக இருந்தது. அதுவே மனுகுலம் முழுவதையும் மரண தண்டனைக்குள்ளாக்கவிட்டது. நாம் மாத்திரம் இப்பொழுது நம்முடைய சிந்தையில் வேறு எதையும் சிந்தியாமல் சற்று அமைதியாய் இருந்து இந்த மகத்தான காட்சியை பார்ப்போமானால், அப்பொழுது ஒவ்வொரு நபரும் இந்த நிலைக்குள்ளாகவே இருக்கிறதை உணர்ந்து கொள்வோம். மனுகுலத்தின் தலையாகிய ஆதாமின் மீறுதலினாலே ஒவ்வொருவரும் பாவத்தினால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறோம். அவனுடைய மீறுதலினாலே ஒவ்வொரு புருஷனும், ஸ்திரீயும், குழந்தையும் மரணதண்டனைக்குட்பட்டவர்களாய் இருக்கிறார்கள்.
8 ஆகையால் பாவத்திற்கு ஒரு முடிவு கட்ட வேண்டியதாய் இருக்கிறது. அதினால் தான் தேவன் அவருடைய மகத்தான எல்லையற்ற அன்பினாலே… நியாயப்பிரமாணமானது ஒரு பாவியை அவனுடைய சிருஷ்டிகரிடமிருந்து பிரித்துவிடும். அதன்பின் அவன் முற்றிலுமாக நிர்மூலமாக்கப்பட வேண்டும், அவனுடைய பாவமானது முடிவு கட்டப்படாமல் அவன் திரும்பி வருவதற்கு எந்த வழியுமே இல்லாதிருந்தது. மற்றும் ஒரு பாவி அவனுடைய முடிவிலே முற்றிலும் நிர்மூலமாக்கப்படுவான் என்று நம்புவது சுலபமான காரியம், ஏனெனில் அவன் தேவனுடைய பிரசன்னத்திலிருந்து முற்றிலுமாக, என்றென்றும் பிரிக்கப்பட்டவனாக இருக்கிறான்.
9 இப்பொழுது இந்த பாவத்தை சற்று கவனியுங்கள். தேவன் நீதிபரராயிருக்கிறதினாலே, அவர் நீதியை செய்வதை தவிர வேறொன்றையும் செய்ய முடியாது. ஏனென்றால் எல்லா நீதிக்கும் ஆதாரம் அவரே. ஆகவே அவர் மீறுதலுக்கு தண்டனையை கொடுப்பதை தவிர வேறு எதையும் செய்ய கூடாமல் இருந்தது. மற்றும் அந்த தண்டனை மரணமாயிருந்தது. ஏனென்றால் "இதை புசிக்கும் நாளிலே நீ சாகவே சாவாய்" என்று கூறினார். இப்பொழுது இந்த காட்சியானது சற்று பயங்கரமாயிருக்கிறது.
ஆனால் நாம் சற்று பின்னாக சென்று தேவனுடைய தன்மைகளை ஆராய்ந்து பார்ப்போமானால், "தேவன் அன்பாய் இருக்கிறார்" என்று வேதாகமம் மிக தெளிவாக கூறுகிறதைப் பார்க்கலாம். அவர் அன்பாக இருந்தாலும் அவர் நீதியுள்ளவராக இருக்க வேண்டியது அவசியமாய் இருக்கிறது. ஆகவே அன்பு என்று சொல்லும்போது, அது ஏதோ கொஞ்சியும், தட்டியும், விளையாடுகிறதுமான காரியம் என்று மாத்திரம் அர்த்தமல்ல. அன்பு தேவனுடைய நீதியாயிருக்கிறது.
10 இப்பொழுது தேவனுடைய பிள்ளைகள் அவருடைய நியாயப்பிரமாணத்தை மீறி, மரணத்துக்கேதுவாகி மரிக்க வேண்டியதாயிருந்ததைக் கண்டபோது, அந்த ஏகாதிபத்திய அன்பானது அவர்களுக்கு ஒரு வழியை உண்டுபண்ணும்படி காட்சியிலே இறங்கினது. ஏனெனில் அவருடைய பிள்ளைகள் அவருடைய சமூகத்திலிருந்து முற்றிலுமாக பிரிக்கப்பட்டு நிர்மூலமாக்கப்பட வேண்டியவர்களாய் இருந்தார்கள் என்பதை தேவன் கண்டார். அவர்கள் நியாயப்பிரமாணத்தை மீறினதினாலே அவர்களுக்கு நியாயபிரமாணத்தின்படி மரணமே தண்டனையாக வழங்கப்பட்டிருந்தது. அதை தவிர வேறு வழியே இல்லை.
அந்நேரத்தில் தானே தேவனுடைய அன்பானது அவருடைய மக்களுக்காக புறப்பட்டுப் போனது. அங்கே தெய்வீக அன்பு வெளிப்படும் போது ஏகாதிபத்திய கிருபையானது அன்பின் பொருளை உற்பத்தி செய்கிறதாய் இருக்கிறது. தேவன் தம்முடைய முன்னறிதலினாலே, தன்னுடைய இனத்தை அவ்வளவாய் நேசித்ததினிமித்தம் அவர்கள் தண்டனைக்குட்பட்டவர்களாக இருந்தபோதிலும், ஏதேன் தோட்டத்திலே அவர்களுடைய தண்டனையான மரணத்திற்குப் பதிலாக வேறொன்றின் மரணத்தை ஏற்பாடு செய்தார். அங்கு கபடற்றதும் எந்த பாவமும் அறியாத ஒரு சிறு உயிரினமான செம்மறி ஆட்டுக்குட்டியையே அவர்களுக்கு பதிலாக வைத்தார். அது குற்றமுள்ள பாவிக்கு பதிலாக கிரியை செய்து மரிக்கும்படி அவனுடைய இடத்தை எடுக்க கடந்து போனது. அடிக்கப்பட்ட செம்மறி ஆட்டுக்குட்டிதான் அவருக்குட்பட்டவர்களின் ஜீவனை தப்புவித்து காத்தது.
11 பழைய ஏற்பாடு முழுவதும் அவர்களுடைய மரணத்தை ஏற்கும்படி அவர்களுக்கு பதிலாக செம்மறி ஆட்டின் இரத்தத்தையும், வெள்ளாட்டின் இரத்தத்தையும், காளைகளின் இரத்தத்தையும் மற்றும் கிடாரியின் இரத்தத்தையும் பலியாக செலுத்தினார்கள். ஆனால் தேவன் அவருடைய மகத்தான பொருளாதாரத்திலே (ஐஸ்வரியத்திலே) வரபோகிற அந்த அசலான பொருளை அவருடைய சிந்தையின் பின்பாகத்திலே கொண்டிருந்தார். ஆகவே அவையெல்லாம் வரப்போகிற அந்த அசலான பொருளுக்கே நிழலாட்டமாக இருந்தது. வருகிறதான அந்த அசலான பொருள் வேறு யாருமில்லை. அது அவருடைய ஒரே பேரான குமாரனே. அந்நேரமட்டுமாக மரித்த செம்மறியாட்டுக் குட்டிகள் எல்லாம் வெறும் நிழலாகவே இருந்தது. நிழல் என்பது ஒரு பொருளின் தெளிவில்லாத காரியமாக இருக்கிறது. ஆகவே அவையனைத்தும் வரப்போகிற கல்வாரியை குறித்தே பேசிற்று.
12 இப்பொழுது இந்த காட்சியை காண்பதற்காக, நம்முடைய வேதாகமத்தை சற்று எபிரேயர் புஸ்தகத்துக்கு திருப்பலாம். மகத்தான அப்போஸ்தலனாகிய பவுல் இந்த காரியங்களைக்குறித்து நமக்கு விவரித்து காட்டுகிறதைப் பார்க்கலாம். எபிரேயர் புஸ்தகம் 10-ஆம் அதிகாரத்தில் இதை வாசிக்கிறோம்.
நான் வார்த்தையை அவ்வளவாய் நேசிக்கிறேன். வார்த்தையே சத்தியம் சபையோருக்கு முன்பாக இதை வாசிக்க விரும்புகிறேன். ஏனென்றால் நியாயத்தீர்ப்பின் நாளிலே அவர்களுடனே நான் நிற்கப் போகிறேன் என்பதை அறிந்திருக்கிறேன். அதற்காக நான் கணக்கு ஒப்புவிக்க வேண்டியவனாய் இருக்கிறேன். வார்த்தையிலிருந்து கொண்டு வருவேன் என்றால் நான் குற்றவாளியாக இருக்க முடியாது. ஏனென்றால் அது வார்த்தையாக இருக்கிறது. மற்றும் தேவனே அவருடைய வார்த்தைக்கு பொறுப்பாளியாக இருக்கிறார்.
13 இன்று அநேக சுவிசேஷகர்களும் மற்றும் ஊழியர்களும் தங்களை ஒரு முக்கிய பிரமுகர்களாக கட்டி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். ஓ, அது ஒரு மிகவும் அவமானத்திற்குறிய காரியம். நாம் சபைகளுக்குள் போகும்போது, இப்படியான ஒரு காரியத்தை பார்க்கிறோம். உதாரணத்திற்கு நாம் ஒரு சபைக்குள் போகும்போது, அங்கே ஒரு குறிப்பிட்ட போதகர் ஒருவிதமான செய்கையை கொண்டிருப்பார் என்றால், அதாவது கொஞ்சம் உணர்ச்சி வசப்படுதல் போன்ற செய்கையாய் இருக்கும்போது நீங்கள் கூர்ந்து கவனிக்காமல் போவீர்களானால், முழு சபையுமே அந்த ஆவியை எடுத்துக் கொண்டதாய் இருக்கும். அவர் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டால் போதும், அல்லது தலையை சற்று ஆட்டினால் அல்லது ஏதாவது ஒரு வினோதமான காரியத்தை செய்தால், ஓ, அப்போது முழு சபையுமே அந்த காரியத்தை எடுத்துக்கொள்ளும். அவ்விதமான உணர்ச்சிகளின் மேலாகவும், சிறு காரியங்கள் மேலாகவும் சார்ந்திருக்கிற நவீன சபைகளை நாம் இன்றைய நாளிலே கொண்டவர்களாய் இருக்கிறோம். அவைகள் மிகவும் குழப்பத்தோடு இருக்கின்றன. ஆனால், என் அருமையான சகோதரனே, நாம் வார்த்தையின் மேல் சார்ந்திருக்க வேண்டிய காலம் ஒன்றிருக்குமானால், அது இன்றைக்குத்தான்.
பாருங்கள், நான் ஏதோ ஒரு வினோதமான வெளிப்பாட்டினாலே நிலையில்லாமல் மக்களை தவறாக வழி நடத்தினவனாக அந்த நியாயத்தீர்ப்பின் நாளிலே நிற்பதை வெறுக்கிறேன். மக்கள் என்னுடைய ஆவியையோ அல்லது என்னுடைய செயலையோ பெற்றுக் கொள்ளாமல் சத்தியத்தை உண்டுபண்ணுகிற தேவனுடைய வார்த்தையினாலே தேவனுடைய ஆவியையே பெற்றுக்கொள்ள வேண்டுமென விரும்புகிறேன்.
14 ஆகையால் இந்த மகத்தான இரவின் வேளையில், தேவனுடைய நித்திய வார்த்தையிலிருந்து வாசிக்க விரும்புகிறேன். நியாயப்பிரமாணமானது பல வருடங்களாக இருந்த போதிலும் பாவத்தை அதினால் எடுத்துப் போட முடியவில்லை என்பதை அறிந்திருக்கிறோம். நான் முன்பு கூறின வண்ணமாக, அது வெறுமனே ஒரு சிறைச்சாலையாக மாத்திரமே இருக்கிறது. அது துப்பறிகிறவனைப் போல நீ என்ன செய்திருக்கிறாய் என்பதை மாத்திரமே கூறினதேயன்றி உன்னை விடுவிக்க அதனிடம் எந்த தீர்வும் இல்லாதிருந்தது. அது உன்னை ஒரு அடகு கடையிலே வைத்ததேயன்றி, அதிலிருந்து உன்னை வெளியே எடுக்கும் ஒரு மீட்பரும் இல்லாததாக இருந்தது. அது உன்னை சிறையிலே வைத்து நீ ஒரு பாவி என்பதை மாத்திரமே அறிந்து கொள்ளும்படி செய்யும். ஆனால் எபிரேயர் 10 ஆம் அதிகாரத்தை சற்று கவனியுங்கள். அதை வாசிக்கலாம்
இப்படியிருக்க, நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய் மாத்திரம் இருக்கிறபடியால்…
நினைவில் கொள்ளுங்கள் அது வரப்போகிற சாயலின் நிழலாய் இருந்தது. நிழலானது அதற்கு பின்னால் ஏதோ ஒரு சாயல் இருக்கிறது என்பதையே அறிமுகம் செய்கிறது.
''வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல் அவைகளின் நிழலாய் மாத்திரம் இருக்கிறது". (கவனியுங்கள், ''அந்த பொருளின்…") வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல் அவைகளின் நிழலாய் மாத்திரம் இருக்கிறபடியால் வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டு வருகிற ஒரே விதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது.
15 இப்பொழுது, தேவன், ஆதியிலே, பரிபூரணத்தை கோரினார். இயேசு இந்த பூமிக்கு வந்தபோது, "பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறது போல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக் கடவீர்கள்" என்று சொன்னார். மற்றும் நியாயப்பிரமாணமானது வருகின்ற பொருளின் நிழலாட்டமாயிருப்பதினாலே அது ஒருபோதும் ஆராதனை செய்கிறவனை பரிபூரணப்படுத்தாது. உங்களால் அதை உருவகப்படுத்தி பார்க்க முடிகிறதா? இப்பொழுது நாம் அதை மீண்டும் ஒரு விசை பார்க்கலாம். நீங்கள் நிச்சயம் அதை தவற விடக்கூடாது. தேவன் முற்றிலுமான பரிசுத்தத்தை கோருகிறார். ஒரு சிறு துளி பாவமிருந்தாலும் சரி, அதினோடு எந்த நபரும் அவருடைய சாயலுக்கு முன்பாக நிற்க முடியாது. இயேசுவும் அதையே சாட்சி பகிர்ந்தார், "பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரணசற்குணராயிருக்கிறது போல், நீங்களும் பூரண சற்குணராயிருக்கக் கடவீர்கள்".
மற்றும் ''நியாயப்பிரமாணத்தின்படி பலி செலுத்த வருகிறவன் அந்த பலிகளினாலே ஒருபோதும் பரிபூரணப்படான்'' என்று வேதாகமம் கூறுகிறது. அப்படியென்றால், நியாயப்பிரமாணத்தினால் எதையுமே பரிபூரணப்படுத்த முடியாது. அது வெறும் சுட்டிக்காட்டுகிறதாக மாத்திரமே இருந்தது. ஆகையால் ஒவ்வொரு வருடமும் செலுத்தப்பட்ட பலியினாலே ஆராதனை செய்கிறவனை ஒருபோதும் பரிபூரணப்படுத்த முடியாமல் போனது. ஆகையால் நியாயப்பிரமாணத்தின் கீழ் இருக்கிற எவனும், அவன் நியாயப்பிரமாணத்தை கைகொண்டவனானாலும் சரி அல்லது நிழல்களுக்கு கீழாக இருந்தவனானாலும் சரி, எவனும் பரிபூரணமாக முடியவில்லை.
அப்படியென்றால் (2வது வசனம்) அந்த பலிகளைச் செலுத்துகிறது நிறுத்தப்படுமல்லவா?…
16 தேவனுடைய பிரசன்னத்திலே என்னை நானே பரிபூரணமாக்கிக் கொள்ள ஏதாவதொன்றை என்னால் செய்யக் கூடுமானால், கிறிஸ்து எனக்காக மரித்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. நீங்கள் தேவனுடைய சமூகத்திற்கு தகுதி பெறும்படி உங்களால் ஏதாவதொன்றை செய்ய முடிந்ததேயானால், கிறிஸ்துவின் மரணம் வீணானதாயிருக்கும். நியாயப்பிரமாணத்தைக் கைகொள்ளுகிறதினாலோ அல்லது உங்களுடைய சட்ட பூர்வமான கருத்துகளினாலோ அல்லது உங்களுடைய சொந்த பரிசுத்தத்தினாலோ அல்லது நீங்கள் செய்கிற காரியங்களை நிறுத்தினதினாலோ பெற முடியாது. நீ பொய்யுரையாமல் இருப்பதினாலோ, களவு செய்யாமல் இருப்பதினாலோ, புகை பிடிப்பதை நிறுத்துவதினாலோ அல்லது திரையரங்குகளுக்கு போவதை நிறுத்திவதினாலோ பெற முடியாது. நீ இப்படியெல்லாம் செய்திருந்தும் இழக்கப்பட்டவனாகவே இருக்கிறாய். எந்தக் காரியமும் அதைச் செய்திட முடியாது. ஒரு சபையைச் சேர்ந்திருப்பது, சடங்குகள், நிகழ்ச்சிகள், ஞானஸ்நானம், சபையின் ஒழுங்குகள் மற்றும் மதக் கோட்பாடுகளை வாசித்தாலும், ஜெபங்கள் ஏறெடுத்தாலும், அவையெல்லாம் ஒரு பொருட்டாக எண்ணப்படமாட்டாது. நீ இழக்கப்பட்டவனாகவே இருக்கிறாய். நீயாகவே சொந்தமாக எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியாது. ஏனென்றால் நீ ஆக்கினைக்குட்பட்ட பாவியாய் இருக்கிறாய். நீயாகவே செய்து வரக் கூடிய வழி ஒன்றும் இல்லை. எந்த மத கோட்பாடானாலும், அல்லது நீ இதுதான் சரி என்று நினைத்து செய்கிற காரியமானாலும் நீயாகவே உன்னுடைய சுயத்தின்படி செய்கிற எந்த ஒரு காரியமும் தேவனுடைய சமூகத்திலே தகுதியைப் பெற முடியாததாய் இருக்கிறது. ஏனென்றால் நீ துவக்கத்திலேயே ஒரு பாவியாய் இருக்கிறாய்.
17 மற்றும் நாம் பாவத்திலே பிறந்து, அக்கிரமத்திலே உருவாகி பொய் பேசுகிறவர்களாய் இந்த உலகத்தில் வந்தோம் என்று வேதாகமம் கூறுகிறது. ஒரு மனிதன் இன்னொருவனுக்காக மரிப்பதை தேவனாலே ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் அவனும் இவனைப் போலவே குற்றவாளியாய் இருக்கிறான். இந்தப் பட்டணத்திலே மிகவும் கீழ்தரமான குடிகாரன் எப்படி தேவனுடைய சமூகத்தில் குற்றவாளியாய் இருக்கிறானோ இது போலவே இந்த உலகத்தில் பிறந்த பேராயரும் இருக்கிறார். ஆகையால் ஒருவன் இன்னொருவனுக்காக பரிகாரம் செலுத்த முடியாது.
ஆகையால் தான் அவர் ஒரு குற்றமற்ற ஒரு மிருகமாகிய சிறு செம்மறி ஆட்டுக்குட்டியின் ஜீவனை எடுத்துக்கொண்டார். நியாயப்பிரமாணத்தின்படி பழைய ஏற்பாட்டிலே, ஒரு மனிதன் பாவம் செய்தபோது, அவன் ஒரு செம்மறி ஆட்டுக்குட்டியை பலிபீடத்தண்டை கொண்டு வந்தான். அவன் ஏதாவது ஒரு கட்டளையை மீறியிருப்பான் என்றால், அவன் கொண்டு வந்த செம்மறி ஆட்டுக்குட்டியை பலிபீடத்தின் மேல் வைத்து, அவனுடைய கைகளை அதின் மேலாக வைத்து தான் தவறாயிருக்கிறான் என்றும் ஒரு குற்றவாளியாயிருக்கிறான் என்றும் அறிந்தவனாய் தன்னுடைய பாவங்களை அறிக்கை செய்கிறான். நியாயப்பிரமாணம் மரணத்தைக் கோரினது. ஆகவே அவன் தனக்குப் பதிலாக ஒரு செம்மறி ஆட்டுக்குட்டியைக் கொண்டு வருகிறான். அந்தச் சிறு மிருகத்தின் தொண்டை வெட்டப்படும்போது, அது தன் கால்களை உதைத்துக் கதற ஆரம்பிக்கும். நீங்கள் எப்பொழுதாவது செம்மறி ஆட்டுக்குட்டி அடிக்கப்படுகிறதைப் பார்த்திருப்பீர்களானால் உங்களுக்குத் தெரியும், அது மிகவும் ஒரு பரிதாபமான அழுகை அந்த பரிதாபமான பிராணி கத்த முயற்சிக்கும், ஆனால் அதனுடைய கழுத்தின் நரம்போ வெட்டப்பட்டிருக்கும். அது அப்படியாய் உதைத்துக் கொண்டு துடித்துக் கொண்டிருக்கும். பின்னர் அது விறைக்க ஆரம்பிக்கும்போது மீண்டுமாய் துடித்துக் கதறும். அப்போது இரத்தமானது பீறிட்டு அதனுடைய சிறிய உரோமத்தையும் ஆராதனை செய்கிறவனின் கைகளையும் தோய்க்கும்.
18 அந்த ஆராதனை செய்கிறவன் தான் செய்த விபச்சாரத்திற்காகவும், பொய்யுரைத்தலுக்காகவும், திருடினதற்காகவும், அல்லது பொல்லாங்கான சிந்தையை கொண்டிருந்ததற்காகவும், அல்லது அவனுடைய குற்றம் எதுவாக இருந்தாலும், அது எவ்வளவு சிறிய நிழலாட்டமான காரியமாயிருந்தாலும், அவன் அதை உணர்ந்துக் கொள்கிறான். ஏனெனில் இயல்பாகவே அவன் ஒரு குற்றவாளியாய் இருக்கிறான். அவன் குற்றவாளியாயிருப்பது, அவனுடைய வாஞ்சையின்படியாய் ஒருவேளை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவன் இயல்பாகவே ஒரு குற்றவாளியாய் இருக்கிறான். ஆகவே அவன் இந்த சிறிய செம்மறி ஆட்டுக்குட்டி தனக்காக மரிக்கிறது என்பதை உணர்ந்திட வேண்டும். அவன் அந்த சிறிய ஜீவனுக்காக மனம் வருந்தினவனாக இருக்கிறான்.
ஆனால் அந்த மனிதனோ அந்த செம்மறி ஆட்டுக் குட்டியானது கடைசியாக மரித்தவுடனே, அவனுடைய கரங்களிலே அந்த செம்மறி ஆட்டுக்குட்டியின் இரத்தம் தோய்ந்த வண்ணமாய் அவனுடைய இருதயத்திலே அவன் முன்பு கொண்டிருந்த அதே வாஞ்சையோடே அந்த கட்டிடத்தை விட்டு கடந்து செல்கிறான். ஏன் தெரியுமா? அந்த ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் இருந்த ஜீவனானது. ஜீவன் இரத்தத்தில் தான் இருக்கும். உங்களுடைய ஜீவனும் உங்களுடைய இரத்தத்தில் தான் இருக்கிறது. அதை நாம் அறிந்திருக்கிறோம். மற்றும் ஆட்டுக்குட்டியின் இரத்தத்திற்குள் இருந்த ஜீவன் அது மிருகத்தின் ஜீவனாக இருக்கிறது. ஆகையால் அதினுடைய அனுக்கள் உடைந்து அந்த மிருகத்திலிருந்த ஜீவனானது வெளியேறின போது அதினாலே அந்த ஆராதனை செய்கிறவனிடம் திரும்பி வர முடியவில்லை. ஏனென்றால் ஆராதனை செய்கிறவன் ஒரு மனிதனாய் இருக்கிறான்.
19 இரத்தமானது மூடினதேயல்லாமல் அதினால் முழுமையான பரிகாரத்தை செய்ய முடியவில்லை. ஆகையால் தான், அந்த மனிதன் கட்டிடத்தை விட்டு கடந்து போகும்போது துவக்கத்திலே எந்த வாஞ்சையோடு வந்தானோ அதே வாஞ்சையோடே திரும்பப் போகிறான். ஆனால் இதை செய்கிறதினாலே, அவன் வரப்போகிற அந்த பரிபூரணமான செம்மறி ஆட்டுக் குட்டியின் வருகையின் காலத்தையே எதிர் நோக்கினவனாய் இருந்தான். அவன் இதை தகனபலியின் மேலாக செலுத்தினான். ஏனென்றால் அவனுக்கு தெரிந்ததெல்லாம் அது ஒரு வழி மட்டுமே.
ஆகையால், நீங்கள் பார்ப்பீர்களானால், இரத்தமானது பீறிட்டு கொட்டிக்கொண்டிருக்கும் போது, அந்த மிருகத்தினிடமிருந்து ஜீவன் புறப்பட்டு போனபோது அதனால் மீண்டுமாய் மனிதனிடத்திற்கு வரமுடியவில்லை; ஏனென்றால் அதில் ஒன்று மனிதன் மற்றொன்று மிருகம்; ஒரு கபடில்லாத மிருகத்தின் ஜீவன் ஒரு குற்றமுள்ள மனிதனிடம் வர முடியாது.
20 ஆனால், ஒரு நாளிலே, ஓ, இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக, பெத்லகேமிலே தேவனுடைய ஆட்டுக்குட்டி ஒரு சிறிய தொழுவத்திலே பிறந்தது. பின்னர், அடிக்கப்படுவதற்கு கொண்டு செல்லப்படும் ஆட்டுக்குட்டியைப் போல் அழைத்துச் செல்லப்பட்டார். ஆயிரத்து தொள்ளாயிரம் வருடங்களுக்கு முன்பாக, இதே மத்தியான வேளையிலே, மதியம் மூன்று மணியளவில் அவர் மரித்தார். எந்த கறையும், குற்றமுமில்லாத தேவ ஆட்டுக்குட்டி கல்வாரியின் சிலுவையிலே தொங்கி ஒவ்வொரு பாவிக்காகவும் மரித்தார். இப்பொழுது ஆராதனை செய்கிறவன் இந்த ஆட்டுக்குட்டியிடம் விசுவாசத்தினாலே வரும்போது… இது ஒரு வித்தியாசமான ஆட்டுக்குட்டி. இது மற்ற ஆட்டுக்குட்டியைப் போல அல்ல.
தேவன் முதலாவதாக ஒருவனை அவர் பட்சமாக இழுத்துக் கொள்ளாமல் எந்த ஒரு மனிதனும் இந்த ஆட்டுக்குட்டியின் பட்சம் வரமுடியாது. தேவனுடைய ஏகாதிபத்தியத்தை பார்த்தீர்களா? ஓ, இந்த காரியம் ஆழமாய் செல்லவேண்டும் என நினைக்கிறேன். கவனியுங்கள், தேவன் இந்த உலகத்தில் அவருக்கென்று செம்மறி ஆடு உண்டு என்பதை அறிந்திருந்தார். அவர் இரட்சிக்கப்பட போகிற மக்கள் இன்னார் என்பதை அறிந்திருந்தார். ஆகையால் யாரெல்லாம் இரட்சிக்கப்பட போகிறார்களோ அவர்களையெல்லாம் அவருடைய அன்பு கீழே நோக்கிப்பார்த்தது. ஆகவே தேவன் தம்முடைய முன்னறிதலினாலே, அக்கரையிலே அவரை சந்திக்கத்தக்க ஓர் கறைதிறையற்ற சபையை முன்குறித்தார். இப்பொழுது தேவன் தமக்கு கறைதிறையற்ற சபையை கோரினாரென்றால் அதை அந்தபடியாக மாற்றுவதற்கு அவர் ஏதாகிலும் ஒன்றை கொண்டிருக்கவேண்டும். அப்படியொன்றை அவர் கொண்டிருக்காவிட்டால், அதாவது அவர் அதற்கான வழியை உடையவராக இல்லாத பட்சத்தில், அவருடைய நீதியும் அவருடைய நியாயத்தீர்ப்பும் அப்படியொன்றை கேட்பதற்கு அவரை அனுமதிக்காது.
21 ஆகவே மனிதனாலே அந்த காரியத்தை தானாகவே செய்ய முடியாது. அவனோ முற்றிலும் தோல்வியடைந்தவனாயிருக்கிறான். அவனை நியாயப் பிரமாணத்தின் மூலமாகவும், நியாயாதிபதிகளின் மூலமாகவும், மற்றும் பழைய ஏற்பாட்டின் முழுவதின் மூலமாகவும் அவன் தோல்வியடைந்தவன் என்பதைப் பார்க்கும்படி அனுமதித்தார். அவர் தீர்க்கதரிசிகளை அனுப்பினார். நீதியுள்ள மனிதனை அனுப்பினார். அவர்கள் எல்லோரும் தோல்வியுற்றதை கண்டறிந்தார்கள்.
ஆகையால் தேவன் தம் முடைய ஏகாத்திபத்திய கிருபையினாலே அந்த மகிமையின் வாசஸ்தலத்திலிருந்து நம்முடைய ஸ்தானத்தை எடுத்துக் கொள்வதற்காக தம்முடைய ஒரே பேரான குமாரனை அனுப்பினார்.
22 நினைவில் கொண்டிருங்கள், அவர் இந்த ஸ்தானத்தை எடுக்கும்படி ரோமிலுள்ள போப்பிடம் சொல்லியிருப்பாரானால், அவரால் அதை செய்திருக்க முடியாது. ஒருவேளை கேன்ட்ரிபரி பேராயரிடம் செய்ய சொல்லியிருந்தால் அவராலும் அதை செய்திருக்க முடியாது. அல்லது உலகத்திலேயே மிக பரிசுத்தமான சங்கை பாதிரியையோ அல்லது பேராயரையோ கூப்பிட்டிருந்தாலும் அவராலும் அதை செய்திருக்க முடியாது. ஏனெனில் யூதாஸ் ஸ்காரியோத் எந்த அளவிற்கு தள்ளப்பட்டவனாக இருந்தானோ அவ்வளவாய் அவர்களும் தள்ளப்பட்டவர்களாய் இருக்கிறார்கள். அவர்களால் அதைச் செய்ய முடியாது. ஏனென்றால் அவர்கள் பாவத்திலே பிறந்து, அக்கிரமத்திலே உருவாகி பொய் பேசுகிறவர்களாய் இந்த உலகத்திற்கு வந்திருக்கிறார்கள். முதலாவது அவனுக்கே ஒரு பரிகாரம் அவசியமாயிருக்கிறது.
அல்லேலூயா ஆனால் மகிமையின் வாசலிலிருந்து ஒருவர் வந்தார். அவர் ஏதோ ஒரு மனிதனாகவோ, அல்லது நற்கிரியையுள்ள மனிதனாகவோ, அல்லது ஒரு யூதனாகவோ அல்லது புறஜாதியோ அல்ல. அவர் மனித மாம்சத்தில் மறைந்திருந்த சர்வ வல்ல தேவனேயன்றி வேறொருவருமில்லை. அவரே தம்முடைய சொந்த இரத்தத்தை பலியாய் கொடுக்கும்படி வந்தார். ஏனென்றால் அது பாலுணர்ச்சியினூடாய் வரவில்லை. பாலுணர்ச்சிக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் அவர் தாமே ஒரு கன்னிகையின் மேல் நிழலிட்டு, அவர் சிருஷ்டித்த இரத்த அணுவிலிருந்து அந்த குற்றமற்ற ஒருவரைக் கொண்டு வந்தார்.
23 அப்படியென்றால் இன்றிரவு என்னுடைய இரட்சிப்பும் உங்களுடைய இரட்சிப்பும் நம்முடைய கிரியைகளின் தகுதியின் மேல் ஆதாரப்பட்டு இல்லை. நம்மை அவருக்குள் தெரிந்து கொண்ட சர்வ வல்ல தேவனுடைய ஆக்கப்பூர்வமான ஏகாதிபத்திய கிருபையின் மேல் ஆதாரப்பட்டிருக்கிறது. அது உண்மை. நானும் சரி நீங்களும் சரி, நாம் ஒருபோதும் பரிபூரணமாக முடியாது. நாமும் பரிபூரணர்கள் என்று அழைத்துக் கொள்ள முடியாது. ஆனால் ஒரு ஆறுதல் நமக்கு உண்டு. அது என்னவெனில், நமது விசுவாசம் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட அந்த பரிபூரணமான பலியின் மேல் உள்ளது.
24 அப்படியென்றால், அதை நாம் பெற்றுக்கொண்டோம் என்று நமக்கு எப்படி தெரியும்? ஆராதனை செய்கிறவன் விசுவாசத்தினாலே தன்னுடைய கரத்தை கர்த்தராகிய இயேசுவின் மேல் வைத்து, பாவத்தின் கொடூரத்தை உணர்ந்து, அவருடைய முகத்திலே ஏௗணத்தோடு துப்பப்பட்ட எச்சிலையும், கெத்சமனேயிலுண்டான தாங்க முடியாத வேதனையின் முனங்கல்களையும் கல்வாரியின் கடுந்துயரங்களையும் உணர்ந்து, தான் பாவி என்று அறிந்து தன்னுடைய பாவங்களை தெள்ளத்தெளிவாக அறிக்கை செய்து, "ஓ ஆசீர்வதிக்கப்பட்ட தேவனே, நான் குற்றவாளியாயிருக்கிறேன். நீர் எனக்கு உதவி செய்தாலொழிய வேறு எந்த வழியும் இல்லை. விசுவாசத்தினாலே… நீர் அனுப்பின பரிசுத்த ஆவியானவர் என்னை உள்ளே வரும்படி ஓயாமல் அழைத்துக் கொண்டிருக்கிறார். இதோ இப்பொழுது விசுவாசத்தினாலே இயேசுவையே என்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன்" என்று சொல்வான். கல்வாரியில் அவரிடமிருந்து புறப்பட்டு வந்த அந்த ஜீவன் தாமே பரிசுத்த ஆவியாய் இருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் இரத்த அணுக்குள் மறைந்திருந்த அந்த ஜீவன் ஆராதனை செய்கிறவனிடம் திரும்ப வந்து அவனை கிறிஸ்துவின் சரீரத்திற்குள்ளாக பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் செய்கிறது.
25 அவர் ஏற்கனவே நியாயந்தீர்க்கப்பட்டவராய் இருக்கிறார். ஆகையால் நீங்கள் நியாயத்தீர்ப்பை குறித்து கவலைப்பட வேண்டிய தேவையில்லை. அந்த சிறிய சிலுவையை நான் நோக்கி பார்க்கும்போது, அவருடைய சரீரத்திற்கு பிரதிநிதியாய் இருக்கிறது என்பதை உணருகிறேன். இப்பொழுது அந்த சரீரம் ஏற்கனவே நியாயந்தீர்க்கப்பட்டாயிற்று. தேவன் அதை சும்மாய் மீண்டும் நியாயந்தீர்க்க மாட்டார். ஏனென்றால் அது ஏற்கனவே நியாயந்தீர்க்கப்பட்டாயிற்று. தேவன் மரணத்தீர்ப்பை அந்த சரீரத்தின் மேலாக வைத்தார். ஓ, நான் அந்த சரீரத்திற்குள்ளாக மறைந்திருக்கத்தக்க ஒரு வழியை கண்டுபிடிப்பேனானால் அவருடைய நியாயத்தீர்ப்பு உனக்காகவும் எனக்காகவும் வழங்கப்பட்டது. நாம் விடுதலையானவர்கள் ரோமர் 8:1 சொல்கிறபடி, "அப்படியானால் கிறிஸ்து இயேசுவுக்குட்டபட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. அங்கே தான் நீங்கள் இருக்கிறீர்கள். நமக்கு ஆக்கினைத் தீர்ப்பே இல்லை. ஆகவே எது வந்தாலும் எது போனாலும் அதை குறித்து எனக்கு கவலையில்லை. நீ அந்த இரத்தத்தின் கீழாய் மறைக்கப்பட்டிருக்கிறாய்.
26 இதை திரும்பவும் பார்க்கலாம். நாம் எப்படி அந்த சரீரத்திற்குள் போகக்கூடும்? 1 கொரிந்தியர் 12:12 "ஒரே ஆவியினாலே" என்று கூறுகிறது. அப்படியென்றால், ஆவியானது எப்படி வருகிறது? பலியினாலே, ஆவி எங்கே இருக்கிறது? இரத்தத்திற்குள்ளாய், ஏன் மிருகத்தினால் திரும்ப வர கூடாமல் போனது? ஏனென்றால் அது மிருகமாயிருக்கிறது. ஒரு மிருகத்தின் ஆவி மனிதனின் ஆவியினிடத்திற்கு வந்து அவனுக்கு எதையும் செய்யகூடாதபடி இருக்கிறது. ஏனெனில் மனிதனின் ஆவியானது, உயிரினங்களின் பட்டியலிலே பார்க்கும்போது, விலங்குகளைக் காட்டிலும் மேலானதாக இருக்கிறது. அதே போல் தான் எந்த ஒரு மனிதனின் ஆவியும் திரும்பவும் வரமுடியாது. அப்படி நீ உன்னுடைய மூதாதையருடைய ஆவி ஏதேனும் ஒன்றை பெற்றிருப்பாயென்றால் அது இறந்தோரின் ஆவியை தொடர்பு கொள்ளும் செயலாக இருக்கிறது. ஆகையால் தான் தேவனானவரே இறங்கி வந்தார். ஏனெனில் இருக்கிற ஆவிகளிலே அவருடைய சொந்த ஆவியே மேலான ஆவியாய் இருக்கிறது. அந்தப்படியே அவர் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் வடிவத்திலே ஆராதனை செய்கிறவனிடம் திரும்பவும் வந்து கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாய் அவனை அந்த சரீரத்திற்குள்ளாக கொண்டு செல்லுகிறது. ஆகவே அவன் பாதுகாப்பாயிருக்கிறான்.
27 இப்பொழுது இதை கவனியுங்கள். காளைகளின் இரத்தமும் ஆட்டுக்கடாக்களின் இரத்தமும் பெலவீனமாயிருக்கின்றபடியால் அவைகளால் எந்த கிரியையும் செய்ய முடியாது. இப்பொழுது 12-ஆம் வசனத்தை தொடர்ந்து வாசிக்கலாம். நல்லது காளைகளின் இரத்தத்தினாலும் ஆட்டுக்கடாக்களின் இரத்தத்தினாலும் எந்த பலனும் இல்லை என்றால், அதினால் பரிகாரமும் செய்யப்பட முடியாது. கவனியுங்கள்.
ஆனால் இவரோ, (இவர் யார்? பேராயரா? இல்லை போப்பா? இல்லை). இவரோ பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்து,
இனித்தம்முடைய சத்துருக்களைத் தமது பாதபடியாக்கிப் போடும் வரைக்கும் காத்துக் கொண்டிருக்கிறார்.
ஆயத்தமாய் இருக்கிறீர்களா? வார்த்தைக்கு ஆயத்தமாயிருக்கிறீர்களா? இதை கூர்ந்து கவனியுங்கள். அதன்பின் இது உங்கள் இருதயத்தின் ஆழத்தில் செல்ல வேண்டுமென விரும்புகிறேன். இதை கவனமாய் கேளுங்கள்.
ஒரே பலியை செலுத்தி (வருடத்திற்கு பின்வருடம், எழுப்புதலுக்குப் பின் எழுப்புதல், கூட்டங்களுக்குப் பின் கூட்டங்கள், நாளுக்குப் பின் நாள் என்பதல்ல. ஆனால் ஒரே பலியை செலுத்தி அவர் பூரணப்படுத்தியிருக்கிறார். (அப்படியா? அவர் அதை செய்தார்) (இது தேவனின் கோரிக்கை) ஏனெனில் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்.
28 அதுதான் காரியம் அதுதான் கிறிஸ்து மரித்ததற்கான பதிலாய் இருக்கிறது. அதுதான் கல்வாரிக்கான பதில். அவர் முற்றிலுமாய் தன்னுடைய சொந்த இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களை கிரயத்தினாலே வாங்கி அவருடைய விசுவாசிகளை என்றென்றைக்குமாய் பூரணப்படுத்தியிருக்கிறார். ஆகையால் கிறிஸ்துவுக்குள்ளாக நாம் கறைதிறையற்றவர்களாய் சர்வ வல்லவருடைய தேவனின் பிரசன்னத்தில் பூரணப்பட்டவர்களாய் நிற்கிறோம். நாம் தானே நம்முடைய சொந்த உபசேதங்களினாலே ஏதாவது ஒரு காரியத்தை செய்ய வேண்டும், அல்லது ஒரு நிலையை அடைய வேண்டும் என்ற போதனையினாலே, நம்முடைய சிலாக்கியத்திற்கும் கீழாய் வாழ்கிற மக்களாக இருக்கிறோம். இல்லை சகோதரனே, நீ செய்ய வேண்டிய காரியம் ஒன்றும் இல்லை, தேவன் உனக்கு என்ன செய்திருக்கிறாரோ அதுதான் காரியம். இப்பொழுது நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டோமென்றால், நாம் தேவனுடைய சமூகத்திலே என்றென்றுமாய் பரிபூரணப்பட்டவர்களாயிருக்கிறோம்.
29 ஆகவே, "நீங்கள் பரிசுத்தராயிருங்கள்" என்று இயேசு சொன்னதும், அது என்றென்றைக்குமாய் பரிபூரணப்பட்டதாக இருக்கிறது. தேவன், கிறிஸ்துவின் மரணத்தின் மூலமாக, ஆயிரத்து தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உலக தோற்றத்திற்கு முன்பதாக கண்ட விசுவாசியை என்றென்றைக்குமாய் இன்று பரிபூரணப்படுத்தினார். எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார். "எவர்களை முன்னறிந்தாரோ, அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ, அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார், எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை ஏற்கனவே மகிமைப்படுத்தியுமிருக்கிறார்". அவர் தமது விசுவாசிகளை பரிபூரணப்படுத்திவிட்டார்.
30 இப்பொழுது நாம் மீண்டுமாய் முதலாம் வசனத்தை கவனிக்கலாம்.
இப்படியிருக்க நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய் மாத்திரம் இருக்கிறபடியால், வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டு வருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது.
கவனியுங்கள், நாம் பரிபூரணத்தை குறித்துதான் பேசிக்கொண்டிருக்கிறோம்.
பூரணப்படுத்துமானால் ஆராதனை செய்கிறவர்கள் ஒருதரம் சுத்தமாக்கப்பட்ட பின்பு, இன்னும் பாவங்களுண்டென்று உணர்த்தும் மனசாட்சி அவர்களுக்கு இல்லாதிருப்பதினால், அந்தப் பலிகளைச் செலுத்துகிறது நிறுத்தப்படுமல்லவா?
என்ன சொல்ல வருகிறீர்? இங்கே கொடுக்கப்பட்டுள்ள மனசாட்சி என்ற வார்த்தைக்கு ''வாஞ்சை" என்பதே சரியான வியாக்கியானம். ஆகவே ஆராதனை செய்கிறதான ஒரு மனிதன் மாத்திரம் சரியான விதானத்திலே கிறிஸ்துவுக்கு முன்பாக வந்து, அவருடைய பாடுகளை கண்டு, கிறிஸ்துவுக்கு தன்னை அர்பணித்து, "ஓ என் தேவனாகிய கர்த்தாவே, பாவ பரிகாரம் செய்வதற்கு என்னிடம் எந்த ஒரு காரியமும் இல்லை, ஆனால் நான் முழுவதுமாக உம்மையே சார்ந்திருக்கிறேன்" என்று கூறுவானானால், அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் அந்த மனிதனின் இருதயத்திற்குள்ளாக வருவார். அப்பொழுது பாவத்திற்கான கேள்வி என்றென்றைக்குமாய் முடிவு பெறுகிறது. அதன் பின்னர் பாவம் செய்ய வேண்டும் என்ற வாஞ்சையாவும் உன்னிடமிருந்து எடுத்துப் போடப்பட்டிருக்கும். நியாயப்பிரமாணத்தினால் அதனைச் செய்யக் கூடுமானால் பலியிடுவதை நிறுத்தியிருக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் முடியாத பட்சத்தினால், நம்மை பரிபூரணப்படுத்த கிறிஸ்துவே மரிக்க வேண்டியதாயிருந்தது.
31 நண்பர்களே, பரிபூரணத்தை குறித்து பேச வேண்டுமென்றால் அனேக காரியங்களை இன்றிரவு பேசமுடியும். நாம் எப்பொழுதுமே நம்மை மற்றவர்களை காட்டிலும் சற்று பரிசுத்தமானவர்கள் என்று காட்டும்படி அவர்களுடைய கண்களை பிடுங்கி எடுக்கிறோம். ஆனால் காரியங்களை சரியாக ஆலோசித்து பார்ப்போமானால் நாம் இவ்விதமாய் இருப்பது தேவனுடைய சுத்த கிருபை என்பதை அறிந்து கொள்வோம்.
32 சில நாட்களுக்கு முன்பு ஒஹேய்யோவில் ஒரு பாடத்தை மிக கடினமான முறையிலே கற்றுக்கொண்டேன். நான் ஓஹேய்யோவிலே கூட்டத்தை கொண்டிருந்தபோது, அங்கே கூட்டம் அதிகமாக இருந்தபடியால் அந்த பட்டணத்திலே தங்க முடியாமல், ஊருக்கு வெளியிலுள்ள கிராமத்திலே தங்கியிருந்தேன்.
அங்கே நாங்கள் "டங்கர்டு" என்னும் ஒரு சிறு உணவு விடுதியிலே எங்களுடைய உணவையருந்தி வந்தோம். அங்கே மிக நேர்த்தியாகவும் கண்ணியமாகவும் உடை உடுத்தியிருந்த ஒரு அருமையான பணிப்பெண் ஒரு நல்ல சீமாட்டியைப் போன்று எங்களுக்கு பரிமாறினார். அந்த இடத்திலே உணவருந்தும் பொழுது ஒரு குட்டி பரலோகத்திலிருப்பது போன்றிருந்தது. அவர்களுடைய சமையலறை மிக சுத்தமாக பளபளவென இருந்தது. ஞாயிற்றுக் கிழமைகளில் அவர்கள் விடுதியை மூடி, அவர்களுடைய சபைக்குச் சென்றார்கள். அந்த ஞாயிற்றுக் கிழமையன்று நான் சற்று பசியாயிருந்தேன். அதுமட்டுமல்ல, அந்த மதிய வேளையிலும் நான் பிரசங்கிக்க வேண்டியிருந்தது.
ஆகவே நான் ஏதாவது சாப்பிடும்படி வேறொரு சின்ன சாதாரண அமெரிக்க விடுதிக்குச் சென்றேன். அங்கே நான் உள்ளே நுழைந்ததும் எனக்கு சூதாட்ட கருவி சுற்றுகிற சத்தம் கேட்டது. மற்றும் அங்கே என்னுடைய வயதுடைய ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் திருமணமானவர் போலிருந்தார். அவர் தன்னுடைய கரத்தை ஒரு பெண்ணின் மேல் போட்டுக் கொண்டு அந்த சூதாட்ட கருவியில் விளையாடிக் கொண்டிருந்தார். நம்முடைய நீதியையும் நன்மையையும் பாதுகாக்க வேண்டிய நம்முடைய சட்டமே அங்கே நின்று கொண்டு அந்த சட்ட விரோதமான காரியத்தை செய்து கொண்டிருந்தது. (ஏனெனில், ஓஹேய்யோவில் சூதாடுவது சட்ட விரோதமான காரியமாயிருக்கிறது). சூதாட்ட கருவியில் விளையாடுவதும் சட்ட விரோதமான செயல்.
33 அதன்பின் நான் அந்த கட்டிடத்தின் பின் பகுதியை பார்க்கும்படி திரும்பினேன். அங்கே அந்த பழைய ''ராக் அண்டு ரோல்" இசை ஒலிபெருக்கியில் இசைத்துக் கொண்டிருக்க, ஒரு கூட்ட இளம் வாலிபர்கள் நடனம் ஆடிக்கொண்டிருந்தார்கள். ஒரு பதினெட்டு வயதுடைய பெண் ஒருத்தி அங்கே நின்று கொண்டிருந்தாள். அவளுக்கு ஒரு ஸ்திரீயின் சரீர அமைப்பு இருந்தது. ஆனால் அவளோ மிகவும் தாழ்வாக தொங்கும் முன்பாகத்தை கொண்ட ஒரு உடையினை அணிந்து நின்றுக் கொண்டிருக்க, அங்கிருந்த பையன்களில் ஒருவன் அவள் மீது கைகள் வைக்கக்கூடாத இடத்தில் தன் கைகளை வைத்துக் கொண்டிருந்தான். அவர்கள் அப்படியாய் குடித்தும் புகைப்பிடித்தும் கொண்டிருந்தனர். அப்பொழுது நான், "ஓ தேவனே, எப்படி உம்மால் இதை சகித்துக்கொள்ள முடிகிறது" என்று நினைத்தேன்.
34 அதன்பின் என்னுடைய வலது பக்கமாய் யாரோ ஒருவர் சத்தமாக பெருமூச்சிடுகிறதை கேட்ட போது திரும்பிப் பார்த்தேன். அப்போது அங்கே அறுபது அல்லது எழுபது வயது மதிக்கத்தக்கதான ஒரு வயதான ஸ்திரீ அமர்ந்திருந்தாள். அவள் மிகவும் அசிங்கமான ஒரு சிறிய ஆடையை உடுத்தியிருந்தாள். அவளுடைய ஆடை பாதி தொடை மட்டுமாகத்தான் இருந்தது. மற்றும் அவளுடைய சுருக்கம் நிறைந்த மாம்சமோ அதினால் எவ்வளவு தொங்கிக் கொண்டிருக்க முடியுமோ அவ்வளவாய் விழுந்து தொங்கிக் கொண்டிருந்தது. அவள் தன்னுடைய உதட்டுக்கு சாயங்களை பூசியிருந்தாள். அதுமட்டுமல்லாமல் அவளுடைய முகத்தின் ஒரு பக்கம் ஊதா நிற வண்ணத்தினால் ஏதோ ஒன்று பெரியதாய் வரையப்பட்டிருந்தது. மற்றும் அவள் ஒரு சிறு காலணியை அணிந்திருந்தாள். அவளின் கால் விரல்களும் கை விரல்களும் ஊதா நிறத்தில் சாயம் பூசப்பட்டிருந்தது. அவளுடைய முடியும் மிக சிறியதாக வெட்டப்பட்டு சுருட்டி விடப்பட்டிருந்தது. அதற்கு நீல நிற சாயத்தை பூசியிருந்தாள். நான் அவளை நோக்கிப் பார்த்தேன்.
35 அதன்பின் அந்த மேசையில் எதிரில் இரண்டு பேர் குடிபோதையில் அமர்ந்திருந்தனர். அதில் ஒருவன், அது வெயில் காலமாயிருந்தும், ஒரு பெரிய ராணுவ மேலங்கியை அணிந்து, சாம்பல் நிற துண்டை கழுத்தில் சுற்றியிருந்தான். அவனுடைய மீசை அவனுடைய முகத்தை மறைக்கும் அளவிற்கிருந்தது. அவன் ஏப்பம் விட்டு வாந்தி எடுக்கிறதைப் போல் பண்ணிக்கொண்டிருந்தான். அவர்கள் அவளிடமிருந்து விடை பெறும்படி கேட்டுக் கொண்டு கழிவறையை நோக்கி நடந்து சென்றார்கள்.
நான் அங்கேயே நின்று, "தேவனே , நீர் ஏன் எல்லாவற்றையும் அழிக்கக்கூடாது? நீர் ஏன் இதை பூமிக்கு கீழ் அமிழ்த்துவிடக் கூடாது?" என்று சொன்னேன். தொடர்ந்து, "ஓ, என்னுடைய சின்ன சாராவும், ரெபேக்காவும் இப்படிப்பட்ட காரியங்களுக்கு கீழாகத்தான் வளர வேண்டியிருக்கிறதா? ஓ, தேவனே, உம்முடைய மகா பரிசுத்தத்திலே நீர் எப்படி இப்படிப்பட்டதான காரியத்தையெல்லாம் பார்த்து, சகித்து, நிலநடுக்கத்தை அனுப்பி மூழ்கடிக்காமலிருக்கிறீர்" என்றேன்.
நான் அங்கேயே நின்று அந்த ஸ்திரீயை நியாயந்தீர்த்துக் கொண்டிருந்தேன். பின்பு அப்படியாக கதவின் பின்பக்கமாக நகர்ந்து சென்றேன். அப்படியே கதவிற்கு பின்னால் நகர்ந்து சென்றபோது தேவ ஆவியானவர் என்னிடம் வருவதை உணர்ந்தேன்.
36 அப்பொழுது ஏதோ ஒன்று சுழன்று கொண்டிருப்பதை போன்று கண்டேன். அது தரிசனமாய் இருந்தது. அதிலே இந்த உலகம் சுற்றிக் கொண்டேயிருந்தது. அதைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருக்கும்போது இந்த உலகத்தைச் சுற்றிலும் இரத்தாம்பர சிவப்பு கீற்றுகள் இருந்தன. பின்னர் நான் உலகத்திற்குள்ளாக சற்று பார்த்தபோது, அங்கே என்னையே ஒரு சிறு பையனாகப் பார்த்தேன். நான் செய்யக் கூடாத காரியங்களையெல்லாம் செய்து கொண்டிருந்தேன். இதுபோன்ற காரியங்களை அல்ல, ஆனால் அதுவும் பாவம்தான். நான் எப்பொழுதெல்லாம் அப்படி செய்கிறேனோ அப்பொழுதெல்லாம் ஒரு பெரிய கருப்பு நிழல் பரலோகத்தை நோக்கி செல்வதைக் கண்டேன். அதினிமித்தமாக தேவன் அந்த நிமிடத்திலேயே என்னைக் கொன்று போட்டிருக்க முடியும்.
ஆனால் அதன்பின், தேவனுக்கும் எனக்கும் மத்தியிலே அந்த பரிபூரணமான பலி நிற்பதை கண்டேன். அவருடைய தலையிலே முற்களுடனும், முகத்தில் எச்சில் வழிந்த நிலையோடும் நின்று கொண்டிருந்தார். எப்பொழுதெல்லாம் என்னுடைய பாவம் தேவனிடத்திற்கு நேராக போகிறதோ, அப்பொழுதெல்லாம் அவர் காரில் உள்ள பம்பர் போல எட்டிப் பிடித்தார். அவர் மரணத்திலிருந்து என்னை பாதுகாத்துக் கொண்டிருந்தார். ஆகவே நான் எப்பொழுதெல்லாம் பாவம் செய்தேனோ அப்பொழுதெல்லாம் தேவனால் என்னை கொன்று போட்டிருக்க முடியும். ஏனெனில் அவருடைய பரிசுத்தம் அதை கோருகிறது. அவருடைய நியாயப்பிரமாணம் அதைக்கோருகிறது. ஒவ்வொரு முறையும் நீங்களோ அல்லது நானோ இப்படி ஏதாவது காரியத்தைச் செய்யும்போது, இயேசு கிறிஸ்துவின் இரத்தம் காரில் உள்ள பம்பர் போல செயல்படுகிறது. அப்பொழுது தான் அந்த இரத்தாம்பர கீற்றுகளுடைய அர்த்தம் என்னவென்று கண்டுகொண்டேன். பின்னர், அவருடைய இரத்தம்தான் இன்னும் பூமியை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் கண்டுகொண்டேன்.
37 நான் அங்கே நின்று அவரை கவனித்துக் கொண்டே அவருக்கு அருகில் சென்றேன். அப்பொழுது அவர், "பிதாவே, இவனை மன்னியும், தான் என்ன செய்கிறானென்று அறியாதிருக்கிறான்" என்று கூறுவதை கேட்டேன். அதன்பின், நான் கீழே பார்க்கும்போது அங்கே ஒரு புத்தகம் வைக்கப்பட்டிருந்தது. அவருக்கு பக்கத்திலே குறிப்பெடுக்கிறதான தேவதூதன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். நான் ஒவ்வொரு முறை செய்யும் பாவமும் அது அந்த புத்தகத்திலே பதிவிடப்பட்டிருந்தது. என்னுடைய பெயரும் அதிலே எழுதப்பட்டிருந்தது. பின்னர் நான் இப்படியாக, ஓ, ஓர் நாளிலே இந்த இரத்த கீற்றுகள் நீக்கப்படும்போது நான் தேவனுடைய சமூகத்தில் என்னுடைய பாவ ஜீவியத்தோடு நிற்க வேண்டிய நிலை உண்டாகுமே என்று உணர்ந்து கொண்டேன். ஆனால், அவருடைய இரக்கத்தினாலே என்னுடைய நியாயத்தீர்ப்பை நிறுத்தி வைத்திருக்கிறார் என்பதைக் கண்டேன்.
ஆகையால், நான் அவரிடம் தாழ்மையோடு கடந்து சென்று, என்னுடைய முழங்கால் படியிட்டு, "ஓ இயேசுவே, தேவ குமாரனே, உம்முடைய சமூகத்திற்கு வர நான் தகுதி இல்லாதவன். ஆனாலும் நான் செய்த காரியங்களை எனக்குத் தயவாய் மன்னிப்பீரா?" என்று சொன்னேன்.
அப்பொழுது அவர் தமது பக்கமாக கைகளை வைத்து, அந்த பழைய புத்தகத்தை எடுத்து அதில் "மன்னிக்கப்பட்டாய்" என்று எழுதி, அவர் பின்னாக தூக்கி எறிந்துவிட்டார். என்னுடைய பாவம் எல்லாம் ஒழிந்து போயிற்று. பிறகு அவர் என் முகத்தை உக்கிரமாய் பார்த்து, "இப்பொழுது நான் உன்னை மன்னித்து விட்டேன் ஆனால் நீயோ அவளை நியாயந்தீர்க்க விரும்புகிறாய்" என்றார். அப்பொழுது தான் அதன் அர்த்தம் என்ன என்று புரிந்தது.
38 நான் அந்த தரிசனத்திலிருந்து வெளியே வந்த போது, அவளிடம் நேராக நடந்து சென்று, "எப்படி இருக்கிறீர்கள்?" என்றேன்.
அவள் குடித்துக்கொண்டு அப்படியே என்னை நிமிர்ந்து பார்த்து, "ஓ ஹலோ" என்றாள்.
நான் அவளிடம், "நான் இங்கு உட்காரலாமா?" என்றேன்.
அதற்கு அவள் "எனக்கு துணை இருக்கிறது" என்றாள்.
அதற்கு நான், "இல்லை நான் அந்த விதானத்தில் கேட்கவில்லை. உங்களிடம் சற்று பேச விரும்புகிறேன் ஸ்திரீயே" என்றேன்.
"சரி உட்காருங்கள்" என்றாள்.
நான் தொடர்ந்து, ''ஸ்திரீயே, சில நிமிடங்களுக்கு முன்பாக, நான் அந்த கதவின் பின்னாக நின்றுகொண்டிருக்கும் போது…" என்று நடந்த காரியங்களைக் குறித்து விவரிக்க ஆரம்பித்தேன். அப்பொழுது நான் அவளைப் பார்க்கையில், கன்னங்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாய் வழிந்தோட துவங்கியது. அவள் இவ்விதமாய்… நான் மீண்டுமாய், ''ஸ்திரீயே, நீ இந்த காரியங்களை விருப்பத்துடன் செய்யவில்லை. இயேசு மரித்து அவருடைய இரத்தத்தினால் தேவனுடைய நியாயத்தீர்ப்பானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நீ இந்த காரியங்களைச் செய்ய வேண்டும் என்று செய்யவில்லை" என்றேன்.
அதற்கு அவள், "இல்லை ஐயா, என்னுடைய தகப்பனார் சபையிலே டீக்கனாக இருந்தார். நான் ஒரு கிறிஸ்தவ வீட்டிலே வளர்க்கப்பட்டேன். நானும் என் கணவனும் சபையின் துவக்கத்திலிருந்தே உறுப்பினராக இருந்து கிறிஸ்தவ ஜீவியத்தை ஜீவித்து வந்தோம்" என்று கூறினாள். அதன் பிறகு தனது கணவர் மரித்த பின்பு … அவர்களுக்கு இரண்டுமகள்கள் இருந்தார்களாம். அவர்கள் அப்படியாய் வழி விலகிப்போனார்கள். பின்னர் தன் மகள்கள் அவளை எப்படி விட்டுவிட்டு சென்றார்கள் என்பதைப் பற்றியும் கூறினாள். அதனால் அவள் இந்த ஜீவியமே வேண்டாம் என்று தூக்கி எறிந்து, இனி எந்த ஒரு நம்பிக்கையும் இல்லை என்று எண்ணிக்கொண்டிருந்தாள்.
ஆனால் நான் அவளிடத்திலே சொன்னேன், "தேவனே, ''இரக்கமாயிரும்", "அவர் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்" என்றேன்.
அதற்கு அவள், "நீர் அங்கே இருக்கிற சங்கை பிரான்ஹாமா?" என்றாள்.
அதற்கு நான், "ஆம்" என்றேன்.
அதற்கு அவள், "ஐயோ, நான் இந்த நிதானத்திலே இங்கு இப்படி உட்கார்ந்திருப்பதை குறித்து வெட்கப்படுகிறேன். எனக்கு இன்னொரு வாய்ப்பு இருக்கிறதென்று நினைக்கிறீரா?" என்றாள்.
அதற்கு நான், "ஸ்திரீயே, இயேசு தமது கைகளை விரித்து நீ வரும்படி உனக்காக காத்துக் கொண்டிருக்கிறார்" என்றேன். அப்பொழுது மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக கிளம்ப ஆரம்பித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது நான் அவளிடம், "நீங்கள் என்னுடன் இவ்விடம் நடந்து வருவீரா?" என்றேன்.
அவள், "நிச்சயமாக, ஐயா" என்றாள்.
நான் அவளுடைய கரத்தைப் பிடித்துக்கொண்டு, "நீங்கள் கிட்டத்தட்ட என்னுடைய தாயின் வயதுடையவர்களாய் இருக்கிறீர்கள். என்னுடன் இங்கே தரையில் முழங்கால் படியிடுவீரா?" என்றேன். சரியாக அந்த தரையிலே அங்கேயே ஜெபிக்க ஆரம்பித்தோம், அந்த மதிய வேளையிலே ஒரு பண்டைய கால கூடுகையாக அது இருந்தது. தேவன் அவருடைய கிருபையினாலே அந்த ஸ்திரீயை இரட்சித்தார். பின்னர் அவள் நன்றாக உடை உடுத்தி, கூட்டத்திற்கு கடந்து வந்தாள். எனக்கு தெரிந்த மாத்திரத்தில் இன்றிரவில் அவள் ஒரு கிறிஸ்தவ ஜீவியத்தை வாழ்ந்து வருகிறாள்.
39 அது எதைக் காட்டுகிறது? ஓ, தேவன் பரிபூரணத்தைக் கோருகிறார் என்று காட்டுகிறது. அவர் உன்னுடைய மனந்திரும்புதலைக் கோருகிறார். அவருக்கு நீ உத்தமமாக இருக்கக் கோருகிறார். இதோ இன்றிரவு அவர் கண்னோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறார். நீ எவ்வளவு பாவம் செய்திருக்கிறாய் என்பது ஒரு பொறுட்டல்ல, அது ஒருவேளை சிறியதாயிருந்தாலும் அல்லது எவ்வளவு பெரியதாய் இருந்தாலும், நீ இன்னும் பாவியாகவே இருக்கிறாய். நீ மறுபடியும் உள்ளே பிரவேசிப்பதற்கு இயேசு கிறிஸ்துவை தவிர வேறு எந்த வழியுமில்லை. ஏனெனில் அவரே தேவனுடைய சரியான பலியாக இருக்கிறார். அவருக்குள்ளாக நீங்கள் என்றென்றுமாய் பரிபூரணப்பட்டிருக்கிறீர்கள். அதை குறித்து சிந்தியுங்கள். இது ஏதோ நீ செய்து நடைபெறுகிற காரியம் அல்ல. ஏதோ நீ ஒரு புதிய பக்கத்தை திருப்புகிறதினால் அல்ல. அல்லது புதிய வாழ்க்கையை நீ துவங்குகிறதினால் அல்ல. இது உன்னுடைய தவறுகளை அறிக்கை செய்ததின் பேரிலும் உனக்காக தேவன் அருளிய கிருபையின் பேரிலுமே சார்ந்துள்ளது. அதுதான் உன்னை பரிபூரணத்தண்டை கொண்டு வரும். அப்பொழுது மாத்திரமே நீ இயேசு கிறிஸ்துவிற்குள் பரிபூரணப்பட்டவனாயிருப்பாய்.
40 என்னுடைய நண்பனே, இன்றிரவு, இந்த சம்பவத்தை கேட்ட பிறகு இப்பொழுது நாம் ஒரு தீர்மானத்தை எடுக்கக் கூடிய மிகவும் இக்கட்டான நேரத்தில் சரியாக இருக்கிறோம் என்று நம்புகிறேன். ஒருவேளை இதற்கு முன் நீங்கள் இதை கேட்டிராமல் இருக்கலாம். ஆனால் இப்பொழுது நீங்கள் வரும்போது இருந்த நபராகவே இந்த கதவுகளின் வழியாய் திரும்பவும் செல்ல முடியாது. ஒன்று தேறினவர்களாகப் போக வேண்டும் அல்லது முன்னிலையைக் காட்டிலும் மோசமான நிலையைக் கொண்டவர்களாய் போக வேண்டியவர்களாய் இருக்கிறீர்கள்.
இப்பொழுது நம்முடைய தலைகளை தாழ்த்தியிருக்கும் இவ்வேளையில் நீங்கள் அதைக் குறித்து ஊக்கமாக சிந்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இன்றிரவு உன்னுடைய ஆத்துமாவைக் குறித்து என்ன? இயேசு கிறிஸ்து உனக்காக மரித்தாரே
41 நீங்கள் சொல்லலாம், "சகோதரன் பிரான்ஹாம், என்னால் எப்பொழுது இந்த குடி பழக்கத்தையும் புகைபிடித்தலையும் விட்டு காரியங்களை எப்பொழுது சரி செய்ய முடியுமோ அப்பொழுது நான் அதைச் செய்வேன்", என்று கூறலாம். ஓ, அப்படியிருந்தால், அது ஒருபோதும் சரி ஆகாது. உன்னால் அதை செய்யவே முடியாது. நீ ஏன் இருக்கிற வண்ணமாகவே வரக்கூடாது?" விசுவாசத்தினாலே அந்த ஊற்றண்டை போங்கள், அங்கே தான் உங்களுடைய காயத்திற்கான மருந்து இருக்கிறது. பிறகு, நீ மரிக்கு மட்டுமாக, அந்த மீட்பின் அன்பு உன்னுடைய ஜீவனின் பொருளாய் இருக்கும்.
நீ இதற்கு பதிலாய் ஏன் வேறொன்றை எடுக்க வேண்டும்? நீ ஏன் உன் சபையின் மூலம் இதை அடைய முயற்சிக்க வேண்டும்? நீ குடிப்பழக்கத்தையும் பொய் பேசும் காரியங்களை நிறுத்துவது போன்ற காரியங்கள் மூலமாய் ஏன் அடைய முயற்சிக்க வேண்டும்? ஓ, பரிபூரணத்தின் வழியாய் வாருங்கள், ''ஏனெனில் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே அவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தயிருக்கிறார்"
"நான் எப்படி பரிசுத்தமாக்கப்படுவது?"
42 உங்களுடைய பாவத்தை இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் பிரசன்னத்திலே அறிக்கையிடுங்கள். அப்பொழுது அந்த இரத்தத்திலிருந்து வருகிற ஜீவன் ஆராதனை செய்கிறவனிடத்திலே திரும்பி வந்து அவனுக்கு இருக்கும் இந்த உலகத்தின் காரியங்கள் மேலுள்ள வாஞ்சைகளிலிருந்து அவனை பரிசுத்தப்படுத்தும். என்னத்தினாலெனில், அவர் அந்த போதுமான பலியினாலே நம்மை பரிசுத்தப்படுத்தியிருக்கிறார். ஒரே ஆவியினாலே நாம் எல்லோரும் ஒரே சரீரத்திற்குள்ளாய் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம். இப்பொழுது, கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை. நீங்கள் ஆவியின் பிரகாரம் நடக்க முயற்சித்து இன்னுமாக மாம்சத்திற்கு இச்சையுடையவர்களாயிருந்தால், அந்த பலியானது போதுமான அளவு உங்களுக்கு பூசப்படவில்லை. ஆனால் ஆராதனை செய்கிறவன் ஒருமுறை தூய்மையானால் அவனுக்கு அதற்கு மேல் ஒருபோதும் பாவத்தின் வாஞ்சையிராது.
43 அதுதான் கல்வாரி. அது பூக்களை விற்கிறதான இடம் அல்ல. அல்லது இது அது என்று மற்ற காரியங்களை செய்யக் கூடிய இடம் அல்ல. அது, தேவனையும் மனிதனையும் ஒப்புரவாக்கின் இடம். அதுதானே சமாதானமும் முழுமையான பாதுகாப்பும் மனுக்குலத்திற்கு கொண்டு வரப்பட்ட இடம். பாவியாகிய என் நண்பனே, இன்றிரவு இந்த இரத்தத்தை உன் சொந்த ஆத்துமாவிலே பூசி பரிசுத்த ஆவியானவர் தம்முடைய மகத்தான பலியினாலே உன்னை பரிசுத்தப்படுத்தும்படி விசுவாசத்துடன் என்னோடு கூட கல்வாரிக்கு வருவாயா?
நாம் ஜெபிப்பதற்கு முன்பாக நீ உன்னுடைய கரத்தை தேவனுக்கு நேராக உயர்த்தி, "தேவனே, என்மேல் இரக்கமாயிரும். நான் என்னுடைய பாவங்கள் எல்லாவற்றையும் இந்த புனித வெள்ளியின் இரவிலே அறிக்கையிடுகிறேன். கிறிஸ்து எனக்காக பட்ட பெரும் பாடுகளை நான் மெச்சிக் கொள்கிறேன். நான் என்னுடைய சொந்த விருப்பங்களை, என்னுடைய சொந்த நோக்கங்களையும் மற்றும் எல்லா காரியங்களையும் இது முதற்கொண்டு உம்மை பின்பற்றுவதற்காக முழுமையாய் ஒப்படைக்கிறேன்" என்று சொல்வீர்களாக. உங்களுடைய கரத்தை உயர்த்தி, ''சகோதரன் பிரான்ஹாம் ஜெபத்திலே என்னை நினைவு கூறும். இதுவே என்னுடைய இருதயத்தின் தீர்மானம்" என்று கூறுவீர்களா? இந்த மகத்தான இரவிலே, யாராவது அப்படி இருக்கிறீர்களா? நாங்கள் சற்று நேரம் காத்து இருக்கிறோம். இதோ என்னுடைய வலது பக்கத்திலே ஒருவர், அதோ அந்த பக்கத்திலும் ஒருவர் இருக்கிறார். நீங்கள் உங்களுடைய பாவங்களை குறித்து வெட்கப்படுகிறீர்களா? நீங்கள் செய்த காரியங்களைக் குறித்து வெட்கப்படுகிறீர்களா?
44 இன்றிரவு இந்த உலகம் வீரர்களை தேடிக்கொண்டிருக்கிறது. தத்ரூபமாக சொல்லப்போனால், அது வீரர்களைக் கொண்டிருக்கிறது.
ஒருநாளிலே சுவிட்சர்லாந்து தேசத்திற்கு பெரும் ஆபத்து நேரிட்டது. அவர்களுடைய பொருளாதாரங்களை பாதுகாக்கும்படி அந்த சிறிய சுவிஸ் கூட்டத்தினர் களத்திலே ஒன்று கூடினார்கள். அவர்களை எதிர்கொள்ளும் படையானது அவர்கள் சண்டையிட முடியாத அளவிற்கு அதிக வலிமை வாய்ந்ததாயிருந்தது. அவர்கள் எல்லோரும் நன்கு பயிற்சி பெற்றவர்களாயும், பெரிய ஈட்டிகளையும் கேடகங்களையும் கொண்டிருந்தார்கள். சுவிஸ் மக்கள் அந்த முயற்சியை கைவிடுவதைத் தவிர வேறு வழி இல்லை. அவர்களுக்கு பின்னால் இருந்த மலைதான் அவர்களுக்கு ஆதரவாக இருந்தது. அப்பொழுது ஒரு வீரன் முன் வந்தான். யாரோ. ஒருவர் மரித்தாக வேண்டும். அவர்கள் மாத்திரம் அந்த போரில் தோற்பார்களென்றால்…
45 அவர்களிடம் போரிடுவதற்கு பழைய அரிவாள்களும், குச்சிகளும், கற்களுமேயன்றி வேறொன்றுமில்லை. ஆனால் எதிர் கொண்டு வருகிற சேனையைப் பார்க்கும்போது ஒரு பெரியமதில் சுவரைப் போலக் காணப்பட்டது. அவர்கள் மாத்திரம் தோற்பார்கள் என்றால், அவர்களுடைய மனைவிகளும் வாலிப பெண்களும் கெடுக்கப்படுவார்கள். குழந்தைகள் கொன்று போடப்படுவார்கள், அவர்களுடைய தலைகள் பிளக்கப்படும், அவர்களின் வீடுகள் ஒன்றுமில்லாமல் போகும், எல்லாமுமே இழக்கப்படும்.
அப்பொழுது ''அர்னால்டு வான் விண்கல்ரெய்டு" என்ற பெயருடைய ஒருவன் இருந்தான். அவனுடைய பெயர் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்கப்பட்டுவிட்டது. அவன் முன்வந்து, "சுவிட்சர்லாந்து மக்களே, இந்த நாளிலே சுவிட்சர்லாந்திற்காக என்னுடைய உயிரைத்தருகிறேன்" என்றான். அவன் தொடர்ந்து, "இதோ இந்த மலையின் அந்த பக்கத்திலே ஒரு சிறிய வெள்ளை வீடு இருக்கிறது. அங்கே எனக்காக என் மனைவியும் மூன்று பிள்ளைகளும் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இனி என்னை ஒருபோதும் பார்க்கப்போவதில்லை, ஏனென்றால் இந்த நாளிலே சுவிட்சர்லாந்திற்காக என்னுடைய ஜீவனைக் கொடுக்கப் போகிறேன்" என்றான்.
அதற்கு அவர்கள், "என்ன செய்யப் போகிறாய் அர்னால்டு வான் விண்கல் ரெய்டு?" என்று கேட்டார்கள்.
அதற்கு அவன், "என்னைப் பின்பற்றி வாருங்கள், உங்களிடம் இருக்கிறதை வைத்து, உங்களால் முடிந்த மட்டுமாக இயன்றதைச் செய்யுங்கள்'' என்றான்.
46 அதன்பிறகு அவன் அந்த படையை நோக்கிப் பார்த்து, எங்கே அதிகமான ஈட்டி இருக்கிற இடத்தைக் கண்டு கொண்டான். பிறகு அந்த பெரிய மதில் போல் இருந்த ஈட்டி குவியலை நோக்கி தன் கரங்களை உயர்த்தியவாறு, "விடுதலைக்கு வழி விடுங்கள், விடுதலைக்கு வழிவிடுங்கள்" என்று கத்திக்கொண்டே ஓடினான். நூறு ஈட்டிகள் அவனைத் தாக்க அவன் பக்கமாக திரும்பின. அப்போது அவன் தன் கைகளை விரித்து அவை அனைத்தையும் தன் மார்போடு சேர்த்து பிடித்துக்கொண்டான். அவைகளினால் குத்தப்பட்டு கீழே விழுந்து இறந்தான். அவனுடைய வீர சாகசம்தான், அவனை குச்சிகளுடனும் தடிகளுடனும் பின் தொடர்ந்து வந்த சுவிஸ் மக்களுக்கு வழியை உண்டு பண்ணி அவர்களை அடித்து தங்களுடைய தேசத்தை விட்டு விரட்டினது. அன்றைய தினத்திலிருந்து இன்று மட்டுமாக ஒரு போரையும் கொண்டிருக்கவில்லை.
47 நீங்கள் சுவிட்சர்லாந்திலே அர்னால்டு வான் வின்கெல்ரெய்டு என்ற பெயரை விசாரிப்பீர்களானால் அவர்கள் கண்ணங்களில் கண்ணீர் வடிந்தோடுவதை பார்ப்பீர்கள். ஏன் தெரியுமா? அவன் அவர்களுடைய நாட்டை காப்பாற்றினான். அது நிச்சயமாகவே ஒரு மகத்தான வீரச்செயல் தான். அதை பூமியிலே வேறெந்த காரியத்தோடும் ஒப்பிட முடியாது. அதைக் காட்டிலும் வேறெந்த காரியமும் மேலானது இல்லை என்று கருதப்படுகிறது.
ஆனால், ஓ, இந்த காரியத்தை ஒரு நாளிலே நடந்த காரியத்தோடு ஒப்பிட்டு பார்ப்போமானால் இது மிகவும் சிறிய காரியம்! ஆதாமின் வம்சத்தை, பிசாசுகள் எல்லா பக்கமும் தாக்கின. தீர்க்கதரிசிகள் தோற்றுப் போனார்கள். நியாய பிரமாணம் தோற்றுப்போனது. செம்மறி ஆடுகள் மற்றும் காளைகளின் பலிகள் தோற்றுப்போனது. மனிதனின் சுபாவம் தோற்று போனது. எல்லாமே தோற்றுப்போயிருந்தது. எண்ணிக்கையில் பொருந்தாத அளவு பிசாசுகள், மூட நம்பிக்கைகள், நோய்கள், மற்றும் வியாதிகள் யாவும் பெருகி ஆதாமின் சிறிய வம்சத்தை தோற்கடித்தன. அப்பொழுது பரத்திலிருந்து ஒருவர் வெளியே அடியெடுத்து வைத்து, "இன்றைய நாளில், நான் ஆதாமின் வம்சத்திற்காக மரிப்பேன்" என்றார். அப்படியாய் பூமிக்கு வந்து மாம்சமானார். எங்கே பயங்கரமான ஈட்டிகள் இருக்கிறதோ அதனுடைய மையத்தை நோக்கிப்பார்த்தார். இருந்ததிலேயே மரணம் மனிதனுடைய மிகவும் பயங்கரமான காரியமாக இருந்தது அப்போது அவர் மரணத்தை தன்னுடைய மார்புக்குள் எடுத்துக்கொண்டார். கல்வாரியிலே பலியை கிரையமாகச் செலுத்தி, "விடுதலைக்கு வழி விடுங்கள்" என்று உரக்க சத்தமிட்டார்.
48 மேலும் அவருடைய சபையை நோக்கி, "நான் உங்களுக்காக விட்டுச் சென்ற என்னுடைய இரத்தத்தையும் என்னுடைய ஆவியையும் மற்றும் நீங்கள் கொண்டிருக்கிற யாவையுங் கொண்டு போரிடுங்கள்" என்று உரக்க சத்தமிடுகிறார். நண்பனே, இன்றிரவு நம்மால் அதைக்கொண்டு மேற்கொள்ள முடியும். உங்களிடம் இருந்து பிசாசை துரத்தியடிக்க முடியும். உங்கள் ஜீவியத்திலிக்கிற எல்லா பழைய எதிரியை கிறிஸ்துவின் இரத்தத்தாலும் ஆவியினாலும் துரத்தி அவருடைய பிரசன்னத்திலே பரிபூரணமானவர்களாக நிற்க முடியும். கிறிஸ்துவே நமக்கு வழியை உண்டு பண்ணினார்.
உங்களால் கூடுமான மட்டும் உங்களுடைய கரத்தை அவரிடம் உயர்த்தி, ''என்னை மன்னியும்" என்று கேட்க முடியுமா? கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக சகோதரனே. இன்னும் யாராவது, "தேவனே, என்மேல் இரக்கமாயிரும் நான் என்னுடைய தவறுதல்களை அறிக்கையிடுகிறேன்" என்று சொல்லுகிறவர்கள் இருக்கிறீர்களா?
இங்கே வெதுவெதுப்பான சபை அங்கத்தினர் யாரேனும் ஒருவர், ஒவ்வொரு நாளும் சபைக்குச் சென்று, உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவாய் பயபக்தியுள்ளவர்களை போல் இருக்க முயற்சி செய்தும், கோபமும் வேற்றுமையும் மற்றும் சுயநலமும் போன்ற பழக்கங்கள் உங்களை இழுத்துப் பிடித்து நீங்கள் வெற்றியடைய கூடாதபடி செய்கிறது என்று சொல்லுகிறவர்கள் இருக்கிறீர்களா? இந்தக் காரியங்கள் எல்லாவற்றிலுமிருந்து, இன்றிரவு இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்பட விரும்புகிறீரா? ''ஏனென்றால் ஆராதிக்கிறவர் ஒருமுறை சுத்தமாக்கப்பட்ட பின்பு அவருக்கு அந்த பாவத்தைக் குறித்ததான மனசாட்சி இராது". சபை அங்கத்தினரே, நீ உன் கரத்தை உயர்த்த விரும்புகிறாயா? ஸ்திரீயே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்கள் கரத்தை உயர்த்தி, ''சகோதரன் பிரான்ஹாம் என்னை ஜெபத்தில் நினைவு கூறுங்கள்" என்று சொல்வீர்களா, ஸ்திரீயே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது சரிதான். அப்படி செய்வதே உத்தமமான காரியம். அதோ பின்னாக இருப்பவரே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
49 இன்னும் யாராவது ஒருவர் உங்கள் கரத்தை உயர்த்தி, ''ஆண்டவரே, என்மேல் இரக்கமாயிரும். நான் ஒரு கிறிஸ்தவன் என்று சொல்லிக் கொள்கிறேன். ஆனாலும் அவ்விதமாக ஜீவிப்பதில்லை என்பதை அறிவேன். நான் அப்படி ஜீவிக்கிறதில்லை என்று எனக்கு தெரியும். உண்மையிலே, என்னுடைய இருதயத்தில் நான் உம்மோடு சரியாக இல்லை என்பதை அறிந்திருக்கிறேன். ஆனால் நான் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களில் ஒருவனாக இருக்க விரும்புகிறேன். என்னுடைய உள்ளத்திலோ அந்தபடியாக உணர்கிறேன். ஆனாலும் என்னை சுலபமாய் சுற்றி வளைக்கிற என்னுடைய சுமைகளை ஒருபோதும் புறம்பே தள்ளினதில்லை. இதோ இன்றிரவு அவையெல்லாவற்றையும் நான் புறம்பே தள்ள விரும்புகிறேன். அதை தேவனின் கிருபையினாலே செய்வேன். எனக்காக ஜெபியுங்கள்" என்று சொல்வீர்களா? அப்படி சொல்லுகிறவர்கள் உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா? ஸ்திரீயே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இன்னும் யாராவது இருக்கிறீர்களா. இன்னும் சற்று நேரம் நாங்கள் காத்துக் கொண்டிருக்கப் போகிறோம்.
நாம் அமைதியாய் காத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், எல்லோரும் உங்கள் தலையை ஜெபத்திலே தாழ்த்தி மெல்லமாக இந்த பாடலை பாடுங்கள்.
இம்மானுவேலின் நரம்பிலிருந்து எடுக்கப்பட்ட,
இரத்தத்தினால் உண்டான ஊற்று ஒன்று உண்டு,
அவருடைய இரத்தத்திற்குள் மூழ்கின பாவிகளுடைய,
குற்ற கறைகள் யாவும் நீங்கிற்று…
நீ இப்பொழுது இன்னொரு விசையாக அதைக் குறித்து சிந்தித்து பார்க்க மாட்டாயா? அதை அப்படியே கைகழுவிவிடலாம் என்று நினைக்காதே. கிறிஸ்து உன் கரத்தில் இருக்கிறார்.
பிலாத்து இவ்விதமான காலை வேளையிலே, ஆறு மணியளவில் அதைச் செய்தான். ஆனால் அவனுடைய கரங்கள் இன்னும் இரத்தமாகவே (அந்த குற்றத்திற்குக் குற்றவாளியாகவே இருக்கிறார்) இருக்கிறது. அவனுக்கு என்ன நேர்ந்தது என்று உங்களுக்கு தெரியுமா. அநேக ஆண்டுகளுக்குப் பிறகு அவன் சுவிட்சர்லாந்து சென்று தன்னுடைய சிந்தையை இழந்து, ஒரு தண்ணீர் குளத்திலே மூழ்கி மரித்துப் போனான். இன்று காலையிலே, சுவிட்சர்லாந்திலே, அந்த குளத்தின் அடிதளத்திலிருந்து பெரிய ஓட்டை வழியாக நீல நிறத் தண்ணீர் கொப்பளித்துக் கொண்டு மேலே எழும்புகிற காட்சியை பார்க்கும்படி நூற்றுக்கணக்கான மக்கள் வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் அப்படி செய்கிறார்கள். அதற்கு பின்னாக இருக்கும் பழமொழி என்னவென்றால், தேவன் அவன் கரங்களை சுத்தம் செய்ய தண்ணீர் தர மறுத்துவிட்டார் என்பதாக கூறப்படுகின்றது.
50 சகோதரனே, நீ எத்தனை முறை ஞானஸ்நானம் எடுத்திருந்தாலும் சரி, அல்லது வேறு எந்த காரியத்தைச் செய்ய முயற்சித்திருந்தாலும் சரி, கிறிஸ்துவின் இரத்தத்தைத் தவிர வேறு எதுவுமே உன்னுடைய கரங்களை சுத்தம் செய்ய முடியாது. தேவன் அதை மறுத்துவிட்டார். அந்த நீலநிறத் தண்ணீர் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் ஆன பிறகும் இன்னும் கொப்பளித்துக் கொண்டே இருக்கிறது. தேவன் அதை மறுத்துவிட்டார். உன்னுடைய சுய நீதி உன்னுடைய பாவத்தை சுத்திகரிக்க முடியாது. இயேசுவின் இரத்தத்தைத் தவிர வேறு எதுவும் சுத்திகரிக்காது, அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பாருங்கள். நாம் சற்று நேரத்தில் ஜெபிக்கப்போகிறோம்.
நான், இன்றிரவிலே, ஒன்றைக் கேட்க முடியுமா என்று வியக்கிறேன். அவர் அன்று பிலாத்துவின் நியாயத்தீர்ப்பின் கூட்டத்திலே இவ்விதமான காலை வேளையிலே நின்ற போது, ''என்னுடைய இராஜ்ஜியம் இந்த உலகத்தினுடையதாயிருந்தால், நான் என்னுடைய பிதாவினிடத்தில் பேசினவுடனே அவர் உடனடியாக பண்ணிரெண்டு லேகியோன் தூதர்களை எனக்காக அனுப்புவார்", என்றார். அதில் அவர்களில் ஒருவர் போதும் இந்த உலகத்தை அழிக்க ''நான் அவரிடத்தில் பேசினவுடனே, எல்லாமும் நிவிர்த்தியாகும்படி உடனடியாக பண்ணிரெண்டு லேகியோன் தூதர்கள் என்னுடைய கட்டளைக்கு கீழ் இருந்திருப்பார்கள். அதை அவரால் செய்திருக்க முடியும்", என்றார். ஆனால் அவரோ உன்னுடைய மரணத்தையும் பாவத்தையும் ஏற்றுக்கொள்வதற்காக மிகத் தாழ்மையோடும் பணிவோடும் நின்றார்.
51 இன்றிரவு அந்த பலிக்காக நன்றியுள்ளவனாயிருப்பீரா? அது தேவை என்று சொல்லுகிறவர்களும் மற்றும் தேவனுடைய ஆசீர்வாதங்கள் தேவை என்று சொல்லுகிறவர்களும் இந்த ஜெபத்தின் நேரத்திலே நீங்கள் எழும்பி நிற்பீர்களா? யாரெல்லாம் இந்த ஜெபத்திலே நினைவு கூறப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அப்படியே எழுந்து நின்று, "தேவனே என்மேல் இரக்கமாயிரும். நான் குற்றமுள்ளவனாய் இருக்கிறேன். நான் தவறான காரியங்களைச் செய்திருக்கிறேன். இப்பொழுதே கிறிஸ்து இயேசுவின் மூலமாய் என்னுடைய மன்னிப்பை ஏற்றுக் கொள்ள விரும்புகிறேன்" என்று கூறுங்கள். ஜெபத்திற்காக சரியாக இந்த நேரத்திலே எழும்பி நிற்பீர்களா? வாலிப சீமாட்டியே கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக, அது தான் தைரியம், அப்படியே நின்று கொண்டிரு.
52 கையை உயர்த்தினவர்கள் நீங்கள் எழும்பி நிற்கிறதற்கு போதுமான அளவு உத்தமம் இல்லை என்று சொல்லுகிறீர்களா? இந்த சுவிசேஷம் உங்களுக்கு எப்பொழுதாவது ஏதேனும் நன்மை செய்திருக்கிறதா? ஓ, தேவனோடும் சபையோடும் அப்பேற்பட்ட விளையாட்டுகள் நடக்கின்றன இதோ காலம் சமீபமாயிருக்கிறது. வருகிற ஓர் நாளிலே இந்த சுற்று வட்டாரத்தில் ஏதாவது ஒரு இடத்தில் அணுகுண்டு தாக்கப்போகிறது, ஒரு வேளை இங்கேயிருக்கிற பெரிய மின்உற்பத்தி தொழிற்சாலையிலே விழக்கூடும். அப்போது அதைப்பற்றி யோசித்துப் பார்ப்பதற்கு ஒரு துளி நொடி கூட இல்லாத அளவிற்கு இருக்கும். அந்நேரத்திலே காலம் மிகவும் தாமதமாயிருக்கும். அது ஒருவேளை அடுத்த ஈஸ்டர் வருகிறதற்கு முன்பாகவே அல்லது இந்த ஈஸ்டர் தினத்தன்றே கூட நடக்கக்கூடும். நீ இப்பொழுது எழும்பி நின்று, "தேவனே, பாவியாகிய என்மேல் கிருபையாயிரும். என்னுடைய பாவத்திற்காக கிறிஸ்து தம்மைத்தாமே பாவ நிவிர்த்தி பலியாக்கினதை இப்பொழுது நான் ஏற்றுக்கொள்கிறேன். அவருடைய கிருபையினாலே, அவருடைய கிருபையினாலே மாத்திரமே நான் தேவனுடைய சந்நிதியிலே தரித்திருக்க விரும்புகிறேன்" என்று கூறவீர்களா? உங்களுடைய தவறுகளை அறிக்கையிடுவீர்களா? எவன் தன்னுடைய பாவங்களை மறைக்கிறானோ அவன் வாழ்வடையமாட்டான். எவன் தன்னுடைய பாவங்களை அறிக்கையிடுகிறானோ அவன் இரக்கம் பெறுவான். அது உங்களைப் பொறுத்ததாய் இருக்கிறது. அவர் உங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார்.
53 இப்பொழுது, எங்களுடைய ஆசீர்வதிக்கப்பட்ட தேவனே, ஒரு சரியான எண்ணாக மூன்று ஆத்துமாக்கள் மனவருத்தத்தோடு நிற்கிறார்கள் ஒரு ஆணும் இரண்டு பெண்ணும் இருக்கிறார்கள்.
ஆண்டவரே, இப்பொழுது கல்வாரியைப் பற்றி நினைத்துப் பார்க்கையில், ஒரு பக்கத்தில் இருந்தவன், "ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்ஜியத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்" என்றான்; மற்றொருவனோ, "நீர் அவர் தானென்றால், ஒரு அற்புதத்தை காணட்டும், உம்மையும் இரட்சித்துக் கொள்ளும், எங்களையும் சிலுவையிலிருந்து மீட்டிடும்" என்றான். இன்னொருவனோ, "தேவனே, இரக்கமாயிரும்" என்றதும், உம்முடைய தலை அப்படியே வலது பக்கமாகத் திரும்பி, "இன்றைக்கு நீ என்னோடு பரதீசியிலிருப்பாய்" என்றீர். ஆனால் மற்றொருவனிடமோ எந்த ஒரு மனந்திரும்புதலும் இல்லாததினால் நீர் மெளனமாய் இருந்தீர்.
பிதாவாகிய தேவனே, "நான் ஜெபிக்கிறேன்" இந்த மூன்று பேர் மாத்திரமே இந்த கட்டிடம் முழுவதிலும் தங்கள் தவறுகளை அறிக்கையிட வேண்டும் என்று உணருகிறார்கள் என நம்புகிறேன். ஆனால் அவர்களோ அந்த முற்றிலும் போதுமான வழியாகிய சிலுவையின் வழியிலே வருகிறார்கள். அவர்களை மன்னித்து ஆசீர்வதியும் ஆண்டவரே. நீர் அவர்களுக்காக பிலாத்துவின் நீதிமன்றத்திலே நின்றது போலவும், சூரியன் அஸ்தமித்து சந்திரன் தன் ஒளியை தர மறுத்து, தேவாலயத்தின் திரை மேலிருந்து கீழாக கிழிந்த போது நீர் பூமிக்கும் வானத்திற்கும் மத்தியிலே நின்றது போலவும் அவர்கள் இன்றைக்கு இங்கே நிற்கிறார்கள். நீர் அவர்களை ஆசீர்வதித்து, அவர்களுக்கு கிருபையளித்து உம்முடைய இரத்தத்தினாலே அவர்களை சுத்திகரிக்க வேண்டுமென நான் ஜெபிக்கிறேன். உம்முடைய பரிசுத்தமாக்கும் வல்லமையினாலே உம்முடைய சொந்த குமாரனாம் இயேசு கிறிஸ்துவின் சரீரத்திற்குள்ளாக அவர்களை ஞானஸ்நானம் பண்ணுவாராக. அப்பொழுது அவர்கள் காலத்திற்கும் நித்தியத்திற்குமாய் பாதுகாக்கப்பட்டிருப்பார்கள். தாங்கள் ஏற்கனவே இதனை சந்தித்து சரியான நிலையில் இருக்கிறோம் என்ற உணர்வோடு உட்கார்ந்திக்கிற மற்றவர்களையும், நீர் ஆசீர்வதியும். இந்த ஆசீர்வாதங்களை நான் கிறிஸ்துவின் நாமத்திலே அவர்களுக்காக ஜெபிக்கிறேன். ஆமென்.
54 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இதோ எழும்பி நின்றவர்களின் அருகாமையில் அமர்ந்திருப்பவர்கள் ஒரு ஐக்கியத்திற்கு அடையாளமாய் அவர்களிடம் சென்று அவர்களோடு கைக்குலுக்கி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக என்று சொல்லுங்கள். அது சரியே.
இந்த ஆராதனை சற்று தாமதமாகிவிட்டது. எத்தனை பேர் கர்த்தராகிய இயேசுவை நேசிக்கிறீர்கள்? உங்கள் கரத்தை உயர்த்துங்கள். இன்றிரவு நம் மத்தியில் இருக்கும் சர்வ வல்லமையை நினைப்பூட்டும்படியாக சற்று மெளனமாக மெள்ளமாக அமைதலோடு, இந்த பாடலை நமக்கு பாடும்படியாக, பாடமுடியுமா என வியக்கிறேன்.
இதோ அந்த சிலுவையிலே என்னுடைய இரட்சகர் மரித்தார்,
என்னுடைய பாவம் கழுவுவதற்காய் அங்கே அழுதேன்;
அங்கே என்னுடைய இருதயத்திலே ^^(உங்கள் கரத்தை அதின் மேலாக வைத்து உங்களுடைய தேவையை சந்தித்த பிறகு),^^
என்னுடைய இருதயத்திற்கு இரத்தம் பூசப்பட்டது;
ஓ, அவர் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக!
நம்முடைய தலைகளை அவருக்கு தாழ்த்தியிருக்க, நாம் மெல்லமாக பாடலாம்.
அந்த சிலுவையிலே என்னுடைய இரட்சகர் மரித்தார்,
என்னுடைய பாவம் கழுவுவதற்காய் அங்கே அழுதேன்;
என்னுடைய இருதயத்திற்கு அங்கே இரத்தம் பூசப்பட்டது;
அவர் நாமத்திற்கே மகிமை உண்டாவதாக!
அவருடைய விலையேறப் பெற்ற நாமத்திற்கே மகிமையுண்டாவதாக!
அவருடைய விலையேறப் பெற்ற நாமத்திற்கே மகிமையுண்டாவதாக!
என்னுடைய இருதயத்திற்கு அங்கே இரத்தம் பூசப்பட்டது;
அவர் நாமத்திற்கே மகிமை!
55 இரட்சிக்கப்பட்டவர்களே, நீங்கள் எழும்பி, இப்பொழுது அமைதி காத்து உங்கள் தலைகள் தாழ்த்தியிருக்கட்டும். உங்கள் கரத்தை மேலே உயர்த்துங்கள்.
ஓ, பாவத்திலிருந்து காப்பாற்றுகிற விலையேறப்பற்ற ஊற்றே!
நான் அதில் நுழைந்ததற்காய் சந்தோஷப்படுகிறேன்;
அங்கே தான் இயேசு என்னை இரட்சித்து, பரிசுத்தமாய் வைத்து காக்கிறார்;
அவர் நாமத்திற்கே மகிமை!
அவருடைய விலையேறப்பெற்ற நாமத்திற்கே மகிமையுண்டாவதாக!
அவருடைய விலையேறப்பெற்ற நாமத்திற்கே மகிமையுண்டாவதாக!
என்னுடைய இருதயத்திற்கு அங்கே இரத்தம் பூசப்பட்டது;
அவர் நாமத்திற்கே மகிமை!
இப்பொழுது உங்கள் கரங்களை இறக்கி, தலையை தாழ்த்தியிருக்க, யாரோ ஒருவர் சற்று நேரம் முன்னர் என்னை அழைத்து அவர்களுடைய சரீரத்திற்காக இன்றிரவு ஜெபத்திலே நினைவு கூறும்படி யாரோ ஒருவர் கேட்டுக் கொண்டது என் நினைவிற்கு வருகிறது. அவர்களால் ஞாயிற்றுக்கிழமை இரவில் நடக்கும் மகத்தான சுகமளிக்கும் ஆராதனையிலே கலந்து கொள்ள இயலவில்லை. அந்த ஜெபத்திலே உங்களையும் நினைவு கூறவேண்டும் என்று விரும்பினவர்கள் இப்பொழுது எழும்பி நிற்பீர்களா?
…என்னுடைய இருதயத்திற்கு அங்கே இரத்தம் பூசப்பட்டது;
அவர் நாமத்திற்கே மகிமை
அவருடைய நாமத்திற்கே…!
56 இப்பொழுது உங்கள் தலைகளை தாழ்த்துங்கள். ''உன்னுடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, உன்னுடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். உனக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் குணமானாய்". அவர் நாமத்திற்கே மகிமை!
இப்பொழுது ஆசிர்வதிக்கப்பட்ட எங்கள் பிதாவே அந்த சிலுவையண்டை நாங்கள் தாழ்மையோடு வருகிறோம், அங்கே தானே கிருபையும் இரக்கமும் என்னை கண்டடைந்தது. அங்கே தானே, பிரகாசமான விடிவெள்ளி நட்சத்திரம் தன்னுடைய வெளிச்சத்தை என்னை சுற்றிலும் பிரகாசிக்க செய்தது. இதோ இந்த வியாதியஸ்தர்கள் உம்முடைய சமூகத்திலே நிற்கிறார்கள். அவர்கள் விசுவாசிக்கிறவர்களாய், காயப்பட்டு, வாரினால் அடிக்கப்பட்ட முதுகை நம்பிக்கையோடு காண்கிறார்கள். ''அவருடைய தழும்புகளால் நாம் குணமடைந்தோம்". மகா பரிசுத்த பிதாவே, இயேசு கிறிஸ்து எங்கள் நிமித்தம் அனுபவித்த பாடுகளினாலே நீர் எங்களுடைய வியாதிப்பட்ட சரீரத்தை குணப்படுத்துவீர் என்று எங்கள் விசுவாசத்தை அறிக்கை செய்து உம்மிடத்தில் வருகிறோம். நீர் பிணியாளிகளை இரட்சிப்பீர் என்று வாக்குரைத்ததின் பிரகாரமாக இங்கே நின்று கொண்டிருக்கிறதான இந்த மக்களுக்காக விசுவாசத்தினாலே ஜெபத்தை ஏறெடுக்கிறோம். நாங்கள் ஒன்று கூடி இன்றிரவிலே உம்முடைய விசுவாசிகளின் கூட்டமாய் நிற்கிறோம். "எங்கே இரண்டு மூன்று பேர் என்னுடைய நாமத்தினாலே கூடுவீர்களோ அங்கே அவர்கள் நடுவிலே இருப்பேன்" என்று கூறினீர். இதோ அவர்கள் மேல் இரக்கமாய் இருக்கும்படி கேட்கிறோம். உம்முடைய கிருபையானது அவர்களுடைய உள்ளான ஆத்துமாவை தொட்டு, அவர்கள், கிறிஸ்து இங்கு இருக்கிறார் என்றும், அவர், "என் பிள்ளையே நான் உன் வியாதியை கல்வாரியிலேயே எடுத்துவிட்டேன்" என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஆழமாய் நங்கூரமிடப்பட்டும், மேலும், உங்கள் கவலைகளை எல்லாம் என் மீது வைத்துவிடுங்கள். நான் உங்களுக்காக அக்கறை கொண்டுள்ளேன்," என்றீர். அவர்கள் முழுமையாக எந்த குறையுமின்றி சுகமடைய வேண்டுமென்று இயேசுவின் நாமத்திலே கேட்கிறோம். ஆமென்.
57 அவர்கள் அப்படியாய் அமரும்போது அவர்கள் அருகில் அவர்களுக்காக ஜெபித்துக் கொண்டிருந்தவர்கள் அவர்கள் மேல் கரத்தை வையுங்கள். ஏனென்றால் வேதாகமம், "வியாதியஸ்தர் மேல் கரத்தை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்" என்று கூறுகிறது. கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.
58 நான் தவறாக புரிந்து கொள்ளவில்லை என்றால், இரண்டு நாட்களுக்கு முன்பாக அல்லது ஞாயிற்றுக் கிழமைகளுக்கு முன்பாக, காது கேட்காமலோ அல்லது காதில் ஏதோ பிரச்சனையோடு இருந்து சுகத்தை பெற்றவரையா பார்க்கிறேன்? அது அவர் தானா? நீர் இந்த இரவு கூட்டத்தில் களிகூறுவதைப் பார்க்கிறேன். உமக்கு இப்பொழுது காது நன்றாக கேட்கிறதா? நல்லது. இது அருமையான காரியம் நீர் சற்று எழும்பி நில்லும். எத்தனை பேருக்கு அவர் இங்கு இருந்தது ஞாபகம் இருக்கிறது? ஜெப வரிசையினூடாக கடந்து போனவர் திரும்பவுமாக மேடைக்கு அழைக்கப்பட்டார். தேவன் அவரை சுகப்படுத்தி முற்றிலும் குணமாக்கினார். தேவன் ஆசீர்வதிக்கப்படுவாராக. உம்முடைய சாட்சிக்காக நன்றி சகோதரனே. அனேக அனேக சாட்சிகள் இருக்கக்கூடும் அவர் அருமையானவராக இருக்கிறார் அல்லவா?
59 இப்பொழுது நாளை இரவும் உங்களை நாங்கள் காண விரும்புகிறோம். சற்று சீக்கிரமாய் வாருங்கள். பிறகு ஞாயிற்றுக் கிழமை காலையிலும் சற்று சீக்கிரமாய் வாருங்கள். ஞாயிற்றுக் கிழமை மதியம், முடிந்தால் அன்று இரவு நடக்கிற சுகமளிக்கும் கூட்டத்திற்கு கடந்து வாருங்கள். நாம் மீண்டும் சந்திக்குமட்டும், நாம் நம்முடைய முடிவு பாடலாக, "இயேசுவின் நாமத்தை உங்களோடு எடுத்து செல்லுங்கள்" என்ற பாடலை எழும்பி நின்று பாடலாம்.
இயேசுவின் நாமத்தை உன்னோடு எடுத்துச் செல்,
துன்ப துக்கத்தில் இருக்கும் பிள்ளையே,
அது சந்தோஷம் சமாதானம் தரும்… ^^(இப்பொழுது திரும்பி எல்லோருடனும் கை குலுக்குங்கள்) ^^
அதை போகும் எவ்விடமும் எடுத்து செல்லுவீர்.
விலையேறப்பெற்ற நாமம்,
(திரும்பி கைகளை குலுக்குங்கள்)
எவ்வளவு இனிமையுள்ளது.
பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் சந்தோஷமாம்.
விலையேறப்பெற்ற நாமமே, விலையேறப்பெற்ற நாமமே,
ஓ, (அது எவ்வளவு இனிமையானது)
பூமியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமும்.
(இப்பொழுது இந்த பக்கம் திரும்பி பாருங்கள்)
இயேசுவின் நாமம் முன் பணிவோமே.
அவர் பாதத்தில் சாஷ்டாங்கமாய் பணிந்து,
ராஜாதி ராஜாவாய் பரலோகத்தில் முடிசூட்டுவோம்,
நம் பயணம் முடிவடையும் போது,
விலையேறப்பெற்ற நாமமே,
ஓ, அது எவ்வளவு இனிமையானது,
(எவ்வளவு இனிமையானது)
பூமியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமும்
விலையேறப்பெற்ற நாமமே,
ஓ, எவ்வளவு இனிமையானது
(எவ்வளவு இனிமையானது)
பூமியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமுமாம்.
60 இப்பொழுது நெவில் அவர்களின் பாடல் குழவினரின் நிகழ்ச்சியான ''நான்கு இசைக் கருவிகள் கொண்ட ஒலிபரப்பு" காலை ஒன்பது மணியளவில் வானொலியில் ஒளிப்பரப்பாகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதேபோல் சகோதரன் ஸ்டிரைக்கரின் நிகழ்ச்சி ஞாயிறு காலை ஒன்பது நாற்பத்தைந்து மணியளவில் ஒளிப்பரப்பாகிறது. அவருக்காக உயிர்தெழுதலைக்குறித்து இந்த மதிய வேளையிலே ஒரு ஒலிநாடா ஒன்றை தயாரித்துக் கொண்டிருந்தோம்.
நாம் மீண்டும் சந்திக்குமட்டும் தேவனுடைய ஆசீர்வாதம் உங்களோடு இருக்கட்டும். நாம் சற்று நம்முடைய தலையை தாழ்த்துவோம். நான் என்னுடைய அருமையான நண்பரும் சகோதரனுமாகிய பால்மர், ஜியார்ஜியாவிலுள்ள மகோன் என்ற இடத்திலிருந்து வந்திருக்கிற அவர் இந்த ஜெப நேரத்தின் போது ஜெபித்து இந்த கூட்டத்தை நிறைவு செய்ய கேட்டுக்கொள்கிறேன். சகோதரன் பால்மர், வாருங்கள்.