என்றென்றும் பிரசன்னமாயுள்ள கன்மலையின் தண்ணீர்
July 23, 1961

16 px

1  இன்று காலை தேவனாகிய கர்த்தர் நமது ஆராதனையின் ஆரம்பத்திலேயே, அவருடைய சமுகத்தில் "நாம் கவனமாய்க் கேட்டு, பயபக்தியுள்ளவர்களாய் இருக்கவேண்டும்" என்னும் செய்தியை நமக்களித்து ஒன்றைச் சொல்ல சித்தங்கொண்டதற்காகவும், அவருடைய பிரசன்னத்திற்காகவும் நாம் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். அவர் வாக்குத்தத்தம் செய்ததை நிறைவேற்றுவார் என்று நான் உறுதியாய் அறிந்திருக்கிறேன். அவர் எப்பொழுதுமே தமது வார்த்தையை நிறைவேற்றுகிறவராக இருக்கிறார். இன்று காலை நாம் உயிருடன், நித்தியத்துக்கு இப்பக்கத்தில் அவரை மீண்டும் ஆராதிக்கவும், அவர் கூறுவதைக் கேட்கவும் ஒன்று கூடினதற்காக நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். அந்த நோக்கத்திற்காகவே நாம் ஒன்று கூடுகிறோம்.



2  நான் கண்ட ஒரு சொப்பனத்தின் விளைவாக, சகோ. நெவிலை இன்று எதிர்பாராத விதமாக முற்றுகையிட்டேன். நான் சொப்பனங்களில் நம்பிக்கை கொண்டவன், தேவன் ஜனங்களுடன் சொப்பனங்களின் மூலம் தொடர்பு கொள்கிறார் என்பதை நான் நம்புகிறேன். சென்ற இரவுக்கு முந்தின இரவு நான் வினோதமான சொப்பனம் ஒன்றைக் கண்டேன். அதில் நான் மலைப்பாங்கான இடத்திலிருந்த ஒரு உணவு விடுதிக்கு பகல் உணவை அருந்த சென்று கொண்டிருந்தேன். அந்த இடத்தை நான் அணுகினபோது, ஒரு வாத்தியக் குழு வயலின்கள் போன்ற இசைக் கருவிகளை இசைத்து, அங்கு உணவு அருந்தினவர்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தது, அது என்னமோ எனக்குப் பிடிக்கவில்லை. எனவே நான் அங்கிருந்து திரும்பி வந்தேன். அநேகர் மலையில் ஏறி இந்த உணவு விடுதிக்கு சென்று கொண்டிருப்பதைக் கண்டேன். அவர்கள் கண்களில் படாமலிருக்க நான் வலது புறமாகவும் இடது புறமாகவும் திரும்பி வந்து கொண்டிருந்தேன்.



3  அப்பொழுது கீழேயுள்ள பள்ளத்தாக்கில் நான் கூடாரத்தைக் கண்டேன். யாரோ ஒருவர், "சகோ. பிரான்ஹாமை இன்னின்ன தெருச் சந்தியில் சந்தியுங்கள். அவர் மலையிலிருந்து கீழே இறங்கி வருகிறார். அவரிடம் இன்னின்னதை கூறுங்கள்" என்று சொல்லும் சத்தத்தைக் கேட்டேன். நான் தெருச்சந்தியை அடைய விரைந்து சென்றேன்.
அங்கு வந்தவர் யாரென்றால், சகோ. நெவில். இன்று காலை அவர் அணிந்துள்ள அதே பழுப்பு நிற 'சூட்'டை அவர் அணிந்திருந்தார். அவர் என்னிடம், "சகோ. பிரான்ஹாமே, நீங்கள் பட்டினத்தில் இருக்க நேர்ந்தால், கூடாரத்துக்கு வருவது நலம். ஏனெனில், ஹாங்க…'' என்றார். எனக்குத் தெரிந்த ஒரே சகோ. ஹாங்க், சகோ. ஹென்றி கார்ல்ஸன் தான். அவரை நாங்கள் ஹாங்க் என்று அழைப்பதுண்டு. சகோ. நெவில், "நீங்கள் பட்டினத்தில் ஒரு சில நாட்கள் தங்கியிருந்து, கூடாரத்துக்கு வராமலிருந்தால், சகோ. ஹாங்க் வித்தியாசமாக நினைப்பார்" என்றார். நான் உறக்கத்தனின்று விழித்துக் கொண்டேன்.
அது எனக்கு வினோத உணர்ச்சியையளித்தது. இன்று காலை சபைக்கென அவர் விசேஷமான ஏதாகிலும் ஒன்றை வைத்துள்ளாரா என்று கேட்காமல் நான் குறுக்கிட விரும்பவில்லை. அவர் எப்பொழுதும் போல தயவாய், 'வாருங்கள்' என்றார். எனவே நாங்கள் வந்திருக்கிறோம். நேற்று இரவு தான் நான் அவருடன் தொலைபேசியில் பேசினேன். இன்று காலை, நீங்கள் யாருமே எதிர்பாராத விதத்தில், நான் வந்துள்ளேன்.



4  சில விஷயங்களைக் குறித்து முதலாவதாக உங்களிடம் விவரிப்பது நலமெனக் கருதுகிறேன். நான் அநேகருக்கு விசித்திரமாகத் தோன்றுபவன். எனக்கே நான் விசித்திரமானவன். ஏனெனில் கூடியமட்டும் நான் பரிசுத்த ஆவியின் வழி நடத்துலைப் பின்பற்ற முயல்கிறவன். அது நம்மை விசித்திரமுள்ளவர்களாகச் செய்கின்றது. சில நேரங்களில் நாம் சில செயல்களைப் புரிந்துவிட்டு, அதன் பின்பு, "ஏன் அப்படிப்பட்ட காரியத்தைச் செய்தேன்?" என்று வியந்ததுண்டு. நீங்கள் செய்யக் கூடாத காரியங்களைச் செய்து விட்டதாக நினைக்கலாம். ஆனால் நீங்கள் பொறுமையுடன், விசுவாசத்துடன் அதை சிந்தித்துப் பார்ப்பீர்களானால், அதை செய்ய தேவன் உங்களை அங்கு வழி நடத்தினார் என்றும், அது நன்மைக்கு ஏதுவாகவே முடியும் என்றும் நீங்கள் கண்டுகொள்வீர்கள். பாருங்கள்? அநேகமுறை நாம் அவ்வாறு கண்டு கொண்டிருக்கிறோம். சகோ. நெவிலும், மற்றும் ஆவிக்குரிய தலைவர்களும், ஜனங்களும் அநேக முறை அதை கண்டு கொண்டுள்ளனர்.
என் வாழ்க்கையில் சில நேரங்களில்… வெளிப்படையாகக் கூறினால், நான் சிறுவனாயிருந்த முதற்கு, ஜெபர்ஸன்வில்லில் நான் வாழவேண்டும் என்னும் ஏவுதல் எனக்கு இருந்ததேயில்லை. இங்கு வாழ்வதென்பது களிம்பில் அகப்பட்டுக் கொண்ட ஈ தத்தளிப்பது போன்று தான். முதலாவதாக, இதன் சீதோஷ்ண நிலை எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை. வேறொரு காரியம், இங்கு ஆவியின் சோர்வு உண்டாகின்றது.



5  நீங்கள் பின்சென்று காரியங்களை ஆராய்ந்து பார்த்தால், வெள்ளத்தின் போது இந்த இடத்தில் அழிவு ஏற்படாமல் இருந்திருக்குமானால் - நான் முதலாவதாக ஊழியத்திற்கு அழைக்கப்பட்டபோது எனக்கு அதைக் குறித்த ஒரு கடிதம் கிடைத்தது. நான் இங்கு வந்தேன். நானும் சகோ. ஜார்ஜ் டீ ஆர்க்கும்…
அப்பொழுது சகோ. கிரகாம் ஸ்னெல்லிங்கின் தாயாரும், நியூ ஆல்பனியில் பெட்ரோல் பங்க் வைத்திருக்கும் சகோ. ஹாகின்ஸம், மற்றும் அநேகரும் ஜெப அறைக்கு வெளியே என்னை சந்தித்து, நான் இங்கு தங்க ஒப்புக் கொண்டால், அவர்களுடைய பிள்ளைகளின் ஆகாரத்தை மட்டுப்படுத்தி, காசு சேமித்து, ஒரு கூடாரத்தை இங்கு கட்டுவார்கள் என்றும், அப்பொழுது அவர்கள் ஆராதனைக்கென ஓரிடத்திலிருந்து மற்றொரு இடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்றும் என்னிடம் முறையிட்டனர்.



6  அந்த வாலிபத் தாய், ஒரு குழந்தையை கையிலேந்திக் கொண்டு, மற்ற குழந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு, அவர்கள் ஆராதிப்பதற்கென ஒரு இடத்தைக் கட்ட, தன் குழந்தைகளின் ஆகாரத்தையும் மட்டுப்படுத்த ஆயத்தமாயிருக்கிறாள் என்று கூறினது என் நெஞ்சைப் பிளந்தது. எனவே சகோ. ஜார்ஜும் நானும், இங்கு தங்கி கூடாரத்தைக் கட்டுவதென தீர்மானித்தோம்.
அந்த கூடாரம் கட்டி முடிந்த பின்னர், அது எப்பொழுதுமே. இக்கூடாரத்தை நான் பிரதிஷ்டை செய்த அன்று காலையில் எனக்கு ஒரு தரிசனம் உண்டானது. அது எழுதப்பட்டு, அங்குள்ள மூலைக் கல்லில் வைக்கப்பட்டுள்ளது. அப்பொழுது பரிசுத்த ஆவி என்னிடம், "இது உன்னுடைய கூடாரம் அல்ல" என்றார். பாருங்கள்? என் கூடாரம் எங்கேயென்று நான் கேட்டபோது, அவர் என்னை பிரகாசமுள்ள நீல வானத்தின் கீழ் நிறுத்தி, "சுவிசேஷகனுடைய வேலையைச் செய்" என்றார். அதெல்லாம் உங்களுக்குத் தெரியும். அது புத்தகங்களிலும் கூட எழுதப்பட்டுள்ளது.



7  இவையனைத்தையும் ஒன்று சேர்த்து பார்க்கும்போது ஒரு நாள் நான் இப்பொழுது சகோ. உட் தங்கியுள்ள வீட்டில் முற்றத்திலுள்ள புல்லை செதுக்கிக் கொண்டிருந்தபோது: என் மாமியார் அப்பொழுது அந்த வீட்டில் தங்கியிருந்தார்கள். நான் பின்னாலுள்ள ஒரு சிறு பழைய கான்கிரீட் படியின் மேல் உட்கார்ந்து கொண்டிருந்தேன். அந்த சிறு இடத்தை என் மாமியாருக்குக் கட்டி தந்தேன். அச்சமயம் அவர்கள் சபையில் வாயிற்காப்போராக (Janitor) இருந்து கவனித்து வந்தார்கள். அப்பொழுது மிகத் தெளிவான ஒரு சத்தம் என்னுடன் பேசி "நீ இங்கு தங்கியுள்ளவரைக்கும், உன்னை நான் ஆசிர்வதிக்கவே முடியாது நீ இந்த இடத்தை விட்டும், இந்த ஜனங்களை விட்டும் பிரிந்து செல்ல வேண்டும்" என்றுரைத்தது. அது ஒரு வார காலமாக, அல்லது அதற்கும் மேலாக, என் நெஞ்சைப் பிளந்தது.



8  எப்பொழுதும் ஒன்று என்னை, "போய் விடு, போய் விடு, மேற்குக்குப் போ, மேற்குக்குப் போய்க்கொண்டிரு" என்று எச்சரித்துக் கொண்டே வந்துள்ளது. சரி, நான்… அது என் மனதை தொந்தரவு செய்கின்றது. ஒவ்வொரு முறையும் அது…
நான் டூசானுக்கு செல்ல வேண்டுமென்று இவ்வாரம் என் மனதில் தீர்மானித்துக் கொண்டேன். அங்கு ஓரிடத்தை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, குளிர்காலத்தில் தங்கப் போகின்றேன். பிள்ளைகளையும் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பேன். அது செப்டம்பரில் தொடங்குகிறது. எனக்கு ஒருவர் கொடுத்த இடம் அங்குள்ளது, ஆனால் ஏதோ ஒன்று… நான் இங்கிருந்து போய்விட்டால்…



9  வேறொன்றைக் கூற விரும்புகிறேன். இப்பொழுதுள்ள போதகரின் வீட்டை நான் முதலில் கட்ட விரும்பவில்லை. என் மனைவியின் தாயார் வயது சென்றவர்கள், என் மனைவி அழத் தொடங்கினாள். அவள், "என் தாயை வயதான காலத்தில் விட்டு விட்டுச் செல்ல முடியாது. யாரும் அவர்களை கவனிக்க மாட்டார்கள்" என்றாள். அது எனக்குப் புரிகிறது. அது அவளுடைய தாய் - அவளுக்கு இருந்ததும், அவளுக்கு எப்பொழுதும் இருக்கும் ஒரு தாய். எனவே நான் புரிந்து கொண்டேன். நான் ஆண்டவரிடம் "இந்த இடம் எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் நான் திருப்தியடையும்படி செய்யும். நீர் கூறும் எந்த இடத்திற்கும் போக ஆயத்தமாயுள்ளேன். ஆனால் என் மனைவியை வருத்தப்படுத்த விரும்பவில்லை. அவளை இங்கிருந்து, அவள் ஒருவரையும் அறியாத அந்நிய இடத்துக்கு கொண்டு செல்ல விருப்பமில்லை. நான் எப்பொழுதுமே வீட்டில் இருப்பதில்லை. அவளுடன் இந்த இடத்தில் தங்கியிருக்க எனக்கு திருப்தியை அளியும்" என்று ஜெபித்தேன்.
இப்பொழுது அவளுடைய தாயார் மகிமைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பு, இங்கிருந்து போய்விட வேண்டுமெனும் ஆவல் மறுபடியும் உண்டாகின்றது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.



10  இந்த போதகத்தை சகோதரர்கள் துவக்கிவிட்டார்களே. இந்த பிரசங்க பீடத்தில் சென்ற முறை நான் நின்ற போது, இந்த போதகம் நிலவி வரும் வரைக்கும் நான் ஊழியம் செய்யமாட்டேன் என்று கூறினேன். அந்த சகோதரர்கள் தயவாக அதை சரிபடுத்திவிட்டார்கள். அது தெளிவாகிவிட்டது. இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் அதெல்லாம் முடிந்துவிட்டது.
அதன் விளைவாக, இப்பொழுது ஊழியத்திற்காக இடங்கள் திறக்கப்பட்டுள்ளன. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை, எந்த பக்கம் செல்வதென்று தெரியவில்லை. எனக்கு ஒரு தரிசனத்தை அருள கர்த்தரிடம் வேண்டிக் கொண்டிருக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டுமென்று என்னிடம் கூறும்படி அவரைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அவரோ நான் அமைதியாய் அமர்ந்திருக்கும்படி செய்திருக்கிறார்.



11  சென்ற இரவு என் பிள்ளைகளும் என் மனைவியும் வெளியே சென்ற பிறகு, நான் தேவனாகிய கர்த்தரிடத்தில் ஒரு பொருத்தனை பண்ணிக் கொண்டேன். நான் அவரிடம், "நான் போகும் வழியில் நீர் என்னை ஆசிர்வதிப்பீரானால், நான் உம்மை சேவிப்பேன். ஆனால் நான் எங்கு செல்ல வேண்டுமென்றும் நீர் எனக்குக் காண்பிக்க வேண்டும்" என்றேன். நான் கர்த்தருக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணிக் கொண்டேன். என் ஊழியத்தையும், எல்லாவற்றையும் அவரிடம் ஒப்படைத்துவிட்டேன். நான் அவரிடம், "நீர் எங்கு ஊழியத்திற்காக வாசலைத் திறந்தாலும், என்ன செய்தாலும், அந்த வழியில் நான் செல்ல ஆயத்தமாயுள்ளேன். ஆனால் நீர் வழியை திறக்கும் வரைக்கும், நான் தொடர்ந்து இப்பொழுதுள்ளபடியே இருப்பேன்" என்றேன். நான் வஞ்சிக்கப்படாதபடிக்கு, அவர் இதை தெளிவாக்கும்படி முறையிட்டுள்ளேன். நாம் ஏதோ ஒன்று நிகழுவதற்காக தெருச் சந்தியில் இருக்கிறோம் என்று உண்மையாக நம்புகிறேன்.
இன்று காலை சகோ. நெவில் உரைத்த தீர்க்கதரிசனத்தை கேட்டேன் ஏற்கனவே உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனத்தை அவர் குறிப்பிட்டார். எனவே உங்கள் அனைவருக்காகவும் நான் ஜெபித்துவிட்டேன். நீங்கள் அனைவரும் எனக்காக ஜெபிக்க வேண்டும். நான் போக வேண்டிய இடத்துக்கு பரிசுத்த ஆவி என்னை வழி நடத்தவும். நான் என்ன செய்ய வேண்டுமென்று அவர் கூறவும். நான் தவறு ஒன்றும் செய்யாதபடிக்கும், உங்கள் ஜெபம் எனக்குத் தேவையாயுள்ளது.



12  அநேக சமயங்களில் ஜனங்கள், ஒருவருக்கு தீர்க்கதரிசன வரம் இருந்தால் தேவன் அவரிடம், "உன்னை நான் இங்கிருந்து அங்கு கொண்டு செல்லப் போகின்றேன். அங்கு போ" என்று சொல்வார் என்று நினைக்கின்றனர். அவர் அப்படி செய்வாரானால், உங்களுக்கு எத்தகைய ஜெயங்கொள்ளும் விசுவாசம் உள்ளது? பாருங்கள்? மற்றவர்களைக் காட்டிலும் அவர் உங்களை தனியே விட்டு விட்டுகிறார். பாருங்கள்? நீங்கள் என்னிடம் வந்து சில விஷயங்களைக் கேட்கும் போது, அதற்கு பதில் கூற அவர் ஒரு போதும் தவறினதில்லை. அது உண்மை. ஆம், ஆனால் என்னைப் பற்றி அவரிடம் கேட்கும் போது, அநேக சமயங்களில் நானே அதை செய்யும்படிக்கு அவர் என்னைத் தனியே விட்டுவிடுகிறார்.
சில பிரச்சினைகளுக்கு நானே தீர்வு கண்டு, நானே தீர்மானம் செய்ய வேண்டியதாயுள்ளது. ஆனால் இதைப் பொறுத்தவரையில், இது மிகவும் முக்கியமானது, என்னிடம் பேசுவது அவரே என்னும் உறுதியைப் பெறும்வரை, நான் செய்ய முடியாது. அவர் எனக்குத் தரிசனமும் தரவில்லை. என்னைத் தனியே விட்டுவிட்டார். எனவே இன்று காலை நான் ஒரு அனாதையைப் போல அமர்ந்திருக்கிறேன். எந்த பக்கம் போவதென்றே எனக்குத் தெரியவில்லை. எனவே அதை கர்த்தரிடம் சமர்ப்பித்துவிட்டேன்.



13  அந்த சொப்பனத்தை நான் கண்டபோது, வேறு ஏதாவது பாதையில் நிகழும் வரைக்கும், நான் மீண்டும் இக்கூடாரத்துக்கு வந்து சகோ. நெவில்லுக்கு துணையாய் இருக்க வேண்டுமென்று தோன்றிற்று. எனவே, நான் இங்கிருப்பேன்.
சில நிமிடங்களுக்கு முன்பு நான் சகோ. நெவில்லிடம், "சபை எவ்வாறு முன்னேறுகிறது?" என்று கேட்டேன்.
அவர், "நன்றாக முன்னேறுகிறது" என்று பதிலளித்தார்.
எனவே, உங்கள் மத்தியில் ஆவிக்குரிய வரங்கள் இன்னும் கிரியை செய்கின்றன என்று கேள்விப்படுகிறேன் - தீர்க்கதரிசன வரம் அந்நிய பாஷை பேசுதல், அதற்கு அர்த்தம் உரைத்தல். சற்று முன்பு அதை நாம் கேட்டோம். அவை சிறப்பான விதத்தில் சபையை சீர்பொருந்தச் செய்கின்றன.



14  நான் நினைத்தேன், இன்றிரவு சகோ. நெவில்… பரிசுத்த ஆவி வித்தியாசமான ஒன்றுக்கு நம்மை வழி நடத்தாமலிருந்தால். இன்றிரவு… இன்று காலை நீங்கள் இவ்விடம் விட்டுச் செல்லும் முன்பு உங்கள் மனதில் எழும் கேள்விகளை எழுதி இங்கு வையுங்கள். சபை என்ன நினைக்கிறது என்பதை நாங்கள் அதன் மூலம் கண்டு கொள்வோம். ஜனங்களின் இருதயங்களில் என்ன உள்ளது என்பதைக் கண்டு கொள்ள போதகர்கள் கடைபிடிக்கும் வழிமுறை இது. கேள்வி இருக்கும் ஒவ்வொருவரும், அதை எழுதி இங்கு வையுங்கள். அதை எழுத இன்று காலை உங்களிடம் காகிதத் துண்டு இல்லையென்றால், இன்றிரவு நேரத்தோடு எழுதிக் கொடுத்துவிடுங்கள். அப்பொழுது அந்த கேள்விகளைப் படித்து வேதப் பிரகாரமாக பதிலுரைக்க எனக்குப் போதிய நேரம் உண்டாயிருக்கும்.



15  கர்த்தருக்குச் சித்தமானால், அது கர்த்தருடைய சித்தமாயிருக்குமானால் - வெளிப்படுத்தின விசேஷத்தில் உள்ள ஏழு முத்திரைகளைக் குறித்து பேச விரும்புகிறேன் என்று அண்மையில் உங்களிடம் அறிவித்தேன். இந்த ஆண்டு, அத்தனை முத்திரைகளையும் பேசி முடிக்க முடியாது. ஏனெனில் அது வெளிப்படுத்தின விசேஷம் 6-ம் அதிகாரம் தொடங்கி 19-ம் அதிகாரம் முடிய உள்ளது. ஆனால் முதல் மூன்று அல்லது நான்கு முத்திரைகளை ஒரு இரவு ஒரு முத்திரை வீதம், முடிக்கலாமென்று நினைக்கிறேன்.



16  வெளிப்படுத்தின விசேஷத்தில் சபை எங்கு மகிமையில் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்பதை புரிந்து கொண்டு அங்கு நிறுத்திக் கொண்டோமானால், மீதியுள்ள பாகம் யூதர்களுக்குரியது, சபைக்குரியதல்ல. அது யூத ஜாதியினருடன் ஈடுபடுகின்றது. எனவே நாம் சபை எடுத்துக் கொள்ளப்படுதலில் தொடங்கி… அந்த முத்திரைகளின் போதும், புறஜாதி சபை காலத்தின் போதும் என்ன நடக்கின்றது என்று இங்கு நாம் காண்கிறோம். சபை எடுக்கப்பட்ட பின்பு, அன்று முதல் அது இஸ்ரவேல் தேசத்தை காட்சிக்கு கொண்டு வந்து, தற்போதைய காலம் வரைக்கும் நீடித்து, மேசியா வரும் வரைக்கும் தொடர்கின்றது. அப்பொழுது அவர்கள் மேசியாவை ஏற்றுக் கொள்வார்கள்.
உங்களுக்குப் புரிகின்றதா? சபை எடுத்துக் கொள்ளப்படுகின்றது. தேவன் முதலில் சபையுடன் ஈடுபடுகின்றார் - சபைகாலங்கள், அதைக் குறித்து நாம் பார்த்தோம். சபை மகிமைக்குள் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. அதன் பின்பு, கலியாண விருந்து நடந்து கொண்டிருக்கும் போது, பரிசுத்த ஆவி இஸ்ரவேலருடன் ஒரு தேசமாக ஈடுபட்டு, முடிவு காலம் வரைக்கும் அவர்களைக் கொண்டு வருகிறார். நேரம் வரும் போது, கரும்பலகையில் இவைகளை வரைந்து கற்றுக் கொடுப்பேன். பின்பு கர்த்தர் மணவாட்டியுடன் திரும்பி வருகிறார். இஸ்ரவேல் அவளைக் காண்பாள். ஓ, அது எப்படிப்பட்ட நேரமாக இருக்கும்!



17  இதை நாம் சரியாக இணைக்கும் முன்பு, ஒரு பெரிய பாடம் உள்ளது. அது வேத பண்டிதர்களுக்கும், காலங்கள் தோறும் போதகர்களாயிருந்தவர்களுக்கும், அதைக் கேட்க வரும் கிறிஸ்துவின் சபையினர் போன்றவருக்கும் இடறலாக அமைந்திருக்கும். அதுதான் தானியேலின் எழுபது வாரங்கள் நாம் மணவாட்டியையும் இஸ்ரவேலையும் தானியேலின் எழுபது வாரங்களுடன் இணைக்காமல், வெளிப்படுத்தின விசேஷத்திற்கு செல்ல முடியாது. கர்த்தருக்கு சித்தமானால், அவர் வருங்காலத்தில் என்னுடன் பேசுவாரானால், இந்த எழுபது வாரங்களை, குறித்து… எழுபது வாரங்கள் அல்ல, ஏழு முத்திரைகளைக் குறித்து பேசலாம். அடுத்த ஞாயிறு, தானியேலின் எழுபது வாரங்களைப் போதிக்க முயல்கிறேன் - கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த ஞாயிறு, அது மற்றவைகளைப் போதிக்க - அவர் நம்மை வழி நடத்துவாரானால் - ஆதாரமாயிருக்கும். அதன் பிறகு நாம் பார்க்கலாம்.



18  நானும் சகோ. நெவில்லும் ஒருமித்து இதைக் குறித்து திட்டமிட்டு, ஜனங்களுக்கு நன்மை பயக்கும் அனைத்தையும் செய்து கொண்டிருப்போம்.
அது மாத்திரமின்றி, நாங்கள் வியாதிஸ்தருக்கும் ஜெபிப்போம். அதை செய்ய நாங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியுள்ளவர்களாய் இருப்போம். வியாதிபட்டோர் வருவார்களானால், ஒவ்வொரு கூட்டத்திலும் அவர்களுக்காக ஜெபிப்போம்.
என்னில் இனிமேல் பகுத்தறிவின் வரம் கிரியை செய்வதை நான் விரும்பவில்லை. பாருங்கள், இது தான் நடந்தது. நான் முயன்று வந்திருக்கிறேன். நான் தவறான செயல்களைப் புரிந்திருக்கிறேன் என்று அறிவேன். ஆனால் எப்பொழுதுமே தேவனுடன் நெருங்கி வாழ நான் முயன்று வந்துள்ளேன். அதனால்தான் எனக்கு தரிசனங்கள் உண்டாகி, என்ன நிகழப் போகிறதென்று அறிவித்தன. சில சமயங்களில் ஜனங்கள் பொருட்களை தொலைத்து விடுவார்கள். நான் கர்த்தரிடத்தில் விண்ணப்பம் பண்ணி, அது எங்கேயுள்ளது என்று அவரைக் கேட்கும்படி என்னை வேண்டிக் கொள்வார்கள். உதாரணமாக, ஈசாயின் கழுதைகள் காணாமற் போய், பையன்கள் தீர்க்கதரிசியிடம் சென்ற போது, அவை வீடு திரும்பின என்று அவன் கூறினது போல், இவையாவும் நல்லது தான், அது வளர்ந்து கொண்டே போகின்றது. அநேகர்… இந்த இடத்தில் மாத்திரமல்ல, உலகம் பூராவும் பாருங்கள், அது எனக்கும் இறுக்கத்தையளித்து, உங்களையும் அந்நிலையில் வைத்து, முடிவில் அது அடைந்துள்ள நிலை.



19  அது தான், நான் மாமிசத்தில் தோன்றிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னும் உபதேசத்தை அந்த சகோதரர்கள் தொடங்கக் காரணமாயிருந்தது. அது ஊழியத்தை தகர்த்தெறிந்து, கிறிஸ்துவுக்கு நிந்தையைக் கொண்டு வருமென்று நமக்குத் தெரியும். பாருங்கள்? ஆகவேதான் நான், அது தேவனுடையதல்ல, அது பிசாசினுடையது என்று கூறி, அவர்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கி, உடனே நிறுத்தும்படி செய்தேன். பாருங்கள்? அவர்கள் நல்லவர்கள், அவர்கள் வேதத்தின் மூலம் உண்மையைக் கண்டு, உடனே தேவனிடத்தில் திரும்பினபடியால், அவர்கள் தேவனுடைய ஆவியினால் பிறந்தவர்கள் என்பதைக் காண்பிக்கிறது. சாத்தான் ஜனங்களிடையே கிரியை செய்ய முனைந்தான் என்று தெளிவாகிறது. அவர்கள் அனைவரும் தேவ பக்தியுள்ள கிறிஸ்தவர்கள்.



20  அது அநேகரை, "சகோ. பிரான்ஹாமே, முன்னைக் காட்டிலும் உங்கள் மேல் அது அதிக நம்பிக்கையை எங்களுக்கு ஊட்டியது" என்று கூறும்படி செய்தது.
ஏனெனில் பாருங்கள், கர்த்தர் எனக்களித்த வரத்தைக் கொண்டு நான் என்ன செய்திருக்க முடியும்? தேசம் முழுவதையும் என் காலடியில் கொண்டு வந்திருக்க முடியும். நான் 'தேசம்' என்று குறிப்பிடுவது உலகிலுள்ள அனைவரையும் அல்ல - யுத்தத்தில் பலியாகப் போகிறவர்களை அல்ல (Cannon Fodder), நான் உண்மையான விசுவாசிகளை - கிறிஸ்தவர்களை குறிப்பிடுகிறேன். அவர்கள் தாம் உலகத்தின் சத்து… நாம் 'தேசம்' என்றழைப்பது 'மறுபடியும் பிறந்தவர்களையே' - எல்லோரையும் அல்ல. நாம் வாழும் இவ்வுலகம் மிக அசுத்தமாகவும், சேறாகவும் உள்ளது. அவர்கள் மண்ணாயிருந்து மண்ணுக்குத் திரும்புகின்றனர். நான் மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களையே - உண்மையான கிறிஸ்தவர்களையே - குறிப்பிடுகின்றேன்.



21  ஏதாவதொன்றக் குறித்து ஏதாவதொரு மனிதன் என் மீது சீறி விழுவார் என்று எதிர்பார்க்கிறேன். அண்மையில் ஒருவர் என்னிடம், "கிறிஸ்து தரையில் உமிழ்ந்து, சேறுண்டாக்கி, குருடனின் கண்களில் பூசினது எவ்வளவு அசுத்தமான சுகாதாரமற்ற செயல்!" என்றார்.
"நான், "ஆனால் அவன் பார்வையடைந்தவனாய் திரும்பி வந்தானே!" என்றேன். பாருங்கள், அது தான்.
அவ்வாறு குற்றம் கண்டுபிடித்த அந்த மனிதன்! என் இடத்திற்கு அருகில் நிர்வாணிகளின் முகாம் ஒன்றைத் திறந்தனர் - நீச்சல் குளம். அந்த மனிதன், தன் பிள்ளைகள் ஒவ்வொருவரும் அங்கு சென்று நீந்த நுழைவு சீட்டு வாங்கித் தருகிறார். அவரும் அவருடைய மனைவியும் கூட அங்கு நீந்துகின்றனர். என் சகோதரிகளே, என்னை மன்னியுங்கள். அங்கு நாள்தோறும் நீந்தச் செல்லும் ஏறக்குறைய நூறு பெண்களில் இன்று அந்த பெண்கள், தீட்டுள்ளவர்களாய், அந்த தண்ணீரில் தங்களைக் கழுவுகின்றனர். அந்த தண்ணீர் அங்கு நீந்துபவர்களின் வாயில் சென்று, அதை விழுங்கி, அதை வெளியே துப்புதல், அவர் என் மீது சீறி எழ வேண்டுமென்று விரும்புகிறேன், பாருங்கள்.
"கிறிஸ்து இன்று வாழ நேர்ந்தால், அவர் புரிந்த சுகாதாரமற்ற செயலுக்காக அவரை கைது செய்திருப்பார்கள்" என்கின்றனர்.
இதைக் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? நான் கூறுவதை புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் நீச்சல் குளத்திற்கு செல்கின்றனர். அவர்களில் அநேகருக்கு பெண் சம்பந்தமான வியாதிகள் உள்ளன. தண்ணீரை வாயிலெடுத்து துப்புவது போன்ற செயல் புரிந்து, தங்களைக் கழுவிக் கொள்ளுதல். அது சுகாதாரமான செயல் அல்லவா?



22  ஓ, என்னே! சகோதரனே, சகோதரியே, நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இக்காலம்! கர்த்தருடைய வருகைக்கு நேரமாகிவிட்டது. சபைக்கு ஒரே ஒரு நம்பிக்கையுண்டு. அது தான் கர்த்தருடைய வருகை!
சரி, இவைகளை என்னால் நிறுத்தமுடியாது. அது அவசியமும் இல்லை. இவை சம்பவிக்கும் என்று வேதம் முன்னுரைத்துள்ளது. என்னால் இவைகளை நிறுத்த முடியாது. ஆனால் நியாயத்தீர்ப்பின் நேரத்தில், இவைகளுக்கு நான் விரோதமாயிருந்தேன் என்பதற்கு அத்தாட்சியாக என் சத்தம் பரலோகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.
இந்த வேதாகமம் தேவனுடைய வார்த்தை என்பதை நான் இன்னமும் விசுவாசிக்கின்றேன். இதற்கு முரணாக உலகில் வேறெதும் எழும்பி இதை நிறுத்த முடியாது. இங்குள்ள வேதாகமம் - இது சத்தியமானது, இது தேவனுடைய வார்த்தை. எனவே நமது கப்பலின் பாயை கீழே இறக்கி, அந்த சமாதானமுள்ள இளைப்பாறுதலின் துறைமுகத்தில் சிறிது நேரம் நங்கூரமிடுவோம். நாளைக்கு நாம் கப்பலை வேறெங்காவது ஓட்டிச் செல்லலாம். ஆனால் இப்பொழுது நாம் நங்கூரமிட்டு, நமது பரலோகப்பிதா அவருடைய வார்த்தையின் மூலம் நம்முடன் பேசவிருக்கும் சத்தத்தை கவனமாய் கேட்போம். அவர் இன்று அப்படி பேசுவாரென்று நம்புகிறோம்.



23  இன்றிரவு உங்களுக்குள்ள சிறு கேள்விகளைக் கொண்டு வாருங்கள் - மற்றவர்களுக்கு கெடுதி விளைக்கும் கேள்விகள் அல்ல. அப்படிப்பட்ட கேள்விகளுக்கு நான் பதிலுரைக்க மாட்டேன். நீங்கள், "நான் இன்னின்ன காரியத்தைச் செய்ய நேரிட்டால், அப்படி நாம் செய்யலாமென்று தேவன் கூறியுள்ளாரா?" போன்ற சிறு கேள்விகள். அல்லது, "சகோ. பிரான்ஹாமே, எங்களிடம் வரங்கள் கிரியை செய்கின்றன. நாங்கள் இந்த முறையில் செய்ய வேண்டுமா, அந்த முறையில் செய்ய வேண்டுமா?" போன்றவை. நான் வேத ஆதாரமாக பதிலளிக்கக் கூடியவை. அப்படிப்பட்ட சிறு கேள்விகளை எழுதிக்கொண்டு வாருங்கள். அது என்னை மகிழ்விக்கும். கேள்விகள் ஒன்றும் இல்லாமல் போனால், கர்த்தருக்கு சித்தமானால், நான் ஏதாவதொரு பொருளைத் தெரிந்து கொண்டு, இன்றிரவு உங்களிடம் பிரசங்கிப்பேன். இது ஞாயிற்றுக்கிழமை. நான்…



24  சென்ற ஞாயிறு, நான் சகோ. காபில் சபைக்குப் புறப்பட்டேன். இந்த சபையில் மணி அடிப்பதைக் கேட்டேன். நான் முற்றத்தில் இங்குமங்கும் நடந்தேன். என்னால் பொறுக்க முடியவில்லை. அவ்வளவு தான், நான் மணி ஓசையைக் கேட்டேன். எனவே நான் வர வேண்டியதாயிற்று.
இப்பொழுது நாம் தலைவணங்கி, ஜெபத்தின் மூலம் நமது சிருஷ்டிகரிடம் பேசுவோம். யாருக்காகிலும் விசேஷித்த விண்ணப்பம் உண்டா? உங்கள் கைகளையுர்த்தி. 'எனக்குண்டு' என்று தெரிவியுங்கள். உங்கள் இருதயங்களில் என்ன உள்ளது என்பதை தேவன் அறிவார். உங்கள் விண்ணப்பங்களை உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.



25  மிகப் பரிசுத்தமுள்ள தேவனே, உமது மனதில் எழுந்த சிந்தையினாலும், உமது வாயின் வார்த்தையினாலும் வானத்தையும் பூமியையும் படைத்தவரே, எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நாங்கள் உமது சமூகத்தில் வந்து, நீர் எங்களுக்குச் செய்துள்ள எல்லாவற்றிற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறோம். ஆண்டவரே, இன்று காலையில், நாங்கள் எங்கு நிற்கிறோம் என்றும், எங்கள் நிலைமை என்னவென்றும், காலத்தின் சரித்திரத்தையும், வரவிருக்கும் எதிர்காலம் என்னவென்றும் நாங்கள் அறிந்துள்ளபடியால், உமக்கு மிகுந்த நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். தேவனுடைய கிருபையினால், நாங்கள் கல்வாரியின் இரத்தத்தினால் கழுவப்பட்டோம் என்றும், எங்கள் இருதயங்களில் விசுவாசத்தைக் கொண்டவர்களாய், அவர் இன்று வருவாரானால், "ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்" என்று சொல்லும் அளவிற்கு நாங்கள் ஆயத்தமுள்ளவர்களாய் இருக்கிறோம் என்றும் அறிந்திருக்கிறோம்.
பாவம் பெருகி வருவதை நாங்கள் காண்கிறோம். பாவத்தின் விளைவினால் உலகம் தடுமாறிக் கொண்டிருப்பதாக தோன்றுகிறது. மது அருந்துதல், சூதாடுதல், குடித்து ஆடுதல், நிர்வாணம் போன்றவை: ஓ, தேவனே, ஜனங்களின் அசுத்தமும், அழுக்கும், சேறும். ஆண்டவரே, அவர்கள் மாத்திரம் உணர்ந்தால்!தேவனுக்கு விரோதமான அப்படிப்பட்ட ஆடைகளை அணிந்து தெருவில் செல்லும் அந்த பெண்கள், அவர்கள் பூச்சியும் தூசுமாக இருக்கிறார்கள் என்றும், இன்னும் ஒரு வாரத்தில், அவர்கள் பெரிதாக எண்ணிக் கொண்டிருக்கும் அந்த சரீரத்தை பூச்சிகள் தின்னக்கூடும் என்பதை உணருகின்றார்களா? அப்பொழுது அவர்கள் ஆத்துமா தேவனற்றதாய், கிறிஸ்துவற்றதாய், நம்பிக்கையற்றதாய் நித்தியத்தில் இருந்து, அவருடைய வருகையின்போது அழிக்கப்படும். ஓ, தேவனே, எச்சரிப்பின் சத்தத்தை எங்களுக்கு அளித்து, வரப்போகும் ஆபத்தைக் குறித்து ஒவ்வொரு ஆத்துமாவையும் நாங்கள் எச்சரிக்கும்படி செய்யும்.



26  இன்று எங்களோடிரும். எங்களுக்கு ஞானத்தின் வார்த்தைகளைத் தாரும். பிரசங்கியின் புத்தகத்தில் சாலொமோன் கூறின விதமாக, நாங்கள் புத்தியாய் கட்டும் ஞானவான்களாக, இந்த சபையின் மேய்ப்பர்களாக இருக்க அருள்புரியும். ஆண்டவரே, நாங்கள் பேச வேண்டிய வார்த்தைகளை தேடிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், அவை சிறந்தவைகளாக விளங்கி, இன்று காலை இங்கு வந்துள்ள தேவையுள்ள ஒவ்வொரு இருதயத்தையும் பற்றிக் கொள்வதாக!
நாங்கள், மற்றவர்கள் எங்களைக் காண வேண்டுமென்று கருதி, இன்று உஷ்ணமான கூரையின் கீழ் ஒன்று கூடவில்லை. உம்மை நேசிப்பதனாலும், நீர் கூறுவதைக் கேட்க வேண்டுமெனும் விருப்பத்தினாலும் நாங்கள் இங்கு வந்துள்ளோம். நாங்கள் நேசிக்கும் எங்கள் நேசர் நீரே. உம்மிடமிருந்து வார்த்தைகளைக் கேட்க நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் ஏற்கனவே உம்மிடமிருந்து கேட்டவைகளுக்காக நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். அது எங்களிடம் நீடித்து நிற்கும். நாங்கள் உம்மிடம் காத்திருக்கும் இந்நேரத்தில், இன்றைக்கு எங்களுக்காக வைத்துள்ள பங்கை அளிப்பீராக! இயேசுவின் நாமத்திலும், அவர் நிமித்தமாகவும் கேட்கிறோம், ஆமென்.



27  இப்பொழுது… (ஒரு சகோதரி அந்நிய பாஷையில் பேச, ஒரு சகோதரன் அதற்கு அர்த்தம் உரைக்கிறார் - ஆசி).
ஆவியானவரின் இந்த உயர்த்தலுக்காக நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். இன்றைக்கு ஆவியானவர் நம்மிடம் பேசப்போகும் வார்த்தைகளைக் கவனமாய் கேட்கும்படி அவை நம்மை எச்சரிக்கின்றன. அவர் நமக்காக என்ன வைத்துள்ளார் என்று நாமறியோம். ஆனால் ஏதோ ஒன்றை அவர் நமக்கு அளிக்கவிருக்கிறார் என்று மாத்திரம் நாம் நிச்சயமாக அறிவோம். ஒருக்கால் அது உங்கள் மனதில் எழுந்துள்ள கேள்விக்கு அவரளிக்கும் பதிலாக இருக்கலாம். இன்றைய காலை செய்தியின் மூலம் அவர் அதை உரைக்கலாம். அல்லது இன்றிரவு ஆராதனையின் போது அவர் கூறலாம். வார்த்தையை கிரகித்துக் கொள்ளும்படிக்கு அவர் யாரையோ எச்சரிப்பது போல் தோன்றுகிறது.



28  இப்பொழுது எழுதப்பட்ட வார்த்தைக்கு நாம் திரும்பி, ஞாயிறு பள்ளி பாடத்திற்காக யாத்திராகமம் புத்தகத்துக்கு செல்லுவோம்.
ஞானஸ்நான ஆராதனை உண்டா? ("இல்லை, இன்று மாலை ஆறு மணிக்கு" என்று சகோ. நெவில் பதிலளிக்கிறார் -ஆசி). இன்று பிற்பகல் ஆறு மணிக்கு ஞானஸ்நான ஆராதனை இருக்கும்.



29  இப்பொழுது நாம் யாத்திராகமம் 17-ம் அதிகாரத்துக்கு சென்று, 5-ம், 6-ம் வசனங்களை வாசிப்போம்:
"அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் மூப்பரில் சிலரை உன்னோட கூட்டிக் கொண்டு, நீ நதியை அடித்த உன் கோலை உன் கையிலே பிடித்துக் கொண்டு, ஜனங்களுக்கு முன்னே நடந்து போ.
அங்கே ஓரேபிலே நான் உனக்கு முன்பாகக் கன்மலையின் மேல் நிற்பேன்: நீ அந்தக் கன்மலையை அடி; அப்பொழுது ஜனங்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும் என்றார்: அப்படியே மோசே இஸ்ரவேலர் மூப்பரின் கண்களுக்கு முன்பாகச் செய்தான்.
யாத். 17: 5-6
இதை ஞாயிறு பள்ளி பொருள் என்று அழைப்பேனானால், இன்றைய காலை பாடத்திற்காக, ''என்றென்றும் பிரசன்னமாயுள்ள கன்மலையின் தண்ணீர்" என்னும் பொருளைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.



30  இஸ்ரவேல் ஜனங்கள் எப்பொழுதுமே சரித்திரப் பிரகாரமான உதாரணமாகத் திகழ்கின்றனர் என்பதை நாமறிவோம். எகிப்திலிருந்து வெளிவரும் வரைக்கும், இஸ்ரவேலர் தேவனுடைய பிள்ளைகளாக இருந்தனர். அதன் பின்பு அவர்கள் தேவனுடைய சபையாக ஆகிவிட்டனர். ஏனெனில் அவர்கள் உலகிலிருந்த மற்றவர்களினின்று பிரித்தெடுக்கப்பட்டனர்.
நாமும் உலகிலுள்ள மற்றவர்களினின்று பிரித்தெடுக்கப்படும் போது சபையாக ஆகின்றோம். நாம் உலகத்துடன் பிணைத்திருக்கும் வரை, நாம் சபையில் இருப்பதில்லை. இது உங்களில் ஆழமாகப் பதிந்து, அது சேர வேண்டிய இடத்தை அடைகின்றது என்று நம்புகிறேன். பாருங்கள், நாம் உலகத்திலிருந்து வேறு பிரியும் வரைக்கும், நாம் சபையல்ல. நாம் நம்மை பிரித்துக் கொண்டு, அசுத்தமான ஜனங்களை விட்டு வெளிவந்து அவர்களுடன் தொடர்பு கொள்ளாமல், அவர்களுடைய பாவங்களில் பங்கு கொள்ளாமல் இருக்கவேண்டும். நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாமல், உங்களை உலகத்தின் காரியங்களிலிருந்து பிரித்துக் கொள்ளுங்கள்.
இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தில் இருந்தபோது, அவர்கள் தேவனுடைய ஜனங்களாயிருந்தனர். அவர்கள் வெளியே வரும்படி அழைக்கப்பட்டு, யாத்திரையைத் தொடங்கி வெளியே வந்தவுடன், அவர்கள் 'சபை' என்று அழைக்கப்பட்டனர். ஏனெனில் அவர்கள் அப்பொழுது தான் தங்களை மற்றவர்களினின்று வேறு பிரித்துக் கொண்டனர்.



31  'சபை' என்னும் சொல்லுக்கு வெளியே 'அழைக்கப்பட்டவர்கள்' என்று பொருள் - யாத்திரை, 'வெளியே அழைக்கப்படுதல்' நம் ஒவ்வொருவருக்கும், கிறிஸ்துவர்கள் என்னும் நிலையில், நமது வாழ்க்கையில் யாத்திரை ஒன்று நேர்ந்துள்ளது. ஒரு சமயம் நமது சகாக்களிடமிருந்து நாம் வெளியே அழைக்கப்பட்டோம். வித்தியாசமாய் நடந்து கொண்டு, வித்தியாசமாய் பேசும் வேறு வகையான ஜனங்களுடன் நாம் நடக்க வேண்டுமென்பதற்காக, ஒரு காலத்தில் நாம் ஐக்கியங் கொண்டிருந்த ஜனங்களின் மத்தியிலிருந்து நாம் வெளியே அழைக்கப்பட்டோம். அது நமது வாழ்க்கையில் நேர்ந்த ஒரு யாத்திரை.
இஸ்ரவேல் ஜனங்களை கர்த்தர் வெளியே அழைத்த முதற்கு, அவர்கள் நமக்கு ஒரு அருமையான உதாரணமாகத் திகழ்கின்றனர். அவர்களுக்கு ஒரு யாத்திரை உண்டாயிருந்தது. அவர்கள் உலக மக்களிடையேயிருந்து பிரிந்து வெளியே வந்து, தேவனுக்கென்று பிரித்தெடுக்கப்பட்ட ஜாதியாக, விசேஷித்த ஜனங்களாயினர். அவர்கள் கிருபாசனத்தின் நிழல்களின் கீழ் தொடர்ந்து, அதனுடன் வாழ்ந்தனர். கர்த்தர் அவர்களை எகிப்திலிருந்து வெளியே கொணர்ந்து, வாக்குத்தத்தம் பண்ணின தேசத்துக்குக் கூட்டிச் சென்றார்.



32  இந்த யாத்திரையின்போது, அவர்களுக்கு ஒரு ஆவிக்குரிய தலைவன் அளிக்கப்பட்டான். அவன் தான் மோசே. அவன் அபிஷேகம் பண்ணப்பட்ட ஒரு மகத்தான தீர்க்கதரிசி - ஒரு பெரிய மனிதன். அவன் தேவ பக்தியுள்ளவன், அவன் தேவ பக்தியுள்ளவனாய் பிறந்தான். கர்த்தர் அவனை தன் தாயின் கர்ப்பத்தில் இருந்தபோதே - அதற்கும் முன்னே - அழைத்தார். அந்த சந்ததிக்கு அவன் தலைவனாயிருந்து, அந்த ஜனங்களை யாத்திரையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக, அவர் அவனை உலகத்தோற்றத்துக்கு முன்பே முன்குறித்தார்.



33  சில நாட்களுக்கு முன்பு, இந்த கூடாரத்திலுள்ள சிறு பிள்ளைகளுக்கு நாடக வடிவில் ஒரு சிறு பிரசங்கம் செய்தேன். அதாவது, யோகெபேத்தும், மோசேயின் தகப்பனாகிய அம்ராமும், இஸ்ரவேலர் விடுவிக்கப்பட கர்த்தர் ஏதாவதொன்றைச் செய்ய வேண்டுமென்று அவரிடம் முறையிட்டனர். அப்பொழுது அம்ரான் தரிசனத்தில் ஒரு தேவ தூதனைக் கண்டான். அந்த தூதன் வடக்கு நோக்கினவனாய் நின்று கொண்டு, என்ன நேரிடப் போகின்றது என்று அம்ராமுக்கு அறிவித்தான். பின்பு மோசே பிறந்தான். அதன் பின்னர் அவர்கள் ராஜாவின் கட்டளைக்கும் அச்சுறுத்தலுக்கும் அஞ்சவேயில்லை. ஏனெனில் மோசேயின் மேல் தேவனுடைய கரம் இருந்ததை அவர்கள் அறிந்திருந்தனர். அத்துடன் அது முடிவு பெற்றுவிட்டது. அது உண்மை! ராஜா என்ன தான் கூறினாலும், அரசியல் உலகம் என்ன தான் கூறினாலும், மற்றவர்கள் என்ன தான் கூறினாலும் தேவனுடைய கரம் மோசேயின் மேல் இருந்ததை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர். ஆகவே அவனை முதலைகளின் மத்தியில் கொண்டு விடுவதற்கும் அவர்கள் அஞ்சவில்லை. இந்த முதலைகள் எபிரேய பிள்ளைகளைத் தின்று கொழுத்திருந்தன. எபிரேய பிள்ளைகளை இந்த முதலைகளுக்கு அவர்கள் ஆகாரமாக கொடுத்தனர். அப்படியிருந்தும் மோசே ஒரு சிறு நாணற் பெட்டியினுள் வைக்கப்பட்டு முதலைகளின் மத்தியில் விடப்பட்டான். அவர்கள் எதற்கும் அஞ்சவில்லை. தேவனுடைய கரம் மோசேயின் மேல் இருந்ததை அவர்கள் அறிந்திருந்தனர்.



34  அது போன்று நாமும் நமது மகத்தான தலைவராகிய பரிசுத்த ஆவியை அறிந்து கொண்டிருப்போமானால்! தேவன் அவரை அனுப்பியுள்ளார் அவர் நமது தலைவர். உலகம் என்ன கூறினாலும், அவர்கள் எவ்வளவு தான் உங்களை கேலி செய்து சிரித்தாலும், நாம் நமது தலைவரைப் பின்பற்றுவோம்! தேவன் பரிசுத்த ஆவியை நமது தலைவராக அனுப்பியுள்ளார். பாருங்கள்? "இன்னும் கொஞ்சக் காலத்திலே உலகம் என்னைக் காணாது. நீங்களோ என்னைக் காண்பீர்கள். நான் உலகத்தின் முடிவு பரியந்தம் உங்களோடிருந்து, உங்களுக்குள்ளே இருப்பேன்". எனவே நமது மகத்தான தலைவராகிய பரிசுத்த ஆவி நம்முடன் கூட இருக்கிறார். நாம் நமது தலைவரைப் பின்பற்றி, அவர் சொல்வதை அப்படியே செய்யவேண்டும். இந்த தலைவர் நம்மை பாதை தவறச் செய்யமாட்டார். அவர் எப்பொழுதும் வேதாகமப் பாதையில் நம்மை நடத்திச் செல்வார். அவர் ஒன்றிற்காக ஒருபுறம், வேறொருன்றிற்காக மற்றொருபுறம் விலகமாட்டார். அவர் வேதாகமப் பாதையில் சரியாக நிலைகொண்டு நடத்துவார்.



35  இஸ்ரவேல் ஜனங்களை பிரயாணத்தில் கொண்டு செல்ல மோசேக்கு ஒரு பாதை நியமிக்கப்பட்டிருந்தது - வனாந்தரத்தின் வழியாக, சிவந்த சமுத்திரத்தைக் கடந்து, யோர்தானைக் கடந்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் பிரவேசித்தல், மோசே வழி விலகவில்லை. தேவன் வழி விலகவில்லை. ஜனங்கள் வழி விலகினதால் தொல்லைகள் நேர்ந்தன. இவைகளைக் குறித்து சற்று சிந்திப்போம்.
மோசே அபிஷேகம் பண்ணப்பட்ட தலைவனாயிருந்தான். அவன் தேவனால் மாத்திரம் செய்யக்கூடிய அடையாளங்களையும் அற்புதங்களையும் ஜனங்களின் முன்னிலையில் செய்து காண்பித்தான். அவன் இஸ்ரவேலருடைய முன்னிலையிலும் மூப்பர்களின் முன்னிலையிலும் இவைகளைச் செய்து காண்பித்தபோது, எகிப்து தேசத்திலிருந்து அவர்களை விடுவித்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட அந்த நன்மையான தேசத்திற்கு அவர்களைக் கொண்டு செல்ல மோசே அபிஷேகம் பண்ணப்பட்டிருந்தான் என்னும் உறுதியை அவர்கள் பெற்றனர். மோசே தேவனின் நாமத்தில் இந்த மகத்தான செயல்களைப் புரிவதை அவர்கள் கண்டபோது, அவனைப் பின்பற்ற அவர்கள் சித்தம் கொண்டனர். அவன் அவர்களை வெளியே கொண்டு வந்து, சிவந்த சமுத்திரத்தின் வழியாக உலர்ந்த தரையில் கடக்கச் செய்து, வனாந்தரத்தின் வழியாக யாத்திரையில் கொண்டு சென்றான். அது அவர்களுக்கு சோதனையின் நேரமாயிருந்தது.



36  அவ்வாறே ஒருவன் கிறிஸ்துவை இரட்சராக ஏற்றுக் கொள்ளும் போது, எல்லாமே தலைகீழாகிவிட்டது போல் அவனுக்கு தோன்றுகிறது. அவன் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெறுவதற்கு முன்பு முதலாவதாக பரிசுத்தமாக்கப்படுதலின் முறைமையைக் கடந்து செல்ல வேண்டியவனாயிருக்கிறான். அவனுக்கு வாழ்க்கையில் சோதனையின் நேரம் அவசியமாயுள்ளது. உங்கள் அனைவருக்குமே அது உண்டாயிருந்தது. தேவனிடத்தில் வரும் தேவனுடைய புத்திரன் ஒவ்வொருவனும் முதலாவதாக சிட்சிக்கப்பட வேண்டும். நாம் சிட்சையை சகிக்க முடியாவிட்டால், நாம் தேவனுடைய புத்திரராயிராமல் வேசிப் பிள்ளைகளாயிருக்கிறோம் என்று வேதம் கூறுகிறது (எபி.12: 5-8) ஆனால் நாம், "தேவனிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது" (ரோமர் 8:28) என்பதை அறிந்து சிட்சையை சகிக்கும் போது, நாம் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாகிறோம். அதன் பின்பு அவர் மீட்கப்படும் நாள் வரைக்கும் நம்மை பரிசுத்த ஆவியினால் முத்தரிக்கிறார். பாருங்கள், அது தான் நாம் கடந்து செல்ல வேண்டிய சிட்சை, பிரயாசை. சரித்திரப் பிரகாரமாக முன்னடையாளமாகத் திகழும் இஸ்ரவேல் ஜனங்கள் இந்த சிட்சையை ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது.



37  அவர்கள் எகிப்திலிருந்த போது, கர்த்தர் மோசேயை அனுப்பினார். அவன் கோலை நீட்டினான். அப்பொழுது வண்டுகளும், பேன்களும் பூமியில் தோன்றின. அவன் சூரியனுக்கு நேராக நீட்டின்போது, அது அஸ்தமித்தது. அவன் தண்ணீரின் மேல் கோலை நீட்டினபோது, அது இரத்தமாக மாறினது. இஸ்ரவேலருக்கோ கோசேனில் மகிமையான தருணம் உண்டாயிருந்தது. அங்கு சூரியன் அஸ்தமிக்கவில்லை. அவர்களை வாதைகள் தாக்கவில்லை. அவர்கள் மகத்தான தருணத்தை அனுபவித்தனர்.
நீங்கள் முதலில் இரட்சிக்கப்பட்டபோது, உங்களுக்கு இருந்தது போல், பறவைகள் வித்தியாசமாகப் பாடின. எல்லாமே இனிமையாயிருந்தது. ஓ, என்னே! நீங்கள் முதலில் இரட்சிக்கப்பட்டபோது, எல்லாமே எப்படி இனிமையாக இருந்தது! ஆனால் அதன் பின்பு சோதனையின் நேரம் வந்தது - சிட்சிக்கப்பட வேண்டிய நேரம்: உங்களை உலகின் காரியங்களிலிருந்து பரிசுத்தமாக்குதல், "பாரமான யாவற்றையும், உங்களைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிடுதல்" (எபி. 12:1) மனிதரான நீங்கள் புகை பிடிப்பதையும், மது அருந்துவதையும், நீச்சல் அறைகளுக்குச் செல்வதையும், இரவு பூராவும் சீட்டாடுவதையும் நிறுத்திவிட்டு, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மேலுள்ள விசுவாசத்தைக் கொண்டு உங்களைப் பரிசுத்தமாக்க வேண்டியதாயிற்று. பெண்களாகிய நீங்கள் உங்கள் தலைமயிரை நீளமாக வளரச் செய்து, உங்கள் உடைகளை நீளமாக்கி, முன்னைவிட வித்தியாசமானவர்களாக ஆக வேண்டியதாயிற்று. பரிசுத்தமாக்கப்படுதலின் நேரம்! அநேக முறை அவர்கள் முரட்டாட்டம் பண்ணி, தங்கள் பழைய வழக்கங்களுக்குச் சென்றனர். அப்படிப்பட்டவர்கள் தேவனுடைய பிள்ளைகள் அல்ல. தேவனுடைய பிள்ளை கல்வாரியை நேராக நோக்கி அது அவனுடைய நன்மைக்காக என்று அறிந்து கொள்கிறான்.



38  சிறிது காலம் கழித்து, இஸ்ரவேலரின் மத்தியில் விழுந்து போதல் நேர்ந்தது. நெருக்கமான நேரம் வந்தபோது, அவர்கள் விழுந்து போகத் தொடங்கினர். அவர்கள், "நாம் எகிப்திலேயே தங்கியிருந்தால் நலமாயிருக்கும். நம்முடைய ஆத்துமாக்கள் இந்த மெல்லிய அப்பத்தை வெறுக்கின்றன" என்று கூறினதாக சரித்திரம் உரைக்கின்றது.
இந்நாளிலும், "ஓ, ஒவ்வொரு புதன் இரவன்றும் ஜெபக்கூட்டம்! ஒவ்வொரு ஞாயிறு காலையிலும் மறுபடியும் சபைக்கு போக வேண்டியதாயுள்ளது. நாம் என்ன கேட்கிறோம். மீண்டும் மீண்டும் அதையே கேட்கிறோம். அதே போதகர் நின்று கொண்டு பிரசங்கம் செய்கின்றார்: பாடல்கள்; மீண்டும் அதுவே" என்கின்றனர். அப்படியானால் நீங்கள் கடமைக்காக அங்கு செல்கின்றீர்கள். தேவனை ஆராதிப்பவர்களாக நீங்கள் அங்கு செல்லவில்லை. ஆராதிப்பவன் தேவனை ஆராதிக்கவும், தன் தேவனுடைய முன்னிலையில் தன் இருதயத்திலுள்ளதை தெரிவிக்கவும், அவர் செய்த நன்மைகளுக்காக அவரைத் துதிக்கவும் அங்கு செல்கிறான். அவன் ஒவ்வொரு வார்த்தையையும் இறுகப் பற்றிக் கொள்கிறான்.



39  அது காதல் விவகாரத்தைப் போன்றது. நீ ஒரு பெண்ணுடன் கடமை கட்டாயத்துக்காக செல்வாயானால், அல்லது வாலிப பெண்ணாகிய நீ, "என் அம்மா சொல்வதால் இந்த பையனுடன் செல்கின்றேன். எனக்கு அவனைப் பிடிக்கவில்லை" என்பாயானால், அவன் வந்து உன்னை பார்ப்பதில் உனக்கு ஒன்றும் கிடைக்காது. பையன் பெண்ணுடன் கடமைக்காக சென்றாலும், எல்லாம் ஒன்று தான்! நீ அவளுடன் செல்லும் போது, அவள் உன்னை சலிப்படைய செய்கிறாள். உன் தாய் நீ அவளுடன் செல்வதை விரும்புகிறாள். ஏனெனில் அந்த பெண் உன் தாய்க்கு பிடித்தமானவள். அது உன்னை சலிப்படைய செய்கிறது. காதல் விவகாரம் எதுவும் உங்களிடையே இல்லை. நீ கவலைப்படுவதில்லை. உன் வழியை நீ மாற்றிக் கொள்ள விரும்புவதில்லை. அவளை சென்று காண நீ விரும்புவதில்லை… அது ஒரு பயங்கரமான காரியம். அவன் உன்னை காண வரும் போது, அவன் சீக்கிரம் சென்றுவிட்டால் நலமாயிருக்கும் என்று நினைப்பாயானால்!
"அவர் ஏன் நீண்ட நேரம் பிரசங்கம் செய்கிறார்? இதெல்லாம் என்ன?" என்று நீ கூறுவதும் அவ்வாறேயுள்ளது, நீ அன்பு கொள்ளாமல் இருக்கிறாய்.
ஆனால், இன்று காலை பரிசுத்த ஆவியானவர் உனக்கு எச்சரிக்கை விடுத்தது போல், நீ ஒவ்வொரு வார்த்தையையும் இறுகப் பற்றி கொண்டால்! ஒவ்வொரு வார்த்தையும் இறுகப் பற்றிக் கொள்ளுதல். அதைக் குறித்துதான் ஒருக்கால் அவர் உங்களுக்கு உரைத்திருப்பார். இறுகப் பற்றிக் கொள்ளுதல்! அது நித்திய ஜீவன்- தேவனுடைய வார்த்தை ஒவ்வொன்றும் சூழ்நிலை என்னவாயிருப்பினும், சபைக்கு செல்லுதல் மகிழ்ச்சியூட்டுகின்றது. அது வெயிலானாலும், குளிரானாலும், அலட்சியமானாலும், ஜனங்கள் வீண் சந்தடி செய்தாலும், உறுமினாலும் - அவர்கள் என்ன செய்தாலும் - தேவனுடைய வார்த்தையைக் கேட்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றால், நீ உண்மையாகவே கிறிஸ்துவின் மேல் அன்பு கொண்டிருக்கிறாய். நீ சபைக்குச் செல்ல பிரியப்படுவாய்.



40  "அன்பே, ஞாயிறு காலை வந்துவிட்டது. நாம் பிள்ளைகளுக்கு முகம் கழுவி, அங்கு செல்ல வேண்டும். அது சலிப்பாயுள்ளது" என்பாயானால் நீ அவர்பால் அன்பு கொள்ளவில்லை.
நீ உண்மையாகவே அவரில் அன்பாயிருந்தால், ஞாயிறு காலை வரும் வரை உன்னால் காத்திருக்க முடியாது. அவர்களுடன் ஒன்று கூட நீ எப்படியாவது சென்றுவிடுவாய். தேவனுடைய ஜனங்கள் உன்னை சலிப்படையச் செய்வதில்லை. அவர்கள் உன் சகோதரரும் சகோதரிகளுமாயுள்ளனர். "சோர்கமில் கிடைக்கும் வெல்லப்பாகு குளிர் மிகுந்த காலத்தில் கெட்டியாவது போல் நீங்கள் ஆகிவிடுகின்றீர்கள்" என்று நான் கூறுவதுண்டு. அதை ஊற்ற முடியாது அது ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்ளும். அது இறுகிவிடும். இந்த உதாரணம் அவ்வளவு நல்லதல்ல. எனினும் நான் கூற விரும்புவதை இந்த உதாரணத்தின் மூலம் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். பாருங்கள், நீங்கள் ஒருவரோடொருவர் ஒட்டிக் கொண்டிருக்கின்றீர்கள். குளிர் அதிகமாகுந்தோறும். அது இன்னும் இறுக்கமாக ஒட்டிக் கொள்கின்றது. அப்படித்தான் நாம் இருக்க வேண்டும்.
உலகின் நண்பர்கள் கைவிடும் போது நான்
அவரை இன்னும் இறுகப்பற்றிக் கொள்கிறேன்.



41  நாம் முக்கியமானவர்கள் என்பதனால் ஒருவரிலொருவர் அன்பு கூறுவதில்லை. நம் ஒவ்வொருவருக்குள் இருக்கும் கிறிஸ்துவிலேயே நாம் அன்பு கூறுகிறோம். நமக்குள் வாசம் செய்யும் தேவனில் நாம் அன்பு கூறுகிறோம். நாம் ஒன்று கூட பிரியப்படுகிறோம். இந்த பழைய பாடலை நாம் பாடுவதுண்டு.
நாம் இருதயத்தைக் கிறிஸ்தவ
அன்பினால் பிணைக்கும் உறவு
ஆசிர்வதிக்கப்படுவதாக ஒரே சிந்தை கொண்டுள்ள
ஐக்கியம் பரத்தில் உள்ளதற்கு ஒப்பானது.
பாருங்கள், ஒரே சிந்தை கொண்டுள்ள ஐக்கியம் பரத்தில் உள்ளதற்கு ஒப்பானது.
பிதாவின் சிங்காசனத்திற்கு முன்பாக
நமது ஆர்வமான ஜெபத்தை ஊற்றுகிறோம்.
நமது பயங்கள், நமது நம்பிக்கைகள்,
நமது குறிக்கோள்கள் நமது செளகரியங்கள்,
நமது கவலைகள் எல்லாமே ஒன்றாயுள்ளது.
பாருங்கள்? ஆம், ஐயா! ஒருவர் ஆசிர்வதிக்கப்பட்டால், நாம் அனைவருமே மகிழ்ச்சி கொள்கிறோம். ஒருவர் துக்கப்பட்டால், நாம் அவருடன் துக்கப்படுகிறோம். நாம் அனைவரும் ஒன்றாயிருக்க விரும்புகிறோம். நாம் அப்படித்தான் இருக்க வேண்டியவர்களாயிருக்கிறோம்.



42  இஸ்ரவேல் ஜனங்களும் அவ்வாறே இருக்க வேண்டியவர்களாயிருந்தனர். ஆனால் அது அவர்களுக்கு பாரமாகிவிட்டது. "ஓ, இந்த பழைய மெல்லிய அப்பம். தூதர்களின் அப்பம்! எங்களுக்கு பிடிக்கவில்லை. எங்கள் ஆத்துமாக்கள் இந்த அப்பத்தை வெறுக்கின்றன. எல்லாமே தவறாயுள்ளது. ஒவ்வொரு இரவும் வானத்திலிருந்து விழும் இந்த மன்னாவைக் காட்டிலும் எகிப்திலுள்ள வெள்ளைப் பூண்டையும் கொம்மட்டிக் காயையும் புசித்தால் நலமாயிருக்கும்" என்றனர். பாருங்கள், அவர்களுடைய இருதயங்கள் யாத்திரைக்கு ஆயத்தமாகவில்லை.
ஒரு மனிதனோ அல்லது ஸ்திரியோ சபைக்குச் செல்வதைக் குறித்து குறை கூறி, அங்கு செல்ல சலிப்படைந்தால், அவர்கள் யாத்திரைக்கு ஆயத்தமாகவில்லை. அது உண்மை, எங்கோ தவறுள்ளது.
ஓ, நீங்கள் தேவனில் அன்பு கூர்ந்து, நீங்கள் அனைவருமே ஒருமித்து பரலோகத்துக்குச் செல்வதாக எண்ணியிருக்கும்போது!
என்னே ஐக்கியம், என்னே தெய்வீக சந்தோஷம்
நித்திய கரத்தின் மேல் சார்ந்திருப்பதென்பது
என் ஆண்டவர் இவ்வளவு அருகாமையில் இருக்க,
என்னே ஒரு ஆசிர்வாதமான சமாதானம்
அவருடைய நித்திய கரத்தின் மேல்
சார்ந்திருப்பதென்பது
இந்த பாடல்களை நாம் பாடுகிறோம்:
நமது பரஸ்பர துன்பங்களைப்
பகிர்ந்து கொள்கிறோம்
நமது பரஸ்பர பாரங்களைச்
சுமந்து கொள்கிறோம்
அடிக்கடி நாம் ஒவ்வொருவருக்காகவும்
அனுதாபக் கண்ணீர் வடிகின்றது.
நாம் பிரிந்துசெல்லும் போது நமக்குள்
அது வேதனையை விளைவிக்கிறது
ஆயினும் நாம் இன்னமும்
இருதயத்தில் இணைந்தவர்களாய்
அடுத்த ஜெப கூட்டத்தில்
சந்திப்போமென நம்புகிறோம்
(ஆம், ஐயா! இருதயத்தில் இன்னமும் இணைந்துள்ளோம்!)



43  நீங்கள் யாத்திரைக்காக ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறீர்கள். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்குள் பிரவேசிக்க நீங்கள் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறீர்கள். சோதனையின் நேரம், அது ஆபத்தான இடம் - வனாந்தரம், சோதனையின் நேரம்.
இஸ்ரவேல் ஜனங்கள் சோதனை நேரத்தின் போது, ஒருவரோடொருவர் சண்டையிட்டுக் கொண்டு, வீண் சந்தடி செய்து, அப்பத்தை வெறுத்தனர். அவர்கள் எகிப்துக்கு திரும்பிச் செல்ல விரும்பினர்.
பின்பு அவர்கள் தங்கள் தலைவனேயே குறை கூறினர். ஓ, அவன் தன்னை தலைவன் என்று காண்பித்து, தேவன் அதை நிரூபித்த பின்பும், அவன் அவர்களை வழி தவறச் செய்கின்றான் என்று அவர்கள் பயந்தனர். "ஒருக்கால் நாம் சற்று மூட வைராக்கியமுள்ளவர்களாய் நடந்து கொண்டுவிட்டோம். ஒருக்கால் நாம் வழி தவறிவிட்டோம்'' அல்லது இப்படிப்பட்ட வேறெதாவது ஒன்றைக் கூறுதல். அவர்கள் தேவனுக்கும் அவரளித்த தலைவனாகிய மோசேக்கும் விரோதமாய் முறுமுறுத்தனர்.



44  "வார்த்தைக்கு அர்த்தம் இதுவா இல்லையாவென்று எனக்குத் தெரியாது. பரிசுத்த ஆவியைக் குறித்து எனக்குத் தெரியாது. அதைக் குறித்து எனக்கு சிறிது சந்தேகம் தோன்றுகிறது. மற்றவர்கள் அதை விசுவாசிக்கிறதில்லையென்று எனக்குத் தெரியும்" என்று கூறும் நிலைக்கு நீங்கள் வரும்போது, நீங்கள் எகிப்துக்கு திரும்பி சென்றுவிடுகின்றீர்கள். பாருங்கள்?
நீங்கள் பாதையில் நிலைக்க வேண்டுமென்று உண்மையாய் தீர்மானம் செய்வீர்களானால், பரிசுத்த ஆவியாகிய தலைவருடன் நிலை கொள்ளுங்கள். வார்த்தையில் நிலை கொள்ளுங்கள். நீங்கள் ஆவியில் நிலைகொள்ளும் போது, அது உங்களை வார்த்தையில் நிலை கொள்ள செய்யும். அது உண்மை. அது உங்களை வார்த்தையின் பாதையில் வழி நடத்திச் செல்லும். அதைக் குறித்து நீங்கள் பயப்பட வேண்டாம். அது உங்களுக்கு தீங்கு செய்யாது. அது உங்களுக்கு உதவி செய்யும். நீங்கள் காயப்பட்டால், அவர் உங்களுக்கு உதவி செய்வார். உங்கள் காயங்கள் அனைத்தையும் பரிசுத்த ஆவியானவர் ஆற்றுவார்.



45  அவர்கள் பிரயாணம் செய்து, ஓரேப் என்னுமிடத்தை அடைந்தனர் என்று நாம் பார்க்கிறோம். ஓரேப் என்றால், 'உலர்ந்த இடம்', 'பாலைவனம்' என்று அர்த்தம்.
நாம் சபையில் ஒருவரோடொருவர் கொண்டுள்ள ஐக்கியத்தினின்றும், பரிசுத்த ஆவியானவருடன் கொண்டுள்ள ஐக்கியத்தினின்றும் விலகி விடும்போது, அது நம்மை உலர்ந்த இடம் அல்லது பாலைவனத்திற்கு கொண்டு வருகிறது. அங்கு ஒன்றுமே உயிர் வாழ்வதில்லை. ஒட்டிக் கொள்ளும் பிசினைக் கொண்ட முட்செடி மாத்திரமே அங்குள்ளது. அது என்ன தெரியுமா? அது தண்ணீர் பெறாத மிருதுவான இலை. தண்ணீர் இல்லாததனால் அது இறுகச் சுற்றி கொண்ட பிசினாகிவிட்டது. அப்படிப்பட்ட ஒருவரை காணும் போது, அதற்கு மாத்திரம் சரியானபடி தண்ணீர் கிடைத்திருந்தால், அது ஒரு விலையேறப்பெற்ற ஆத்துமாவாயிருக்கும். அதற்கு பதிலாக அது தன்னை இறுகச் சுற்றிக் கொண்டு பிசினாகிவிட்டு, எல்லாவற்றிலும் குறை கண்டு பிடிக்கின்றது. அதற்கு சற்று தண்ணீர் கிடைத்தால் போதும் ஒரு எழுப்புதல். அவ்வளவுதான், தேவனிடமிருந்து ஒரு புத்துணர்ச்சி. அதற்கு தண்ணீர் கொடுத்தால், அது தன்னை அவிழ்த்துக் கொள்ளும்.



46  ஆனால் அம்மாதிரியான இடத்தில் வசிப்பவர்கள், அந்த சூழ்நிலையின் காரணமாக அவதியுற வேண்டியவர்களாய் இருக்கின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழ விரும்புகிறவர்கள், வசைச் சொற்களும், வீண் சந்தடியும், சண்டையும், கோபமும் உள்ள இடத்தில் அந்த சூழ்நிலையை அனுசரித்து வாழத்தான் வேண்டும். அவ்வளவுதான், ஆனால் அங்கு வசிக்க வேண்டுமெனும் அவசியம் நமக்கில்லை.
இந்த ஓரேப் என்னுமிடத்தில் தேவனுக்கு ஜனங்களின் மேல் சோர்வு உண்டானது. ஏனெனில் இவர்கள் இவ்விடத்தில் பிரவேசித்து இந்நிலையையடைந்தனர். அவர்கள் அதில் பிரவேசிக்க கூடாதென்று கருதி, தேவன் அவர்களை அந்த இடத்தை சுற்றி நடக்கச் செய்தார். ஆனால் அவர்களோ பாதை தவறி, பிரதான பாதையை விட்டு, பக்க பாதையில் நுழைந்தனர். இதன் விளைவாக தேவன் ஒரு பயங்கரமான செயலைப் புரிய வேண்டியதாயிற்று… மோசே எகிப்து தேசத்தை நியாயந்தீர்த்த அந்த நியாயத்தீர்ப்பின் கோலை எடுத்து, தண்ணீரைக் கொண்டு வர, கன்மலையை அடிக்கும்படி தேவன் செய்தார்.
இதை நாம் புரிந்து கொள்வோமானால், இதில் ஒரு அழகிய பாடம் அடங்கியுள்ளது. நாம் நிலைதவறி, உலகக் காரியங்களில் சிக்குண்டதனால், தேவன் உலகத்தின் நியாயத்தீர்ப்பை கையிலெடுத்து, நாம் சுயாதீனராவதற்காக, தமது சொந்த குமாரனைக் கல்வாரியில் அடிக்க வேண்டியதாயிற்று. நான் கூறுவது உங்களுக்குப் புரிகின்றதா?



47  இஸ்ரவேல் ஜனங்கள் அங்கு அடைந்தவுடன், அவர்களுக்குத் தண்ணீர் அளிக்க வேண்டும் என்பதற்காக, இந்த உலர்ந்த இடம் கல்வாரியாக ஆக்கப்பட்டது. அங்கு கர்த்தர் மோசேயை நோக்கி, "உன் கோலை எடுத்துக் கொண்டு, உன்னோடு மூப்பரைக் கூட்டிக் கொண்டு போ, நான் உனக்கு முன்பாக கன்மலையின் மேல் நிற்பேன்" என்றார். இந்த கன்மலை கிறிஸ்துவே. மோசே எந்த கோலை உபயோகித்து எகிப்தின் மேல் நியாயத்தீர்ப்பை வரவழைத்தானோ, அந்த கோலை அவன் எடுத்துக்கொண்டு, தேவனுடைய நியாயத்தீர்ப்பை அந்த கன்மலையின் மேல் அடித்து சுமத்தினான். பாருங்கள்? ஜனங்களுடைய பாவங்களை அவன் கோலில் எடுத்துக் கொண்டான். அதைக் கொண்டு அடிப்பதற்கு பதிலாக, அவன் கன்மலையை அடித்தான். அந்தக் கன்மலை, தேவனுடைய கிரியையின் மூலம், இரட்சிப்பைக் கொணர்ந்து, அழிந்து போகின்ற ஜனங்களுக்கு தண்ணீர் அளித்தது. அது மரித்து கொண்டிருக்கும் ஜனங்களுக்கு ஜீவனைக் கொண்டு வந்தது. அதை தான் தேவன் உனக்கும் எனக்கும் செய்தார். அவர் நியாயத்தீர்ப்பின் கோலை தமது கையிலெடுத்து, உங்கள் பாவங்களையும் என் பாவங்களையும் அதில் சுற்றிக் கொண்டார். அது நம்மை அடித்திருக்க வேண்டும். ஆனால் அது கிறிஸ்துவை அடித்தது. அவரிலிருந்து தண்ணீர் புறப்பட்டு வந்தது அதாவது 'ஆவி', நமக்கு ஜீவனையளிக்க பரிசுத்த ஆவி அவரிலிருந்து புறப்பட்டு வந்தது. இப்பொழுது நாம் நித்திய ஜீவனைப் பெற்றுள்ளோம். அந்த கன்மலை கிறிஸ்துவே. இதை நாம் கவனிக்க வேண்டும்.



48  இந்தக் கன்மலையை கற்பனை செய்து வரைந்த அநேக ஓவியங்களை நான் கண்டிருக்கிறேன். அவைகளில் ஒன்று கண்டிக்க உகந்தது. அந்த ஓவியத்தில், ஒரு மலையின் மேல் ஒரு சிறு கற்பாறை வரையப்பட்டிருந்தது. மோசே அதை அடித்த பின்பு, அதிலிருந்து தண்ணீர் சொட்டு சொட்டாய் விழுந்து, இஸ்ரவேல் ஜனங்கள் தேநீர் கோப்பையினால் தண்ணீரைப் பிடிப்பது போல் வரையப்பட்டிருந்தது. அது யாரோ ஒரு ஓவியனின் கற்பனை.
ஆனால் இந்த கன்மலையிலிருந்து புறப்பட்ட தண்ணீர் இருபது லட்சம் ஜனங்கள் மாத்திரமல்ல, காளைகள், ஒட்டகங்கள் இவைகளின் தாகத்தையும் தீர்த்தது. அது கன்மலையிலிருந்து புறப்பட்டு வந்த வெள்ளப் பெருக்கு.



49  இன்றைக்கு அவர்கள் பரிசுத்த ஆவியாகிய கிறிஸ்துவை அப்படித் தான் சித்தரிக்கின்றனர், "அது துளி துளியாய் விழும் ஒன்று" என்பதாக. பாருங்கள், தேவன் இருக்கிறார் என்று விசுவாசிக்க போதுமான அளவு. அது அப்படியில்லை.
அது திரளான தண்ணீ ர்! தாவீது, "என் பாத்திரம் நிரம்பி வழிகிறது" என்றான். அது பரிசுத்த ஆவி பெருக்கெடுத்து வேகமாய் பாய்தல்.
ஜனங்கள் அதைக் கண்டு பயப்படுகின்றனர். சிலர், "நான் சற்று ஆழமாகச் சென்றால், இதை அதை செய்துவிடுவேன் என்று பயப்படுகிறேன். சற்று அதிக தூரம் இதில் சென்றவர்களை உங்களுக்கு நான் காண்பிக்க முடியும்" என்கின்றனர். ஆனால் போதிய அளவு தூரம் செல்லாதவர்களை நீங்கள் சுட்டிக் காண்பிப்பதில்லையே! அப்படி போதிய அளவு தூரம் செல்லாதவர்களைக் குறித்து என்ன சொல்கிறீர்கள்.



50  மாம்சீகமான செயல்களில் ஈடுபட்டு, தவறான பாதையில் வழிவிலகிச் சென்ற சிலர் உள்ளனர். தேவன் அல்ல, மனிதர் தான் அவ்விதம் செய்தனர். ஏனெனில் அவர்களை வழி நடத்த சரியான தலைவன் அவர்களுக்கு இல்லாததனால் தான், அதன் விளைவாக அவர்கள் வழிதவறி, மூட அபிமானத்தில் (fanaticism) சென்றுவிட்டனர். உடனே முழு உலகமும் - பிசாசு - அவர்களைச் சுட்டிக்காட்டி, "பார்த்தீர்களா?பார்த்தீர்களா?" என்கிறது.
ஆனால் இந்த பாதையில் இன்னும் துவங்காத கோடிக் கணக்கானவர்களை இன்று காலையில் நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அவர்களைக் குறித்தென்ன? அவர்களின் நிலையைப் பாருங்கள். அவர்கள், "பெந்தெகொஸ்தேயினர் ஒழுக்கமற்றவர்கள், அநாகரீகமுள்ளவர்கள்" என்றெல்லாம் குறை கூறுகின்றனர். ஆனால் ஹக்ம்மனை நாம் எடுத்துக் கொள்வோம். உலகிலேயே அதிகம் படித்தவர்களில் அவர் ஒருவர். அவர் அறுபது லட்சம் ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும் கொன்று போட்டாரே! அப்படிப்பட்ட ஒருவரை நீங்கள் சுட்டிக் காண்பிப்பதில்லையே!



51  ஆனால் படிப்பறியாத, வேதாகமத்திலுள்ள பெயர்களையும் கூட சரியாகப் படிக்கத் தெரியாத ஒருவர், ஏதாவதொரு தவறைச் செய்துவிட்டால் அல்லது ஏதாவதொன்றை தவறாகக் கூறிவிட்டால், உடனே செய்தித்தாள்கள், "அவர்கள் நம்பத் தகாதவர்கள்" என்று வெளியிடுகின்றன.
அவர்கள் நம்பத் தகாதவர்கள் என்றால், கல்வியறிவு பெற்று, நுண்ணறிவு படைத்தவர்கள் குறித்தென்ன? அடால்ஃப் ஹிட்லரைப் பாருங்கள். இன்றுள்ள உலகில் அறிவில் சிறந்தவர்களைப் பாருங்கள். அவர்கள் மட்டும் என்ன? "பெண் வாத்தில் கிடைக்கும் சமையற் குழம்பு தான் ஆண் வாத்திலும் கிடைக்கும்" என்னும் ஒரு பழமொழி உண்டு.
நீங்கள் செய்ய வேண்டியது என்னவெனில், பரிசுத்த ஆவியின் உதவியைக் கொண்டு நன்மை, தீமையைப் பகுத்தறிந்து, நன்மையை எடுத்துக் கொள்ளுதலாகும்.



52  இவர்களுக்கிருந்த கல்வாரியிலிருந்து ஜனங்களுக்காக தண்ணீர் பெருக்கெடுத்து வேகமாய் பாய்ந்தது என்று காண்கிறோம்.
இஸ்ரவேல் ஜனங்கள் கன்மலையிலிருந்து புறப்பட்டு வந்த தண்ணீரைக் குடித்து விட்டு, சொட்டு சொட்டாய் தண்ணீர் விழும் அந்த கன்மலையை அங்கேயே விட்டு விட்டு, ஒட்டகங்களின் மேல் சுமையேற்றி, குதிரைகளுக்கு சேணம் கட்டி, அவர்களும் பிள்ளைகளும் வேறொரு இடத்துக்கு பிரயாணம் செய்ததாக சிலர் நினைக்கின்றனர். அது தவறு.
அந்தக் கன்மலை அவர்களோடு கூட சென்றது. அந்த தண்ணீர் அவர்களோடு கூட சென்றது. 1 கொரிந்தியர் 10-ம் அதிகாரம் 11-ம் வசனம் என்று நினைக்கிறேன். அந்தக் கன்மலை அவர்களோடு கூட சென்றதாக அதில் எழுதப்பட்டுள்ளது (4ம் வசனம் - தமிழாக்கியோன்) அன்று முதல் அவர்கள் எங்கு சென்றாலும் அந்தக் கன்மலை அவர்களோடு கூட சென்றது.



53  என்ன அழகான உதாரணம்! இன்று விசுவாசிக்கு அது இறுகப்பற்றிக் கொள்ளக் கூடிய ஒரு நங்கூரமாய் அமைந்துள்ளது. அதாவது ஒரு தரம் அடிக்கப்பட்ட அந்தக் கன்மலை; கல்வாரியிலிருந்து ஒரு காலத்தில் புறப்பட்ட தண்ணீர்; நாம் எங்கு சென்றாலும் நம்முடன் செல்கின்றது என்பது, ஓ, என்னே! அது நாம் ஓரிடத்தை அடைந்துவிட்டு "நேற்றுக்கு முந்தின நாள் நமக்குத் தண்ணீர் கிடைத்தது" என்று கூறுவதல்ல. இன்றைக்கும் நமக்குத் தண்ணீர் உண்டு - இந்த இடத்திலேயே, ஏனெனில் அந்தக் கன்மலை கிறிஸ்துவே. கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.
பாருங்கள், அந்தக் கன்மலை இஸ்ரவேல் ஜனங்களைப் பின்தொடர்ந்தது (ஆங்கில வேதாகமத்தில், "They drank of the Spiritual Rock that followed them" என்று எழுதப்பட்டுள்ளது. தமிழில், அவர்களோட கூடச் சென்ற ஞானக் கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்" என்றுள்ளது - தமிழாக்கியோன்). அவர்கள் அதைப் பின் தொடரவில்லை. கன்மலை தான் அவர்களைப் பின்தொடர்ந்தது. ஆமென், இஸ்ரவேல் ஜனங்கள் பிரயாணம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்று, அதாவது நேர்ப்பாதையில் சென்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை அடைய வேண்டும். கன்மலையும் தண்ணீரும் அவர்களைப் பின் தொடர்ந்தது. 1கொரிந்தியர் 10-ம் அதிகாரம் அவ்வாறு கூறுகின்றது. "…அந்தக் கன்மலை கிறிஸ்துவே"



54  தேவன் ஜனங்களுக்கு அளிக்கவேண்டிய நியாயத்தீர்ப்பை எடுத்து அதை கிறிஸ்துவின் மேல் வைத்து, அவரை அடித்தார். நீங்கள் கவனித்தீர்களா? அன்று முதல் அந்தக் கன்மலையில் ஒரு பிளவு இருந்தது. மோசே அடித்த இடத்தில் ஒரு பிளவு ஏற்பட்டது. அவ்வாறே கிறிஸ்துவும் அடிக்கப்பட்ட போது, அவர் சரீரத்தில் ஒரு பிளவு உண்டானது. "அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம்", அந்த ஜீவனிலிருந்து, இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் ஜீவத் தண்ணீருள்ள நதிகள் புறப்பட்டு வந்தது.



55  இந்த ஜீவனை நாம் பெற வேண்டுமானால்… கிறிஸ்துவின் ஜீவன் சபையில் தங்கியுள்ளது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அல்லேலூயா! ஓ, அடுத்த பத்து நிமிடங்களுக்கு நமது சிந்தனைகளை இதில் நங்கூரமிட்டால் நலமாயிருக்கும்! கிறிஸ்து சபையை விட்டு விலகுவதில்லை. "இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்" (மத். 28:20) ஜனங்கள் தாம் கிறிஸ்துவை விட்டு விலகிச் செல்கின்றனர். கிறிஸ்து ஜனங்களைவிட்டு விலகுவதில்லை. ஜனங்கள், தங்கள் அவிசுவாசத்தின் காரணமாக, கிறஸ்துவை விட்டு விலகுகின்றனரே தவிர, கிறிஸ்து ஜனங்களை விட்டு விலகுவதில்லை
இஸ்ரவேல் ஜனங்கள் நதியைவிட்டுச் சென்றனர், நதி இஸ்ரவேல் ஜனங்களை விடவில்லை, பாருங்கள்? கன்மலையும் தண்ணீரும் இஸ்ரவேல் ஜனங்களை பின் தொடர்ந்ததாக வேதம் வெளிப்படையாய் கூறுகின்றது. அவர்கள் எங்கு சென்றாலும், அதுவும் சென்றது.



56  இன்று காலை நமக்கு நேரமிருந்தால், யோசுவாவின் புத்தகம் முதலாம் அதிகாரத்துக்கு வேதத்தைத் திருப்பி "உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன். நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார். எந்த மனிதனுக்கும் பயப்படாதே, திடமனதாயிரு, உன் காலடி மிதிக்கும் இடம் எதுவாயிருப்பினும் அங்குநான் உன்னோடே கூட இருப்பேன்" என்று உரைக்கும் பாகத்தைப் படிக்க எனக்கு விருப்பமுண்டு - கர்த்தர் யோசுவாவுடன் செல்லுதல்!
அதே தேவன் இன்று காலையில் அவருடைய சபையுடன் கூட சென்று கொண்டிருக்கிறார். அந்த ஊற்றுலிருந்தும் நாம் குடிப்போமாக! நீங்கள் எங்கு காலடி வைத்தாலும், உங்களுக்குத் தண்ணீர் கொடுத்து ஜீவனையளிக்க தேவன் அங்கு உங்களோடிருப்பார். "காலத்தின் முடிவுபரியந்தம் நான் உங்களுடனே கூட இருப்பேன்" கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.



57  நீங்கள், "அப்படியானால் சகோ. பிரான்ஹாமே நாம் செய்ய வேண்டிய காரியங்களை நாம் ஏன் செய்வதில்லை?நமது வரங்களும் சபையிலுள்ள மற்றவைகளும், ஏன் அவை இருக்க வேண்டிய நிலையில் இல்லை? ஏன் நமது சபை தான் இருக்க வேண்டிய ஸ்தானத்துக்கு தன்னை உயர்த்திக் கொள்ளவில்லை? என்று கேட்கலாம்.
சோதனை நேரத்தின் போது ஜனங்கள் இஸ்ரவேலரைப் போல் பின்வாங்கிப் போகின்றனர். தேவன் அவர்களைக் கைவிட்டுவிட்டதாக அவர்கள் நினைக்கின்றனர்.
ஆனால் கன்மலை இஸ்ரவேலரை விடவேயில்லை என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். இஸ்ரவேலரோ கன்மலையை விட்டுவிட்டனர். கன்மலை எப்பொழுதுமே அவர்களோடு கூட உள்ளது என்பதை அவர்கள் மறந்துவிட்டனர். அது அங்கேயே இருந்தது. பாதையின் முடிவு வரை அது அவர்களுடன் சென்றது. அது அவர்களைப் பின் தொடர்ந்தது. அது பேசும் தூரத்துக்கும், கேட்கும் தூரத்துக்கும், காணும் தூரத்துக்கும் அப்பால் இல்லை.
கிறிஸ்துவும் அப்பால் இல்லை! இன்றைய சபையின் மத்தியில், அவர் பேசும் தூரத்துக்கு அப்பால் இல்லை. உங்களில் சிலர் பின்வாங்கிப் போய், தவறான காரியங்களைச் செய்து சந்தோஷத்தை இழந்திருக்கிறீர்கள். உங்கள் தண்ணீர் உலர்ந்துவிட்டது. நாம் பேசினால் அவர் கேட்கக்கூடிய தூரத்தில் தான் அவர் இன்னமும் இருக்கிறார். அவர் உங்களைப் பின்தொடருகிறார். உங்கள் ஒவ்வொரு அசைவையும், நீங்கள் செய்யும் ஒவ்வொன்றையும் அவர் அறிவார். அவர் சாட்சிக்கு வர நீங்கள் அவரை அழைக்க வேண்டுமென்று ஆவலுள்ளவராயிருக்கிறார்.



58  இன்றைய மகத்தான பெந்தெகொஸ்தே அசைவு நீ அவரை சாட்சிக்கு அழைக்க வேண்டுமென்று தேவன் காத்துக் கொண்டிருக்கிறார். நீ பேசும் தூரத்தைக் காட்டிலும் அவர் அதிக தூரம் இல்லை. நாம் தவறு செய்து, பாவம்செய்து, புறமுதுகை அவருக்கு காட்டி, செய்யத்தகாத காரியங்களைச் செய்திருந்த போதிலும், அவர் நம்முடன் இருக்கிறார். நம்முடன் கூட இருப்பதாக கிறிஸ்து வாக்குரைத்துள்ளார்.
தண்ணீர் இஸ்ரவேல் ஜனங்களைப் பின் தொடர்ந்ததாக வேதம் உரைக்கின்றது. அவர்களுக்கு தாகம் ஏற்பட்டபோது தண்ணீர் அருகாமையிலுள்ளது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்.



59  இவை தேவனுடைய விதிகளுக்கு அடங்கியுள்ளன. தேவனுடைய அமைப்பு அனைத்துமே விதிகளுக்குக் கீழ்ப்படிகின்றன. இப்பொழுது ஒரு நிமிடம் நிறுத்திக் கொள்வோம்.
பூமியை நாம் எடுத்துக் கொள்வோம். அது இருபத்து நான்கு மணிக்கு ஒரு முறை பிழையின்றி ஒரு சுற்று பூர்த்தி செய்கிறது. ஆனால் தம்முடைய விஞ்ஞான அறிவு அனைத்தும் கொண்டு, பிழையின்றி நேரத்தைக் காண்பிக்கக் கூடிய ஒரு கடிகாரத்தை நம்மால் உற்பத்தி செய்ய முடிவதில்லை. சிறந்த கடிகாரங்களும் கூட, ஒரு ஆண்டில் எத்தனையோ நிமிடங்களை இழக்கின்றன. அல்லது கூட்டிக் கொள்கின்றன. ஆனால் பூமியோ ஒரு வினாடியும் கூட இழக்காமல் பிழையின்றி இயங்குவதால், இன்றைய வானமண்டல நிபுணர்கள் இன்றிலிருந்து இருபது அல்லது ஐம்பது ஆண்டுகள் கழித்து சூரியனும் சந்திரனும் ஒன்றையொன்று கடக்கும் என்று முன்னறிவிக்க முடிகிறது. பூமி தன் இருபத்து நான்கு மணி நேர சுற்று பாதையில் ஒரு வினாடியும் கூட இழப்பதில்லை. அல்லேலூயா! அது தேவனுடைய விதிகளைப் பின்பற்றி இயங்குவதால், பிழையின்றி இயங்குகிறது.



60  அலைகள் எப்பொழுது எழும்பும் என்று ஒரு நிமிடம் கூட பிசகாமல் அவர்களால் கூற முடிகிறது. ஏனெனில் சந்திரன் எந்த ஸ்தானத்தில் உள்ளது என்று அவர்களுக்குத் தெரியும். தேவன் எல்லாவற்றையும் தமது விதிகளினால் ஒழுங்குக்குள் கொண்டு வந்துள்ளார். சந்திரன் இறங்கும் போது, அலைகள் மறைகின்றன. சந்திரன் மேலே எழும்பும்போது அலைகளும் அதனுடன் மோதுகின்றன. சந்திரன் எந்த நேரத்தில் இறங்குமென்று அவர்களுக்குத் தெரியும். இவையனைத்தையும் அவர்கள் அநேக ஆண்டுகளுக்கு முன்பே கணித்து, பஞ்சாங்கத்தில் எழுதி வைக்கின்றனர். ஒரு நிமிடம் கூட பிசகாமல், அலைகள் எப்பொழுது தாழும் என்று அவர்களால் கூற முடியும். ஏனெனில் அது சந்திரன் இறங்குவதை அனுசரித்துள்ளது. இவையாவும் தேவனுடைய விதிகளின்படி ஒழுங்காக இயங்குகின்றன.



61  அன்றொரு நாள் நான் மிஷிகன் ஏரிக்கரையில் நின்று கொண்டிருந்தேன். கனடாவுக்குப் போகும் வழியில் நான் சுபீரியர் ஏரியைக் காண நேர்ந்தது. அது திரளான தண்ணீரைக் கொண்டது. அங்கு நான் நின்று கொண்டு, "இது எத்தனை மைல் நீளமிருக்கும்? என்று எண்ணினேன். அதன் பின்பு நான் சுபீரியர் ஏரியைக் கடந்து மிஷிகன் ஏரிக்கு வந்தபோது, அதிலும் திரளான தண்ணீர் இருந்தது. சுபீரியர் ஏரியிலிருந்து மிஷிகன் ஏரி, மிஷிகன் ஏரியிலிருந்து ஒண்டாரியோ ஏரி… ஹரான், இந்த ஏரிகளிலுள்ள தண்ணீரை கணக்கிட்டால், எத்தனை கோடி பீப்பாய்கள் கொள்ளும் நல்ல தண்ணீர் இந்த ஏரிகளில் உள்ளது.
ஆனால் அதே நேரத்தில் நெவாடா, அரிசோனா, நியூமெக்ஸிகோ, கிழக்கு கலிபோர்னியா போன்ற இடங்களில் கோடிக்கணக்கான ஏக்கர்கள் பரப்புள்ள வறண்ட நிலம் உள்ளது. இந்த ஏரிகளிலுள்ள தண்ணீர் மாத்திரம் அந்த நிலத்தில் பாய்ச்சப்பட்டால் இந்த நாடு உலகம் முழுவதற்கும் ஆகாரம் அளித்து மீதியை கடலில் கொட்டக் கூடிய அளவிற்கு அது செழிப்பாகும். கோடிக்கணக்கான டன்கள் எடையுள்ள உருளைக்கிழங்கு, பீன்ஸ், முட்டைகோஸ், கீரை வகைகள், முள்ளங்கி போன்ற காய்கறிகள் வளர இங்கு வாய்ப்புண்டு, அது தண்ணீருக்காக ஆவலாய் உள்ளது.



62  அங்கு தண்ணீர் உள்ளது. இங்கு வறண்ட நிலம் உள்ளது. இவைகளை நாம் காண்கிறோம். இவைகளை ஒன்று சேர்த்தால் பலன் உண்டாகும் என்று நமக்குத் தெரியும். ஏனெனில் தண்ணீரை பரிசோதித்துப் பார்க்கும்போது, அது நல்ல தண்ணீராய் உள்ளது. நிலத்தின் மண்ணும் செழிப்பாக உள்ளது. நாம் எவ்வளவு தான் விரும்பினாலும், இவையிரண்டையும் ஒன்றாக சேர்க்க முடியாது. ஆனால் ஒரு விதி உண்டு. அதுதான் ஈர்ப்பு விதி (The Law of Gravitation) அந்த விதியின்படி நாம் பணி செய்தால், ஏரியின் தண்ணீரை இந்த நிலத்தில் பாய்ச்ச முடியும். ஆனால் நாம் ஈர்ப்பு விதியை அனுசரித்து பணி புரிய வேண்டும். அதை விரும்பினால் மாத்திரம் போதாது. நாம் கூச்சலிட்டு தண்ணீரை அங்கு கொண்டு வர முடியாது. அந்த விதியை அனுசரித்து நாம் பணி புரிந்தால் மாத்திரமே அதை அங்கு கொண்டு வர முடியும். தேவன் எல்லாவற்றையும் விதிகளின் கீழ் வைத்திருக்கிறார்.



63  இதை நான் யோசித்துக் கொண்டிருந்தேன். இதை ஏற்கனவே உங்களிடம் கூறினேனோ இல்லையோ என்று எனக்கு ஞாபகமில்லை. ஒரு ஆண்டுக்கு முன்பு நான் அணில் வேட்டைக்காக சகோ. உட்டுடன் கென்டக்கிக்கு சென்றிருந்தேன். அங்கு அணில்கள் அபூர்வம். எனவே வேட்டையைப் பற்றி விசாரிக்க நாங்கள் ஒருவர் வீட்டிற்கு சென்றிருந்தோம். அவருக்கு அநேக ஏக்கர் நிலம் இருந்தது. அந்த நிலம் அதிக காடாக இருந்தது. சகோ. உட் என்னிடம், "அந்த மனிதர் ஒரு நாத்திகன். அவர் ஒரு அவிசுவாசி" என்று முன்னெச்சரித்திருந்தார். அவருடைய தந்தைக்கு அவரைத் தெரியும். எனவே, "அங்கு சென்று, அவருடைய நிலத்தில் வேட்டையாட அனுமதி கிடைக்குமா என்று பார்க்கலாம்" என்றார்.
நாங்கள் அவர் வீட்டிற்கு சென்றோம். அவரும் வேறொருவரும் இருவருக்கும் எழுபது வயது தாண்டியிருந்தது. ஒரு ஆப்பிள் மரத்தின் கீழ் உட்கார்ந்து கொண்டிருந்தனர். சகோ. உட் அவரை அணுகி, "உங்கள் இடத்தில் சற்று வேட்டையாட அனுமதி தருவீர்களா?" என்று கேட்டார்.
அவர், "நீ எந்த உட்? நீ ஜிம் உட்டின் மகனா?" என்று கேட்டார்.
அவர், "ஆம்" என்று விடையளித்தார்.
அவர், "உன் தந்தை மிகவும் நேர்மையானவர்" என்று கூறிவிட்டு, "நீ எங்கு வேண்டுமானாலும் என் நிலத்தில் வேட்டையாடலாம். எனக்கு நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலம் உள்ளது. உன் நிலத்தைப் போல் பாவித்து, நீ எங்கு வேண்டுமானாலும் சென்று வேட்டையாடு" என்றார்.
நான் காரில் அமர்ந்திருந்தேன். ஏனெனில் ஒரு போதகர் நாத்திகன் ஒருவரிடம் ஒரு உதவி கேட்டால் இருவருக்கும் ஒத்து போகாது என்று எண்ணினேன்.



64  சற்று கழித்து சகோ. உட் அவரிடம், "என் போதகரையும் நான் வேட்டைக்கு அழைத்துக் கொள்ளலாமா? அவரும் வருவதில் உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்று நினைக்கிறேன்" என்றார்.
இந்த வயோதிபர் பிரம்பை சுற்றிக் கொண்டே, "உட், நீ எங்கு சென்றாலும் போதகரைக் கூட்டிக் செல்லும் அளவிற்கு உன்னை தாழ்த்திக் கொண்டாயா?" என்று கேட்டார்.
அதை கேட்டபோது, நான் காரை விட்டிறங்கத் தீர்மானித்தேன். நான் சில நிமிடங்கள் இந்த வயோதிபருடன் பேசினேன். அவர் உடனே, போதகர்களால் அவருக்கு அதிக உபயோகமில்லையென்றும், ஏனெனில் அவர்களுக்குத் தெரியாத ஒன்றைக் குறித்து அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர் என்றும் என்னிடம் கூறினார்.
அவர், "அவர்களுக்குத் தெரியாத ஒன்றைக் குறித்து அவர்கள் அலப்புகின்றனர். ஒரு மனிதன் என்னுடன் பேசும் போது அவன் எதைக் குறித்து பேசுகிறனோ, அதை அறிந்திருக்க வேண்டுமென்று விரும்புகிறேன்" என்றார். அது நல்ல ஒரு கருத்தாக எனக்குத் தென்பட்டது. அவர், "ஒரு மனிதன் என்னிடம் பேசும்போது, அவருக்குத் தெரியாத ஒன்றை ஊகித்து என்னிடம் பேசுவதை நான் விரும்பவில்லை. அவர் உறுதியாய் அறிந்துள்ளதையே என்னிடம் பேச வேண்டுமென்று விரும்புகிறேன்" என்றார்.
நான், "ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்துண்டு" என்றேன்.



65  அவர் தொடர்ந்து, "சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு போதகர் ஆக்டன் என்னுமிடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கூட்டத்துக்காக இங்கு வந்திருந்தார். அவர் இந்த இடத்திற்கு அந்நியர். ஆனால் இரவு அவர், கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணை நோக்கி, "உன் பாக்கெட்டில் கைகுட்டை உள்ளது. உன் பெயர் திருமதி இன்னார். மலையின் மேலுள்ள உன் சகோதரி வியாதிப்பட்டிருக்கிறாள். அவள் பெயர் இன்னார். அவள் வயிற்றிலுள்ள புற்று நோயால் மரித்துக் கொண்டிருக்கிறாள். இந்த கைகுட்டையை எடுத்துக் கொண்டு போய் உன் சகோதரியின் மேல் வைத்து "கர்த்தர் உரைக்கிறதாவது", "நீ மரிக்க மாட்டாய், உயிர் வாழப் போகின்றாய், என்று அவளிடம் சொல் என்றார்" என்று கூறினார்.
அவர் மேலும், "இந்த ஸ்திரீ எங்கள் ஸ்நேகிதி நாங்கள் - நானும் என் மனவிையும் - அந்த ஸ்திரீயை அழைத்துக் கொண்டு காலையில் மலையின் மேல் சென்றோம். வியாதிப்பட்ட அந்த ஸ்திரீ மோசமான நிலையில் இருந்தாள். அநேக நாட்களுக்கு முன்பே டாக்டர்கள் அவளைக் கைவிட்டனர். அவள் மல ஜலம் கழிக்க அவளை ஒரு போர்வையில் வைத்து, "தூக்கி உட்கார வைத்து, மறுபடியும் தூக்கி கிடத்த வேண்டியதாயிருந்தது. அவள் அவ்வளவு மோசமான நிலையில் இருந்தாள். ஒரு நாள் யாரோ மரித்துவிட்டது போன்ற ஒரு சத்தம் கேட்டது" என்றார்.



66  அந்த கைகுட்டையை பென் அங்கு கொண்டு சென்றார். பென், நீங்கள் தான் என்று நினைக்கிறேன். அப்படித்தானே? (சகோ. பென், ஆமென், 'ஆமென்' என்கிறார் - ஆசி) சகோ, பென் அந்த கைகுட்டையைக் கொண்டு சென்றார். ஏனெனில் அவர் அந்த ஸ்திரீயைக் கூட்டத்துக்கு கொண்டு வந்திருந்தார்.
அவர் தொடர்ந்து, "அடுத்த நாள் காலை அவள் வறுத்த ஆப்பிள் பழம் கேக்கைத் தின்றாள். அவள் தன் சொந்த வேலையை செய்வதுமல்லாமல், அடுத்த வீட்டாரின் வேலையையும் செய்கிறாள். அவள் அந்த நிலைக்கு குணமாகிவிட்டாள். தான் என்ன பேசுகிறார் என்பதை நன்கு அறிந்துள்ள அந்த போதகரை நான் காண நேரிட்டால், அவருடன் பேச எனக்கு விருப்பமுண்டு" என்றார்.
சகோ. உட் என்னைப் பார்த்தார். நான் அவரைப் பார்த்தேன். காட்டில் முகாமிட்டிருந்ததால், நான் அழுக்கு படிந்தவனாய் வியர்த்து நின்று கொண்டிருந்தேன். அணில் ரத்தக்கறை என் மேல் படிந்திருந்தது. நான், "நீங்கள் இந்த மனிதனுடன் பேசினால், அவர் அதை எப்படி செய்தார் என்று உங்களிடம் விவரிப்பார் என்றா சொல்கிறீர்கள்? என்றேன்.
அவர், "ஆம், ஐயா, அப்படித்தான் நினைக்கிறேன்" என்றார்.
நான், "சரி, அது மிகவும் நல்லது" என்றேன்.



67  அவருடைய ஆப்பிள் பழம் ஒன்றை நான் தின்று கொண்டிருந்தேன். அது ஆகஸ்டு மாதம் - இலையுதிர் காலமாதலால் - அந்த மரம் பழுப்பு நிறமடையத் தொடங்கியது. இந்த சிறு ஆப்பிளை நான் தின்று கொண்டிருந்தேன். "அது ருசியான ஆப்பிள்" என்று நான் கூறிவிட்டு, "எத்தனை காலமாக இந்த மரம் இங்குள்ளது" என்று கேட்டேன்.
"இந்த மரத்தை முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நட்டேன்" என்று அவர் பதிலளித்தார்.
"அப்படியா, ஐயா? உங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். இந்த உலகில் எப்படி… ஆப்பிள்கள் மரத்திலிருந்து விழுவதையும், இலைகள் உதிர்வதையும் நான் காண்கிறேன். இப்பொழுது ஆகஸ்டு மாதம் நடுவில் நாமிருக்கிறோம். குளிர்காலம் வரவில்லை. மூடுபனி எங்கும் பெய்யவில்லை. அப்படியிருந்தும் இலைகள் மரத்தினின்று உதிர்கின்றனவே, ஏன்?" என்று வினவினேன்.
அவர், "சத்து (sap) மரத்தைவிட்டு சென்றுவிட்டது" என்றார்.
நான், "ஓ, அப்படியா? அது எங்குசென்றது?" என்றேன்.
அவர், "வேர்களுக்கு சென்றுவிட்டது" என்று விடையளித்தார்.
நான், "அது எவ்வளவு காலம் தங்கியிருக்கும்?" என்றேன்.
அவர், "வசந்த காலம் வரைக்கும்'' என்றார்.
நான், "அப்பொழுது அது மறுபடியும் மரத்திற்கு வந்து, மரத்திற்கு புது இலைகளை அளித்து சாப்பிட புது பழங்களையும் கொடுக்கும் அல்லவா?" என்றேன்.
அவர், "அது உண்மை, சரியாய் சொன்னீர்கள்" என்றார்.



68  "ஐயா அப்படியானால் உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். தங்களுக்கு ஒன்றுமே அறியாத ஒன்றைக் குறித்து பேசும் நபர்களை நீங்கள் குறிப்பிட்டீர்கள், சத்தை மரத்தை விட்டுப் போகச் செய்வது எந்த ஞானம் என்று விவரிக்க முடியுமா? குளிர் காலத்தின் போது அது மரத்தில் தங்கியிருந்தால் மரம் பட்டுப் போய்விடும். ஏனெனில் மரத்தின் ஜீவன் அந்த சத்தில் தான் உள்ளது. எந்த ஞானம் அந்த சத்து மரத்தை விட்டு வேர்களுக்குப் போகும்படி செய்து, வசந்த காலம் வரைக்கும் அங்கு தங்கியிருக்கும்படி செய்து, மீண்டும் அதை மரத்துக்கு கொண்டு வந்து, ஆப்பிள் பழங்களை ஈனும்படி செய்கிறது? நீங்கள் வேண்டுமானால் ஒரு வாளியில் தண்ணீர் நிறைத்து, அதை ஒரு கம்பின் மேல் வைத்து, ஆகஸ்டு மாத்தில் அது கம்பின் கீழ் பாகத்தை அடைந்து, வசந்த காலத்தில் மேலே வருகிறதா என்று பாருங்கள். இயற்கையின் விதி ஒன்றுண்டு. ஏதோ ஒரு ஞானம் இந்த விதி இயங்கும்படி செய்கிறது. அந்த ஞானம் மாத்திரமே அதை இயக்கி, சத்தை வேர்களுக்கு கொண்டு சென்று, "மீண்டும் மரத்திற்கு கொண்டு வர முடியும்" என்றேன்.
அவர், "அதை பற்றி நான் இதுவரை நினைக்கவேயில்லை" என்றார்.
"சத்தை மரத்திலிருந்து வேர்களுக்குக் கொண்டு சென்று, மீண்டும் அதை மரத்துக்கே கொண்டு வரும் அந்த ஞானம் யார் என்பதை நீங்கள் கண்டு கொள்வீர்களானால், அதே ஞானம் தான் அன்றிரவு, 'நீ போய் அந்த கைகுட்டையை அந்த ஸ்திரீயின் மேல் வை' என்று என்னிடம் கூறும்படி சொன்னது" என்றேன்.
அவர், நீங்கள் தான் அந்த பிரசங்கியா?" என்று கேட்டார்.
நான், "ஆம் ஐயா, நான் தான்" என்றேன்.



69  சென்ற ஆண்டு நான் அங்கு சென்றிருந்தேன். அவர் இறந்துவிட்டார். விதவையாகிய அவருடைய மனவிை அதே மரத்திலிருந்து ஆப்பிள் பழங்களைப் பறித்துக் கொண்டிருந்தார்கள். முதலில் நாங்கள் யாரென்று அறியாமல் எங்களை அங்கிருந்து விரட்டப் பார்த்தார்கள். நான் இந்த அம்மாளிடம், வேட்டையாட அவரிடம் அனுமதி பெற்றிருப்பதாகக் கூறினேன். அந்த அம்மாள், "அவர் மரிக்கும் முன்பு, கிறிஸ்துவை முழுவதுமாக அறிக்கையிட்டு அவரை ஏற்றுக் கொண்டார்" என்று கூறினார்கள்.
பாருங்கள், எந்த ஞானம் சத்தை மரத்திலிருந்து கீழே இறக்குகிறது? அது தேவன் ஒழுங்குபடுத்தின விதி. அது தேவனுடைய விதியாக அமைந்து, அவருடைய சிருஷ்டிப்பை பாதுகாக்கின்றது.
நீங்கள் எவ்வளவுதான், "இந்த கோடைகாலத்தில் சூரியன் ஒருக்காலும் பிரகாசிக்காது" என்று கூச்சலிட்டாலும் எனக்குக் கவலையில்லை. அது எப்படியும் பிரகாசிக்கும். "இரவு வர நான் அனுமதிக்கமாட்டேன்" என்று நீங்கள் எவ்வளவுதான் கூறினாலும், அது வந்தே தீரும். ஏனெனில் 'உலகம்' என்றழைக்கப்படும் நாம் வாழும் இந்த இடம், தேவனுடைய விதியின் ஆதிக்கத்தில் உள்ளது.



70  சகோதரரே, சகோதரிகளே, உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். நாம் தேவனுடைய ஆவியினால் மறுபடியும் பிறந்திருப்போமானால்! தேவனுக்கு பலவீனமான பாகங்கள், பெரிய பலமுள்ள பாகங்கள் என்று கிடையாது, அவர் முழுவதும் தேவனாயிருக்கிறார். நீங்கள் போதிய அளவுக்கு தேவனை உங்களுக்குக்குள் பெற்றிருப்பீர்களானால் அது மிகச் சிறிய அளவாயிருந்தாலும் கூட - ஒரு புதிய உலகத்தை படைப்பதற்கு அது போதிய வல்லமையுள்ளதாய் இருக்கும். அது தேவன். அது பெலனுள்ளது. இப்பொழுது இங்குள்ள ஒவ்வொரு விசுவாசியும் நித்திய ஜீவனைப் பெற்றுள்ளார். அது தேவனுடைய ஆவி உங்களுக்குள் இருப்பதாகும். மரித்தோரை உயிரோடெழுப்பவும், பிணியாளிகளை சுகப்படுத்தவும், சுற்றுப் பாதையில் கிரகங்களை அமைக்கவும் அது போதிய வல்லமையுள்ளதாய் விளங்குகின்றது. உங்களையும் உங்களுக்குள் இருக்கும் அந்த ஆவி ஒரு விதியின் ஆதிக்கத்தில் வைத்துள்ளது. நீங்கள் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாய் இருக்கின்றீர்கள். உங்களுக்குள் இருக்கும் அதே ஆவி உயிர்த்தெழும் நாளில் உங்களை உயிரோடெழுப்பும்.



71  இயேசு இவ்வுலகில் வாழ்ந்து மரித்தார். அப்பொழுது அவருடைய ஆத்துமா பாதாளத்துக்குச் சென்று, நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவாவின் நாட்களில் மனந்திரும்பாத காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கம் செய்தது. அவருடைய சரீரம் கல்லறைக்குச் சென்றது. ஆனால் அவர் மரிக்கும் முன்பு, தமது ஆவியை அவர் பிதாவின் கைகளில் ஒப்புவித்தார். அவருடைய ஆவி தேவனிடத்திற்குச் சென்றது; அவருடைய சரீரம் கல்லறைக்குச் சென்றது. வேத வாக்கியம் நிறைவேறும் வரைக்கும் இயேசு உயிரோடெழாதபடி தடை செய்யப்பட்டார். அவர் உயிரோடெழ முடியவில்லை. ஏனெனில் அவருடைய சரீரம் இரவும் பகலும் மூன்று நாட்களாக கல்லறையில் இருக்க வேண்டியிருந்தது. வேத வாக்கியம் நிறைவேறின பின்பு அந்த தடை நீக்கப்பட்டு, அவருடைய ஆவி ஆத்துமாவுக்குள் இறங்கி, அவருடைய ஆத்துமா சரீரத்துக்குள் இறங்கினது. அவர் உயிர்த்தெழுந்தார்.



72  நாம் மரிக்கும்போது, நமது ஆத்துமாக்கள் தேவனுடைய பலி பீடத்தின் கீழ் செல்லும். சில நாட்களுக்கு முன்பு, அந்த தரிசனத்தில் அதைக் காண நான் சிலாக்கியம் பெற்றேன் என்று உங்களுக்குத் தெரியும். "ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்குத் திருப்பி, நமது சரீரங்கள் பூமியின் மண்ணுக்குத் திரும்பும்" என்று வேதம் கூறுகின்றது. (பிரசங்கி 12:7), ஒருநாள், வேத வாக்கியம் நிறைவேறும்போது, நமது ஆவிகள் தேவனால் விடுவிக்கப்பட்டு, ஆத்துமாவுடன் ஒன்று சேர்ந்து, ஆத்துமா சரீரத்துக்குள் நுழையும். நம்மை உயிரோடெழுப்பக் கூடிய வல்லமை இப்பொழுதே நமக்குள் உள்ளது. இப்பொழுது நாம் உன்னதங்களில் உட்கார்ந்திருக்கிறோம். நாம் இப்பொழுது உயிர்த்தெழுதலின் வல்லமையில் இருக்கிறோம்.
அதற்கென்று ஒரு விதி இல்லாமற் போனால், தேவனுடைய குமாரரும் குமாரத்திகளும் தங்களுக்கென இங்கு ஒரு உலகைப் படைத்துக்கொண்டு, அதில் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை நடத்துவர். அப்படி செய்வதற்கு உங்களுக்குள் வல்லமையுள்ளது. தேவனுடைய வல்லமையின் நிழல் உங்களுக்குள் இருக்குமானால், அதை செய்ய உங்களுக்கு வல்லமை இருக்கும். தேவன் எல்லாம் வல்லவராய் இருக்கிறார். நான் கூறுவது புரிகிறதா? உங்களுக்குள் இருக்கும் வல்லமை அதை செய்யமுடியும். நீங்கள் பேசி, ஒரு உலகத்தை சிருஷ்டித்து, அதில் சென்று வாழ முடியும். அல்லேலூயா! பார்த்தீர்களா?
அந்த வல்லமைதான் இப்பொழுது சபையில் உள்ளது. ஆனால் அது ஒரு விதிக்கு கீழ்ப்பட்டுள்ளது. அந்த விதி, "ஒரு சில கற்பனைகளைக் கைக்கொள்ளுதல்" என்பதல்ல. அது விசுவாசத்தின் பிரமாணம். "விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்" என்று இயேசு கூறியுள்ளார். (மாற். 9:23) அதை மாத்திரம் நீங்கள் விசுவாசித்தால், உங்கள் ஆத்துமா எதை விசுவாசிக்கும்படி தேவன் உங்களை வழி நடத்துகிறரோ, அது உங்களுடையதாகிவிடும். நீங்கள் விசுவாசத்தில் காலடி வைத்த இடம் அனைத்தையும் அவர் உங்களுக்குத் தருகிறார். ஆமென்! அது உங்களுடையது - நீங்கள் மாத்திரம் விசுவாசத்தின் பிரமாணத்தை திறக்கும் திறவுகோலைக் கண்டு பிடித்தால்! நான் என்ன கூறுகிறேன் என்று புரிகிறதா? அந்த வல்லமை இயக்கப்படுதல். நீ தேவனுடைய குமாரனாக அல்லது குமாரத்தியாக இருப்பாயானால், அது உன்னை விட்டு நீங்காது. அது எப்பொழுதுமே உன்னுடன் கூட இருக்கும். உன் விசுவாசம் அதை விட்டு அகன்று சென்றாலும், அது அப்பொழுதும் அங்கேயே இருக்கும். அல்லேலூயா!



73  நீ இரட்சிக்கப்படும் போது, உன்னை பூமியின் அசுத்தத்தினின்று உயர்த்திக் கொள்ள, தேவன் உனக்கு விசுவாசத்தை அளிக்கின்றார். உன் விசுவாசம் உலகத்தின் காரியங்களை மேற்கொள்கின்றது. எது உன் விசுவாசம்? உன்னை தேவனுடைய குமாரனாகச் செய்ய தேவன் உன்னில் செய்ததில் நீ கொண்டுள்ள விசுவாசம். நீ பொய் சொல்வதை விட்டுவிடுகிறாய். ஏனெனில் உன் விசுவாசம் அவைகளுக்கெல்லாம் மேலாக உன்னை உயர்த்தியுள்ளது. ஆமென். அப்படி நீ இல்லாமலிருந்தால், உனக்கு விசுவாசமில்லை என்று அர்த்தம். "கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்" (எபே. 2:8).
உங்கள் விசுவாசத்தை நீங்கள் எவ்வளவாக வெளியிடுகின்றீர்களோ (released) அவ்வளவாக நீங்கள் வல்லமையைப் பெற்றிருப்பீர்கள். ஏனெனில் உங்களுக்குள் வானம், பூமி இவைகளின் வல்லமை உள்ளது. தேவன் உங்களுக்குள் வாசமாயிருக்கிறார். நீங்கள் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாயிருக்கின்றீர்கள். ஆமென்! பார்த்தீர்களா? ஆனால், அது உங்கள் விசுவாசமே. இயேசு, "உன் விசுவாசத்தின்படியே ஆகக் கடவது. விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும். மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீங்கள் இந்த மலையைப் பார்த்து தள்ளுண்டு போ" என்று சொல்லி, உங்கள் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், "அது அப்படியே ஆகும்" என்றார்.



74  அப்படியானால், நாம் எத்தகைய விசுவாசத்தை, நமக்குள் வாசமாயிருக்கும் இந்த மகத்தான மீட்பராகிய கிறிஸ்துவில் - சபையை விட்டுப் போகாத இந்த அடிக்கப்பட்ட கன்மலையின் மேல் - வைத்திருக்க வேண்டும்!
கல்வாரியிலிருந்து பெருக்கெடுத்து சபைக்குள் பாய்ந்து, இரட்சிப்பையும் வல்லமையையும் ஊற்றி, என்றென்றும் பிரசன்னமாயுள்ள ஜீவனுள்ள தேவன் - நம்முடைய யாத்திரையில் நம்முடன் வரும் அந்த அடிக்கப்பட்ட கன்மலை - "உலகத்தின் முடிவுபரியந்தம் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்" என்றுரைத்துள்ளார்.



75  இஸ்ரவேல் ஜனங்கள் விசுவாசத்தை இழந்தபோது, பாதை தவறினர். அவர்கள் மாமிசப் பிரகாரமானவைகளை இச்சிக்கத் தொடங்கினர். அவர்கள் மாத்திரம் விசுவாசத்தில் நிலைகொண்டு, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்துக்கு தேவன் அவர்களைக் கொண்டு செல்வார் என்று விசுவாசித்திருந்தால், அவர்களை ஒன்றும் தடை செய்திருக்காது. அவர்கள் ஏற்கனவே சமுத்திரத்தைப் பிளந்து, தங்கள் சத்துருக்களின் மேல் வாதைகளை வரவழைத்து, தங்களைத் துரத்தின சத்துருக்களை நிர்மூலமாக்கி, வனாந்தரத்தில் பயணத்தை மேற் கொண்டனர். இருப்பினும், வாக்குத்தத்தம் செய்யப்பட்டதில் பிரவேசிக்க அவர்களுக்கு விசுவாசம் இல்லாமல் போயிற்று.
யோசுவாவும் காலேபும் அந்த விசுவாசத்தைப் பெற்றிருந்தனர். அவர்கள், "எங்களுக்கு எதிராய் வருகின்ற எதையும் நாங்கள் வென்றுவிடுவோம்" என்றனர்.
இன்று சபையிலுள்ள தொல்லையும் அதுவே. நாம் வியாதியை மேற்கொள்ள முடியும். நமக்குள் வல்லமை உள்ளது. நாம் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாயிருக்கிறோம். நமக்கு முன்னால் ஒன்றுமே நிற்கமுடியாது. ஒரு காரியம், அதை விசுவாசிக்கும் யாரையாவது; தேவன் உங்களுக்கு ஏற்கனவே செய்து முடித்ததை விசவாசிக்கும் யாரையாவது அவர் கண்டுபிடிக்க விரும்புகிறார். நாம் இருப்போம் என்றல்ல. நாம் இப்பொழுது இருக்கிறோம்! என்றென்றும் ஜீவிக்கும் ஆவியின் பிரசன்னம் நம்முடன் இருக்கிறது. ஆமென்! பார்த்தீர்களா?



76  இன்று காலை நான், **"என்றென்றும் பிரசன்னமாயுள்ள கன்மலையின் தண்ணீர்" **என்னும் பொருளின் பேரில் பேசிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் அதை தான் குறிப்பிடுகிறேன். என்றென்றும் பிரசன்னமாயுள்ள கன்மலையின் தண்ணீர் இப்பொழுது இங்குள்ளது - கல்வாரியில் அடிக்கப்பட்ட கன்மலையிலிருந்து புறப்பட்டு வந்த என்றென்றுமுள்ள அந்த தண்ணீர் கல்வாரியில் அவரை விட்டு வெளிவந்த பரிசுத்த ஆவி, பெந்தெகொஸ்தே நாளன்று சபையின் மேல் வந்தார். அதே பரிசுத்த ஆவி இன்று காலை இங்கு பிரசன்னமாயுள்ளார். அது நமக்கு வாக்குத்தத்தமாக அளிக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாகத்தான், எனக்கு அவர் அளித்த கட்டளையை கைக்கொண்டு, வியாதியஸ்தர்கள் முன்னால் நான் நடக்கும் போது, தேவன் அவ்வாறு வாக்குத்தத்தம் செய்துள்ளார் என்பதை விசுவாசிக்கிறேன். அப்படித்தான் தரிசனங்களும் கிடைக்கின்றன. தேவன் அதை வாக்குத்தத்தம் செய்துள்ளார். அவர் பொய் சொல்ல முடியாது.



77  அதை விசுவாசியுங்கள். அதை நீங்கள் விசுவாசிக்க வேண்டும். கதவைத் திறந்து உங்களை உள்ளே அனுமதிக்க, அங்கு ஒன்று இருக்கவேண்டும். இன்றைய நமது தேவை. அதிக வல்லமைக்காக ஜெபிப்பது அல்ல. ஒரு புது உலகத்தைப் படைக்க உங்களிடம் போதிய வல்லமை உள்ளது. உங்களுக்கு இன்று தேவை, அந்த வல்லமையை உபயோகிக்க விசுவாசுமே. நீங்கள் உங்கள் வாழ்க்கையை கட்டுக்குள் கொண்டுவந்து, தேவ பக்தியுள்ள வாழ்க்கையை நடத்தி, நீங்கள் தேவனைக் கேட்டுக் கொள்வதெதுவோ, அதை அவர் நமக்குத் தந்தருளுகிறார் என்னும் உறுதியான நம்பிக்கையே உங்களுக்குத் தேவையாயுள்ளது. அவருடைய கட்டளைகளை நாம் கைக்கொள்ளும் போது, அவர் நமக்கு நன்மையை வழங்காதிரார். நாம் அவருடன் நடந்தால் அவர் நம்முடன் நடப்பார். ஓ, என்னே!



78  அவர்கள் ஒன்றை மாத்திரம் செய்ய வேண்டியதாயிருந்தது. அதுதான் பாதையில் நேராகச் செல்லுதல். அவர்கள் இங்கு அலைய வேண்டியதில்லை. அங்கு அலைய வேண்டியதில்லை. அவர்கள் நேராக பாதையில் செல்ல வேண்டும். சபையும் ஒன்றை மாத்திரம் செய்ய வேண்டியதாயுள்ளது. அது தான் பாதையில் நேராக செல்லுதல், அவர்களுக்கு அக்கினி ஸ்தம்பம் இருந்தது. அவர்கள் பாதையில் நிலை கொள்ள அந்த அக்கினி ஸ்தம்பத்தை பின்பற்ற வேண்டும். அதுதான் அவர்களை வழி நடத்தினது. அவர்கள் காணக் கூடியது அந்த அக்கினி ஸ்தம்பம். அது மோசேயின் மூலம் கிரியை செய்ததை அவர்கள் கண்டனர். அவன் தான் அவர்கள் தலைவன் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்.
இன்றைக்கு நமக்கு வார்த்தை உள்ளது. நாம் வார்த்தையைப் பின்பற்றுகிறோம். விசுவாசிகளில் வார்த்தை கிரியை செய்வதை நாம் காண்கிறோம். தேவன் நம்மில் கிரியை செய்து, அடையாளங்களினால் வார்த்தையை உறுதிப்படுத்துகிறார். நாம் வார்த்தையில் நிலை கொள்கிறோம். வார்த்தை பலனையளிக்கிறது.
இஸ்ரவேல் ஜனங்கள் மோசேயுடன் நிலை கொண்டனர். ஏனெனில் மோசே அக்கினி ஸ்தம்பத்தை பின் தொடர்ந்தான். அவர்கள் மோசேயைப் பின் தொடர்ந்தனர். ஆனால் அவர்கள் தேவனுக்கும் மோசேக்கும் விரோதமாக முறுமுறுத்தபோது, அவர்கள் இந்த பக்கமும் அந்த பக்கமும் அலைந்தனர். அப்பொழுது அவர்களுக்கு கஷ்டங்கள் வந்தன. நிச்சயமாக!



79  நாம் வார்த்தையில் நிலை கொள்கிறோம். வார்த்தை அடையாளங்களை விளைவிக்கிறது. இயேசு, "வார்த்தையை விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும்" என்றார். பாருங்கள். நீங்கள் வார்த்தையில் நிலைகொள்ளும்போது, வார்த்தை அடையாளங்களை விளைவிக்கிறது.
மோசே என்ன செய்தான்? அவர்கள் அலைந்து திரிந்தனர். அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் பாதை தவறி, தண்ணீரை இழந்து போயினர்.
அதை தான் சபையும் இன்று செய்துள்ளது என்று நினைக்கிறேன். அது வேதத்தின் பாதையை விட்டு விலகி அலைந்து கொண்டிருக்கிறது. அவர்கள் தத்துவங்களுக்குள் சென்றுவிட்டனர். அவர்கள் செய்யக் கூடாத காரியங்களில் பிரவேசித்துவிட்டனர். அவர்கள் அப்போஸ்தலருடைய விசுவாசப் பிரமாணம் போன்றவைகளை ஏற்றுக் கொண்டுவிட்டனர். அது வேதத்தில் எங்குள்ளது? அவர்கள் ஸ்தாபனப் போதகத்தை (Catechism) ஏற்றுக் கொண்டு அதை படிக்கின்றனர். அவர்கள் அனுபவத்திற்குப் பதிலாக ஸ்தாபனங்களை ஏற்றுக் கொண்டனர். மறுபடியும் பிறந்த அனுபவத்திற்குப் பதிலாக அவர்கள் கைகுலுக்குதலை நுழைந்தனர். தண்ணீர் முழுக்கு ஞானஸ்நானத்திற்குப் பதிலாக அவர்கள் தெளித்தலை நுழைத்தனர். அவர்கள், 'பிதா, குமாரன், பரிசுத்தாவி' என்னும் பொல்லாங்கான முறையை நுழைத்தனர். அப்படிப்பட்ட ஒன்று வேதத்தில் கிடையாது. வேதம் 'இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்' என்று கூறுகின்றது. அதே தண்ணீரை நீங்கள் மறுபடியும் பெற வேண்டுமானால், பாதைக்குத் திரும்ப வாருங்கள். அவர் விட்டுச் சென்றுவிடவில்லை. அவர் இன்னமும் இருக்கிறார்.



80  கிறிஸ்துவுக்குப் பதிலாக ஸ்தாபனப் பிரமாணங்களை ஏற்றுக் கொள்ளும் போது, நீங்கள் கோபாவேசம் கொண்டு அலைந்து திரிகின்றீர்கள்.
ஒருவர், "நான் மெதோடிஸ்டு" என்கிறார். வேறொருவர், "நான் பாப்டிஸ்டு" என்கிறார். நீ கிறிஸ்துவன் அல்ல என்பதை அது காண்பிக்கிறது. நாம் கிறிஸ்துவினுடையவர்கள். நாம் அவருக்கு சொந்தமானவர்கள். "நான் பாப்டிஸ்டு" என்று உன்னை அழைத்துக் கொள்வாயானால், உனக்குக் கிறிஸ்துவினிடம் எந்த பாகமும் இல்லை. நீ பாப்டிஸ்டு மாத்திரமே. நீ, "நான் ஒரு பெந்தெகொஸ்தேவினன்" என்று கூறினால், நீ பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தின் அங்கத்தினனாயிருக்கிறாய். நீ அதுவாகத் தான் இருக்கிறாய்.
ஆனால் நீ பெந்தெகொஸ்தே அனுபவத்தைப் பெற்றிருப்பாயானால்! பெந்தெகொஸ்தே வார்த்தை பெந்தெகொஸ்தே அனுபவத்தைக் கொண்டு வருகிறது. அந்த சீஷர்கள் செய்த அதையே நீயும் செய். பரிசுத்த ஆவியைப் பெறும்வரை அங்கேயே தங்கியிரு.
நீ வார்த்தைக்கு முரணாகச் சென்று, உனக்குள் இருக்கும் ஆவி வார்த்தை கூறுவதற்கு முரணாகச் சென்றால் அது பரிசுத்த ஆவியே அல்ல. அது பிசாசு. பரிசுத்த ஆவியைப் பாவனை செய்தலாகும். எங்கு அடைந்துள்ளோம் என்று பார்த்தீர்களா?



81  ஓ, நம்மில் சிலர் அந்நிய பாஷை பேசினோம். கூச்சலிட்டோம். ஆனால் மற்றவைகளை மறுதலித்தோம். வேதத்தில் இல்லாதவைகள் சபைக்குள் நுழைய நாம் அனுமதித்தோம். இன்று நாம் எங்கு அடைந்திருக்கிறோம். நாம் தரத்தை, உலர்ந்த ஸ்தாபனத்தை அடைந்திருக்கிறோம். நாம் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டோம். அதன் விளைவாக நமது தண்ணீரை நாம் இழந்துவிட்டோம். பெந்தெகொஸ்தேயினர் அதை தான் செய்தனர். அவர்கள் ஸ்தாபனம் உண்டாக்கிக் கொள்ள ஆரம்பித்த போது, அது ஐக்கியத்தை முறித்துப்போட்டது. "இந்த மனிதன் இதை விசுவாசித்தால், அவருடன் நாங்கள் சேர மாட்டோம்" என்கின்றனர்.
நீங்கள் சென்று, சத்தியத்தின் வார்த்தைக்கு - சத்தியத்தை அறிகிற அறிவுக்கு அவர் வரும் வரைக்கும், அவருடன் தங்கியிருங்கள். அது என்னவாயினும், அதை பொருட்படுத்தாமல் சகோதரராயிருங்கள்.
ஆனால் நாமோ ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு, "நீ ஒருத்துவக்காரன் அல்ல, நீ இருத்துவக்காரன் அல்ல, நீ திரித்துவக்காரன் அல்ல, உன்னுடன் நாங்கள் ஐக்கியங் கொள்ள மாட்டோம்" என்கிறோம். அப்படி செய்யும் போது, நாம் மீண்டும் வனாந்தரத்தை அடைகிறோம். அது உண்மை!
இஸ்ரவேலர், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு அவர்களைக் கொண்டு செல்லும் பாதையை விட்டு விலகி சென்றபோது, அந்தக் கன்மலை அவர்களை விட்டு போய் விடவில்லை என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அது அங்கேயே தங்கியிருந்தது. தண்ணீரும் அங்கேயே இருந்தது. அதுபோன்று, பரிசுத்த ஆவியும் இங்கிருக்கிறார். நாம் அலைய வேண்டிய அவசியமில்லை.



82  தேவன் ஒரு பெரிய பாடத்தை இங்கு நமக்குக் கற்றுத் தருகிறார். கிறிஸ்து ஒரே தரம் அடிக்கப்பட்டு, நம் அனைவருக்கும் ஒரே தரம் பெந்தெகொஸ்தே அனுபவத்தைத் தந்திருக்கிறார். ஒரு தரம் அடிக்கப்பட்ட கன்மலை மறுபடியும் அடிக்கப்பட வேண்டியதில்லை. அது ஒரு தரம் அடிக்கப்பட்டது.
அதை இரண்டாந்தரம் அடித்ததனால் மோசே தவறு செய்தான். அதன் மூலம், அவன் பலியின் மேல் கொண்டிருந்த விசுவாசத்தின் பலவீனத்தை அவன் வெளிப்படுத்தினான். கிறிஸ்து ஒரு தரம் அடிக்கப்பட்ட பின்பு, மறுபடியும் அடிக்கப்படவேண்டிய அவசியமில்லை. மோசே என்ன செய்தான்? ஏதோ ஒன்றைப் புதிதாக ஆரம்பிக்க அவன் முனைந்தான்.
இன்றைய குருவானவர்களும் அதைதான் செய்துள்ளனர். அவர்கள் ஏதோ ஒன்றை புதிதாக ஆரம்பித்துள்ளனர். "நமக்கு அசெம்பிளிஸ் ஆப் காட் சபையை உண்டாக்கிக் கொள்வோம். நமக்கு இதை, அதை, மற்றதை உண்டாக்கிக் கொள்வோம்" ஆனால் தேவனுடைய கருத்து அதுவல்ல.



83  கிறிஸ்து ஒரே தரம் அடிக்கப்பட்டார். அதுதான் முதலாவது உண்டான அனுபவம். அதுதான் முதலாவதாக தோன்றின வழி. பெந்தெகொஸ்தே நாளன்று பேதுரு, "நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்" என்றான்.
ஆனால் நாமோ, "பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினால் தெளித்து", எல்லாவிதமான சபை பிரமாணங்களையும் அளித்துவிட்டோம். நாம் வார்த்தையை விட்டு விலகிச் செல்லும்போது, நாம் எங்கேயும் அடைய முடியவில்லை என்பதில் வியப்பொன்றுமில்லை, பாருங்கள்?



84  தேவன் நமக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்கிறார். மோசே, "நாம் புதிதாக ஒன்றை ஆரம்பித்து, ஒரு ஸ்தாபனம் உண்டாக்கிக் கொண்டு, கத்தோலிக்க சபையைத் தொடங்குவோம்" என்று அவன் கூற வேண்டியவன் அல்ல. அதைதான் அவர்கள் முதலில் செய்தனர். சற்று கழித்து, "அதிலிருந்து புதிதாக ஒன்றைத் தொடங்குவோம். நாம் லூத்தரன் சபையை ஆரம்பிப்போம்" என்றனர். பிறகு ஆங்கிலிகன் சபை, பிறகு பாப்டிஸ்டு சபை, காம்ப்வெல் குழுவினர், கிறிஸ்து சபை, அந்திக்கிறிஸ்து, மற்றெல்லாமே. அவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஸ்தாபனங்களை ஏற்படுத்திக் கொண்டனர். அவர்கள் என்ன செய்தார்கள் பார்த்தீர்களா? அவர்கள் கன்மலையை மீண்டும் மீண்டும் அடித்து, ஒவ்வொரு முறையும் ஒன்றைப் புதிதாகத் தொடங்கினர். நமக்கு புது போதகம் அவசியமில்லை.



85  வேதத்தில் ஒவ்வொரு மனிதனும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றான். வேதத்தில் பரிசுத்த ஆவியைப் பெற்ற ஒவ்வொரு மனிதனும் தேவனுடைய வழியில் வந்து, தேவன் தொடக்கத்தில் என்ன செய்தாரோ அதையே செய்தான். அவர்கள் அதையே செய்தனர். அவர்கள் அதே அனுபவத்தை பெற்றிருந்தனர். அதே அடையாளங்கள் அவர்களைத் தொடர்ந்தன. அதே கிரியைகள் அவர்களைத் தொடர்ந்தன. ஏன்? அவர்கள் கன்மலையினால் உயிர் வாழ்ந்தனர். அதே தண்ணீரை அவர்கள் பருகினர்.
இன்றைக்கு நம்மிடையே நிறைய சபை பிரமாணங்களும், ஸ்தாபனங்களும் காணப்படும் காரணம் என்னவெனில், நாம் ஏதாவதொன்றை புதிதாகத் தொடங்குகிறோம். நமக்கு புதியது அவசியமில்லை, திரும்பிச் செல்லுங்கள்!
மோசே மறுபடியும் கன்மலையை அடித்து, புதிதாக ஒன்றைத் தொடங்கியிருக்கக் கூடாது. அவன் அவர்களிடம் அந்த மூல கன்மலையைப் பற்றி பேசியிருக்க வேண்டும். ஓ, நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என்று நினைக்கிறேன். முதலாவதாக, அவன் அடிக்கப்பட்ட கன்மலையுடன் பேசியிருக்க வேண்டும். அவன் அதை மறுபடியும் அடித்திருக்கக் கூடாது. அவன் புதிதாக ஒன்றைத் தொடங்க முயலாமல் அந்த பழைய கன்மலையுடன் பேசியிருக்க வேண்டும்.



86  தேவன் எனக்கு உதவி செய்வாராக! நான் தரித்திரனாக பிரசங்க பீடத்தில் மரிக்க நேரிட்டாலும், அந்த மூல கன்மலையைக் குறித்தே பேசுவேன். அவர்களுக்குப் பரிசுத்த ஆவியின் அனுபவத்தைக் கொடுத்து, "நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்" என்னும் மூல வாக்கியத்தைக் குறித்தே பேசுவேன். கன்மலையிலிருந்து பெருக்கெடுத்து வரும் தண்ணீரின் என்றென்றுமுள்ள பிரசன்னம் இப்பொழுதும் நம்முடன் உள்ளது. அது முன்பு அளித்தவைகளையே இப்பொழுதும் அளிக்கும். அது சுகத்தை அளிக்கும். அது தீர்க்கதரிசனங்களை அளிக்கும். முன் காலத்தவர் செய்த அனைத்தையும் மீண்டும் நமக்களிக்கும்.



87  இஸ்ரவேலர் மீண்டும் வேதத்தின் பாதையில் வந்து, பாதையில் பிரயாணம் செய்தபோது, அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு சென்றனர். ஆனால் அது அவர்களுக்கு நாற்பது ஆண்டுகள் பிடித்தது.
பெந்தெகொஸ்தேயினரும் வனாந்திரத்தில் நாற்பது, ஐம்பது ஆண்டுகளாக அலைந்து கொண்டிருக்கின்றனர். கன்மலையிடம் மீண்டும் வாருங்கள்! அது காணும் தூரத்தில் உள்ளது. அது இங்கு - வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது. பரிசுத்த ஆவியானவர் இங்கு, அவர் எப்பொழுதும் செய்து வரும் செயல்களைப் புரிந்து கொண்டிருக்கிறார். எனவே என்றென்றுமுள்ள தண்ணீர் இங்குள்ளது. அதனிடம் வாருங்கள். முதலில் இருந்த அந்த மூல காரியத்திற்கு வாருங்கள்.



88  அது முதலில் எப்படி இருந்தது?
அவர்கள் போதகர்களுடன் கை குலுக்கினார்களா? அப்படி ஒன்றும் செய்யவில்லை. அவர்கள், "பிதா, குமாரன், பரிசுத்த ஆவி"யின் நாமத்தினாலா ஞானஸ்நானம் பெற்றார்கள்? அப்படி ஒன்றுமில்லை; வேதத்திலுள்ள எவருமே, அல்லது அதற்கு பின்பு மூன்று ஆண்டு காலம் வாழ்ந்த எவருமே, "பிதா, குமாரன், பரிசுத்த ஆவி"யின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறவில்லை. அது கத்தோலிக்க பிரமாணமேயன்றி, வேத உபதேசம் அல்ல. பாருங்கள்?



89  முன் காலத்தவருக்கு பரிசுத்தஆவி இருந்தது. விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடர்ந்தன. இன்றும் அது அவ்வாறே இருக்கும். அடிக்கப்பட்ட அந்த கன்மலை எப்பொழுதும் போல என்றென்றும் ஜீவிக்கிறது.
"எங்கள் பெந்தெகொஸ்தே சபையைச் சேர்ந்து கொண்டு, பெந்தெகொஸ்தே ஆதிக்கத்திற்குள் வாருங்கள்", என்று நாம் கூறவேண்டாம். "நீங்கள் பாப்டிஸ்டு, அல்லது மெதோடிஸ்டு, அல்லது பிரஸ்பிடேரியன், அல்லது கத்தோலிக்க சபையைச் சேர்ந்து கொள்ளுங்கள்" என்று நாம் கூற வேண்டாம். அது என்ன? அது கன்மலையை மீண்டும் அடித்து புதிதாக ஒன்றைத் துவங்குவதாகும்.
"நீங்கள் மனந்திரும்பி, பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால், ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்" என்று அவர்களிடம் கூறுங்கள். அப்பொழுது, "விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும்", அப்படியானால் நீங்கள் மீண்டும் பாதைக்கு வந்துவிட்டீர்கள். மீண்டும் அந்த தண்ணீருக்கு வந்துவிட்டீர்கள். அதே தண்ணீர் அதே புத்துணர்ச்சியையளிக்கும். அது சரீரத்துக்கு அதே சுகத்தையளிக்கும். அது அதே சுத்திகரிக்கும் வல்லமையைப் பெற்றிருக்கும். அது அதே சுகமாக்கும் வல்லமையையளிக்கும். நாம் மாத்திரம் அதே ஆவியை பெற்றால், அது முன்பு செய்த அதே காரியங்களைச் செய்யும்".



90  திராட்சை செடியிலுள்ள ஜீவன் திராட்சை பழங்களைத் தரும். சென்ற ஆண்டு அது திராட்சை பழங்களைத் தந்தால், இந்த ஆண்டும் அது தரும். அது தேவனுடைய விதியாகும். அது திராட்சை செடியாயிருக்குமானால், அதை சும்மா விட்டுவிடுங்கள். அது திராட்சை பழங்களைத் தரவேண்டும் என்பதே தேவனுடைய விதியாயுள்ளது. நீங்கள் வேறு செடியை அதில் ஒட்டு போடலாம். ஆனால் அதை நீங்கள் சும்மா விட்டுவிட்டால் அது மீண்டும் திராட்சை பழங்களதை தந்து கொண்டேயிருக்கும்.
நாம் சபையுடன் பெந்தெகொஸ்தே ஸ்தாபனத்தின் தத்துவத்தையும், பாப்டிஸ்டு, மெதோடிஸ்டு, பிரஸ்பிடேரியன், ஆங்கிலிகன் சபைகளின் தத்துவங்களையும் இப்படியாக பல தத்துவங்களை ஒட்டுப் போட்டுவிட்டோம். நீங்கள் ஏன் அதை சும்மா விட்டுவிடக் கூடாது? திராட்சை செடிக்கு மீண்டும் வாருங்கள். அது மீண்டும் அதே வல்லமையை அளிக்கும். ஆமென்! ஆமென்! அது எனக்குப் பிரியம்.



91  "புதிதாக ஒன்றைத் துவக்குவோம்", அதை தான் நாம் செய்திருக்கிறோம். நமது அதிகாரத்தை நாம் காண்பிக்கிறோம். "டாக்டர் இன்னார் சபையின் ஸ்தாபகர்" அதுவல்ல.
மோசே அதைதான் செய்தான். அவன், "என்னால் என்ன செய்ய முடியுமென்று அவர்களுக்குக் காண்பிக்கிறேன். தண்ணீரை நான் எப்படியாவது கொண்டு வருவேன்" என்று கூறி இரண்டாவது முறையாக அதை அடித்தான். "என்னால் என்ன செய்ய முடியுமென்று காண்பிக்கிறேன்" என்று அவன் கூச்சலிட்டான். இதற்காக தேவன் அவனை தண்டித்தார்.
நீங்களும் அவ்வாறே ஏதாவதொரு ஸ்தாபனத்தில் சேர்ந்திருந்தால், தேவன் உங்களையும் தண்டிப்பார் அல்லவா? அது முற்றிலும் உண்மை. நீங்கள் அந்த மூல உபதேசத்திற்கு வரவேண்டும். வாருங்கள்!



92  நீங்கள் ஜனங்களிடம், "எங்கள் சபையைச் சேர்ந்து கொண்டு, எங்கள் சபை பிரமாணத்தை உச்சரியுங்கள்" என்று கூற வேண்டாம். "நீங்கள் மீண்டும் வந்து, மனந்திரும்பி, உங்கள் பாவ மன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள். உங்கள் இருதயம் சரியாயிருந்தால், நீங்கள் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் தொடரும். ஒரு கூட்டம் விசுவாசிகளுடன் இந்த அடையாளங்கள் செல்லும்" என்று கூறுங்கள். ஏன்?அடிக்கப்பட்ட கன்மலையும் அவருடைய ஜீவத் தண்ணீராகிய ஊற்றும் புறப்பட்டு வந்து, அவர் முன் காலத்தில் செய்ததையே இப்பொழுதும் செய்து கொண்டிருக்கிறது. அது அப்படி செய்யாமல் இருக்க முடியாது. ஓ, ஆம்.
நம்மை நாம் விளம்பரப்படுத்திக் கொண்டு, "நாங்கள் மெதோடிஸ்டு, நாங்கள் பாப்டிஸ்டு" என்று கூற விரும்புகிறோம்.



93  கன்மலையுடன் பேசுங்கள். அவர் என்றென்றும் பிரசன்னராயிருக்கிறார். அதில் சேர்ந்து கொள்ள முயலாதீர்கள். "அதில் நான் சேர வேண்டும்" என்று கூறி, அதில் சேர முயல வேண்டாம். ஒன்று மாத்திரம் நிச்சயம். அதில் நீங்கள் சேர்ந்து கொள்ள முடியாது. நீங்கள் மெதொடிஸ்டு சபையைச் சேரலாம். பெந்தெகொஸ்தே சபையைச் சேரலாம். ஆங்கிலிகன் சபையைச் சேரலாம். ஆனால் இதில் நீங்கள் சேரமுடியாது. இல்லை. இதனால் நீங்கள் நிரப்பப்பட வேண்டும். அதை சேராதீர்கள். அதனால் நிறையுங்கள். அவ்வளவு தான். அது எதனால் நிறைந்துள்ளது? ஜீவனால் நிறைந்துள்ளது; சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம் இவைகளால் நிறைந்துள்ளது உங்கள் வாழ்க்கையில் பரிசுத்த ஆவியின் வல்லமை என்றென்றுமுள்ள அந்த பிரசன்னம் அங்குள்ளது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள்.
நேரமாகிறது, நான் முடிக்க வேண்டும்.



94  இதை ஞாபகம் கொள்ளுங்கள். கன்மலை அவர்களை விட்டு விலகவில்லை. அவர்களை அது விட்டு விலகவேயில்லை. கிறிஸ்துவும் நம்மைவிட்டு விலகுவதில்லை. "உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்" என்று கிறிஸ்து கூறியுள்ளார். அது சரியா? ஓரேபிலிருந்து நேபோ வரைக்கும் அந்த கன்மலை அவர்களுடன் தங்கியிருந்தது. யோர்தானை அடைந்தபோதும் அது அங்கிருந்தது. ஓ, தேவனே, யோர்தானில் அதை நான் காண விரும்புகிறேன்.
மோசே யோர்தானை அடைந்தபோது, கன்மலை அவனுடைய பிரயாணத்தில் அவனுடன் சென்று, அப்பொழுதும் அவனுடன் கூட இருந்தது. அவன் அதன் மேல் நின்று கொண்டு, தேவனை விட்டுப் பின் வாங்கி தூரம் சென்ற ஒரு கூட்டம் ஜனங்களை நோக்கினான். அவனுடைய இருதயம் அவர்களுக்காக ஆவல் கொண்டது. அவன் யோர்தானை அடைந்தான். நான் ஆவிக்குரிய யோர்தானை குறிப்பிடுகிறேன். அவன் அங்கு நின்று கொண்டிருந்தான். மரணம் அவனை நெருங்கிக் கொண்டிருந்தது. அவனுடைய பக்கத்தில் அந்த கன்மலை இருந்தது. அவன் அந்த கன்மலையின் மேல் ஏறி நின்றான். தேவ தூதர்கள் வந்து அவனைக் கொண்டு சென்றனர்.



95  "நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை. உன்னைக் கைவிடுவதுமில்லை" காலம் எவ்வளவுதான் கடினமாக ஆனாலும், நமக்கு எவ்வளவுதான வயதானாலும், எப்படிப்பட்ட மரணம் நமக்கு நேரிட்டாலும், யோர்தானில் அந்த கன்மலை இருக்கும் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அது உங்களை விட்டு விலகுவதுமில்லை, உங்களைக் கைவிடுவதுமில்லை. கன்மலையிலிருந்து புறப்பட்டு வந்த அந்த தண்ணீரின் என்றென்றுமுள்ள பிரசன்னம் நம் வாழ்நாள் முழுவதும் யோர்தானிலும் கூட நம்முடன் இருக்கும்



96  இப்பொழுது நாம் தலைவணங்குவோம். (சபையிலுள்ள ஒரு சகோதரன் தீர்க்கதரிசனமாக ஒரு செய்தி அளிக்கிறார் - ஆசி).
தேவனுடைய ஆவி நமது மத்தியில் அசைவாடிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், கிறிஸ்துவை அறிந்திராத யாராகிலும் - அந்த கன்மலைக்கு அருகில் இல்லாதவர்; அவருடன் இதுவரை பேசாதவர் யாராகிலும் - இன்று காலையில் இங்குள்ளனரா? அது நமது மத்தியில் உள்ளது என்று உங்களுக்குத் தெரியும். அது எல்லாவிடங்களிலும் கிரியை செய்வதைக் கவனியுங்கள். அது சுற்றிலும் அசைவாடி, ஜனங்களின் மேல் அசைவாடிக் கொண்டிருக்கிறது. அதுதான் தண்ணீரின் என்றென்றுமுள்ள பிரசன்னம். அது இரட்சிப்பு. அதுதான் பாத்திரங்களை நிரப்பி அவர்கள் அமைதியாயிருக்க முடியாமல் ஏதாவதொன்றைக் கூறும் நிலைக்கு அவர்களைக் கொண்டு செல்லும் ஆவி, அவரை நீங்கள் அறியாமலிருந்தால், உங்கள் கைகளையுயர்த்தி, "சகோ. பிரான்ஹாமே, எனக்காக ஜெபியும். அவரை நான் அறிய விரும்புகிறேன். அவருடன் நான் பேச விரும்புகிறேன். அவருடைய ஆவியின் பரிபூரணத்தில் அவரை அறிய விரும்புகிறேன். அவர் எப்பொழுதும் என் பக்கத்தில் இருக்கிறார் என்று நான் அறிய விரும்புகிறேன். அவர் எப்படி இருக்கிறார் என்று நம்புகிறேன், ஆனால் அவருடன் உறவாடும் நிலையை நான் அடைய வேண்டும். நான் தாகமாயிருக்கிறேன். நான் தேவனுக்காக பசியுற்றிருக்கிறேன். அவரை நான் அதிகமாக அறிய விரும்புகிறேன்" என்று கூறுவீர்களா?



97  ஐயா, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஐயா, உங்களையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக, சகோதரனே, உன்னையும், பின்னால் உள்ள உன்னையும், இங்குள்ள சீமாட்டியையும், ஆம், ஆம், சீமாட்டி உங்கள் கரங்களை நாங்கள் காண்கிறோம். தேவனும் காண்கிறார். வாலிபனே, கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக. சீமாட்டியே, உன்னையும், ஆமென், கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே, உன்னை ஆசீர்வதிப்பாராக. அமைதியாயுள்ள இந்நேரத்தில், வேறு யாராகிலும் உண்டா, பின்னால் உள்ள வாலிபனே, கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக.
சற்று சிந்தித்து பாருங்கள். சிந்தித்து பாருங்கள், கன்மலையிலிருந்து புறப்பட்டு, வந்த தண்ணீரின் என்றென்றுமுள்ள பிரசன்னம், அதே ஆவி நமது தண்டனையை அவர் ஏற்றுக்கொண்டு அவர் நியாயந்தீர்க்கப்பட்ட அந்த நாளிலே கூக்குரலிட்டார். தேவனுடைய கோபாக்கினையின் கோல் அவரை அடித்தது, உங்கள் பாவங்கள் அந்த கோலில் சுற்றப்பட்டிருந்தன. அவருடைய இரத்தமும், தண்ணீரும் அவரிடத்திலிருந்து பெருக்கெடுத்து வந்தது. அவர், "பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்" என்றார். பெந்தெகொஸ்தே நாளன்று, நம்முடைய பிரயாணத்தில் நம்முடன் கூட செல்ல, அது இறங்கி வந்தது. அது இப்பொழுது மிக அருகாமையில் உள்ளது.



98  அதன் கீழ் நீ பிரயாணத்தை ஆரம்பித்து வீட்டினின்று வெகுதூரம் இருப்பாயானால், "ஆண்டவரே, நான் வீட்டுக்கு வருகிறேன்" என்று சொல். இந்த பாடலை நாம் பாடும்போது, நீங்கள் பீடத்தண்டை நடந்து வந்து உங்கள் ஆத்துமாக்களை மீண்டும் கிறிஸ்துவுக்கென்று பிரதிஷ்டை செய்து கொள்ள விரும்புகின்றீர்களா? ஆமென்.
நான் தேவனிடமிருந்து வெகுதூரம்அலைந்து திரிந்தேன்
(பாதையை விட்டு விலகினேன்)
இப்பொழுது நான் வீட்டிற்கு வருகிறேன்
அவிசுவாசத்தின் பாதையில்
(அதுபாவம்) நீண்ட காலம் சென்று கொண்டிருந்தேன்.
வீட்டிற்கு வருகிறேன், வீட்டிற்கு வருகிறேன்
இனி ஒருபோதும் அலையாமல் இருக்க உமது அன்பின் கரங்களை விரிவாகத் திறவும்
இப்பொழுது ஆண்டவரே, நான் வீட்டிற்கு வருகிறேன்.
(சகோ. பிரான்ஹாம் தொடர்ந்து, "ஆண்டவரே, நான் வீட்டுற்கு வருகிறேன்" என்னும் பாடலை மெளனமாக இசைக்கிறார் - ஆசி)



99  மூன்று சிறு பையன்கள், கண்களில் நீர் மல்க, வேகமாக நடந்து வந்து, இப்பொழுது பீடத்தினருகில் முழங்கால் படியிட்டுள்ளனர். அவர்கள் மன்னிக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் சிறு சிந்தையில் தீர்மானம் செய்து, ஆசனத்தை விட்டு புறப்படும் முன்பே அவர்கள் மன்னிக்கப்பட்டனர். இன்று காலை அவர்கள் யார் பக்கம் உள்ளனர் என்பதை ஜனங்களுக்கு அறிவிக்கவே, அவர்கள் முன்னால் வந்து முழங்கால் படியிட்டுள்ளனர்.
இவர்களை காட்டிலும் வயதானவர்கள் இப்படி முன்னால் வந்து முழங்கால்படியிட்டு, "ஆண்டவரே, நான் பாதையை விட்டு விலகி வெகு தூரம் அலைந்து திரிந்தேன். எனக்கு அதிக சந்தேகங்கள் இருந்தன. சில நேரங்களில் நான் அலைந்து பாவத்தில் பிரவேசித்தேன். தாமதமாவதற்கு முன்பு, நான் மறுபடியும் வர விரும்புகிறேன். நான் வந்து முழங்கால் படியிட விரும்புகிறேன்" என்று கூறுவீர்களா? ஆமென்.



100  இப்பொழுது ஆர்தர் பீம் என்பவரின் மூன்று சிறு பெண்கள், ஏறக்குறைய ஒரே அளவு, முன்னால் வந்து முழங்கால்படியிட்டுள்ளனர்.
முன்னால் வந்து கொண்டிருக்கும் சிறு பெண்ணுக்கு இப்பொழுது தான் ஒரு தம்பி பிறந்திருக்கிறான். அதைக் குறித்து நான் அன்று அறிவித்தேன். திருமதி உட் என்னிடம் வந்து, இந்த சகோதரி பிரசவத்திற்கா ஆஸ்பத்திரிக்குப் போவதாக கூறினார்கள். பரிசுத்த ஆவி, "அது பையனாயிருக்கும் என்று சொல்" என்று கூறினார். அவ்வாறே பையன் பிறந்தான்.
இன்று காலை சிறு பிள்ளைகளே பீடத்தண்டை வருகின்றனர். சகோதரி ஆர்னால்டின் வகுப்பிலிருந்து சிறுவர்கள் வந்து, தங்கள் ஜீவியத்தை பிரதிஷ்டை செய்கின்றனர். என் வலது பக்கத்தில், பீடம் முழுவதுமே சிறு பிள்ளைகளால் நிறைந்துள்ளது. பீடத்தண்டை வந்துள்ளோருக்கு மற்றுள்ள பெரியோர்கள் ஒரு பாடலைப் பாடினால் நலமாயிருக்கும், இல்லையா?



101  இப்பொழுது ஆண்டவரே, நான் வீட்டிற்கு வருகிறேன்.
(சகோ. பிரான்ஹாம் பீடத்தண்டையிலுள்ள சிறு பிள்ளைகளிடம் பேசுகிறார். இடையே, "ஆண்டவரே, நான் வீட்டுக்கு வருகிறேன்" என்று பாடுகிறார் - ஆசி).
வீட்டுற்கு வருகிறேன், வீட்டுற்கு வருகிறேன்
இனி ஒருபோதும் அலையாமல் இருக்க உமது அன்பின் கரங்களை விரிவாகத் திறவும்
ஆண்டவரே, நான் வீட்டுற்கு வருகிறேன்.
ஆண்டவரே, நான் பாவத்தினாலும் அலைவதினாலும் களைப்புற்றிருக்கிறேன்
இப்பொழுது நான் வீட்டுற்கு வருகிறேன், உமது அன்பில் நம்பிக்கை வைத்து,
உமது வார்த்தையை விசுவாசிப்பேன்
இப்பொழுது நான் வீட்டுற்கு வருகிறேன்
வீட்டுற்கு வருகிறேன், வீட்டுற்கு வருகிறேன்
இனி ஒருபோதும் அலையாமல் இருக்க உமது
அன்பின் கரங்களை விரிவாகத் திறவும்
ஆண்டவரே, நான் வீட்டுற்கு வருகிறேன்.



102  சற்று நேரம் நாம் தலைவணங்கி இச்சிறுவர்களுக்காக ஜெபம் செய்வோம்.
பரலோகப் பிதாவே, நாளை என்று ஒன்றிருக்குமானால், இன்னும் பத்து, பதினைந்து ஆண்டுகள் இயேசு வரத் தாமதித்தால், இச்சிறுவரும் சிறுமியரும் வரப்போகும் சந்ததிக்கு இச்செய்தியை அறிவிக்கிறவர்களாய் இருப்பார்கள். அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் பீடத்தண்டை வந்த இந்த நாளை நினைவு கூறுவார்கள் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமுமில்லை. ஆண்டவரே, இவர்கள் விலையேறப்பெற்ற சிறு கற்கள், அவர்களுடைய சிறிய, மிருதுவான இருதயங்கள் அவர்களை இன்று காலையில் குற்றப்படுத்தியுள்ளன. அவர்கள் செய்தியை முழுவதும் கூட கேட்கவில்லை. சகோதரி ஆர்னால்ட் கூறியதைக் கேட்ட பின்பு அவர்கள் வகுப்பிலிருந்து வெளியே வந்து, பீடத்தண்டை வந்து, தங்கள் வாழ்க்கையை உமக்கென்று அர்ப்பணித்துள்ளனர்.
ஆண்டவரே, பரிசுத்த ஆவி நமக்குள் வாசம் செய்கிறார் என்று இப்பொழுது தான் கூறி முடித்தேன். இந்த பரிசுத்த ஆவியின் பேரில் விசுவாசம் கொண்டால், அவர் எல்லாவற்றையும் நமக்குச் செய்கிறார். ஆண்டவரே, இந்த மணி நேரத்திலேயே அவர்கள் செய்த எல்லா பாவங்களையும் நீர் மன்னித்துவிட்டீர் என்று நம்புகிறேன். இச்சிறுவர்களின் வாழ்க்கையை, அவர்களுடைய வழியில் நீர் காத்துக்கொள்ள வேண்டுமென்று, என் இருதயத்திலுள்ள எல்லா விசுவாசத்தோடும் உம்மை மன்றாடிக் கேட்கிறேன். அவர்கள் வழி விலகாதிருப்பார்களாக.



103  இது உண்மையாகவே வினோதமாயுள்ளது, இன்று காலை ஆவியானவர் என்னிடம், வினோதமான ஒன்றை நாம் காண்போம் என்று கூறினார். தேவனே, நீர் மற்றவர்களுடன் ஈடுபடுவதை நிறுத்திவிட்டிருந்தால், இந்த சிறு பிள்ளைகளை ஏற்றுக் கொள்ளும். இன்று காலை கொடுக்கப்பட்ட பீட அழைப்பில், பெரியவர்கள் ஒருவர் கூட வரவில்லை. ஆனால் ஒரு கூட்டம் சிறு பிள்ளைகள் முன்னால் வந்தனர், இந்த மகத்தான செய்தியை பெரியவர்கள் புரிந்து கொள்வதே கடினமாயுள்ளது. ஆனால் சிறு பிள்ளைகள் அதன் ஆவியை கிரகித்துக் கொண்டனர். பிதாவே, அவர்களுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். உம்முடைய ஊழியக்காரன் என்னும் நிலையில், இவர்களை இக்கூட்டத்தின் விருதுகளாக உம்மிடம் சமர்ப்பிக்கிறேன். அவர்கள் வாழ்நாள் முழுவதும், என்றென்றுமுள்ள ஜீவத்தண்ணீரின் பிரசன்னம் அவர்களிடம் பாய்ந்து கொண்டிருக்குமென்று நம்புகிறேன். இப்பொழுது நடப்பவைகளின் பேரில் அவர்கள் விசுவாசம் கொள்வார்களாக. தேவன் இவர்களை இருக்கைகளிலிருந்து இழுத்து இங்கு அனுப்பினாரென்று அவர்கள் விசுவாசித்து, அவர்கள் வாழ்நாள் முழுவதும் அந்த தேவன் மேல் விசுவாசமுள்ளவர்களாய் இருப்பார்களாக. அவர்கள் மரிக்கும் நாளில் அவர்களுடைய சிறு ஆவிகள் உம்மிடம் கொண்டுவரப்பட்டு, உயிர்த்தெழுதலின் நாளில் அவை மீண்டும் அவர்களுடைய சரீரங்களை அடைவதாக. பிதாவே, அவர்கள் உம்முடையவர்கள். இயேசுவின் நாமத்தின் மூலம் அவர்களை உமக்களிக்கிறேன்.



104  நாம் தலைவணங்கியிருக்கும் இந்நேரத்தில், இயேசுவே அவர்கள் இரட்சகர் என்றும், அவர் தாம் அவர்களை பீடத்தண்டை சென்று முழங்கால்படியிடச் சொன்னார் என்றும் விசுவாசிக்கும் இந்த சிறு பிள்ளைகள் அனைவரையும் ஒன்று கேட்கப் போகின்றேன். இயேசு உங்களை நேசிக்கிறார் என்றும், அவர் உங்கள் பாவத்தை மன்னிக்கிறவர் என்றும் நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? நீங்கள் எல்லோரும் எழுந்து நின்று ஜனங்களை நோக்கினாற்போல் நில்லுங்கள், அப்படி செய்வதனால், இயேசு உங்களை இரட்சித்தார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்கள் என்று அவர்களுக்கு அறிவிக்க முடியும். இப்பொழுது எழுந்து நின்று ஜனங்களை நோக்கி நில்லுங்கள் இயேசுவை நேசிக்கும் சிறுவர் சிறுமியர் அனைவரும் எழுந்து நின்று, சபையோரை நோக்கி நில்லுங்கள்.



105  முன்னாலுள்ள சிறு பெண்களைக் குறித்தென்ன? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் இயேசுவை நேசிக்கிறீர்களா? இங்குள்ள சிறு பெண்களே, நீங்கள் இயேசுவை உங்கள் முழு மனதுடன் நேசிக்கின்றீர்களா? அன்பே, நீ அவரை நேசிக்கிறயா? எழுந்து நில், நீ இயேசுவை நேசிக்கிறாய் என்று ஜனங்கள் அறிந்து கொள்ளட்டும். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக.
நாம் இப்படி திரும்பி, இவ்விடம் விட்டுச் செல்லும் முன்பு இந்த ஜனங்களுக்காக, "இயேசு என்னை நேசிக்கிறார்! அதை நானறிவேன். வேதம் அவ்வாறு என்னிடம் கூறுகிறது" என்னும் பாடலைப் பாடுவோம். பாருங்கள்? நாம் அந்தப் பாடலைப் பாடும் போது, கரங்களை உயர்த்துவோம். சரி, நாம் பாடுவோம்.
இயேசு என்னை நேசிக்கிறார்! அதை நானறிவேன்
வேதம் அவ்வாறு என்னிடம் கூறுகிறது
பாலர் அவருக்குச் சொந்தமானவர்.
அவர்கள் பலவீனர்
இப்பொழுது கரங்களையுயர்த்தி, இங்குள்ள எத்தனை பேர் அங்கிருக்க விரும்புகின்றனர்?
ஆம், இயேசு என்னை நேசிக்கிறார்
ஆம், இயேசு என்னை நேசிக்கிறார்
ஆம், இயேசு என்ன நேசிக்கிறார்
வேதம் அவ்வாறு என்னிடம் கூறுகிறது.



106  இப்பொழுது, நீங்கள் எல்லோரும் எனக்குப் பிறகு இதை திரும்பச் சொல்லுங்கள். இயேசு கிறிஸ்து ("இயேசுகிறிஸ்து") தேவனுடைய குமாரன் என்று ("தேவனுடைய குமாரன் என்று'') விசுவாசிக்கிறேன் ("விசுவாசிக்கிறேன்") இன்று ("இன்று") அவரை என் சொந்த இரட்சராக ஏற்றுக் கொள்கிறேன். ("அவரை என் சொந்த இரட்சராக ஏற்றுக் கொள்கிறேன்"), இன்று முதல் ("இன்று முதல்") எப்பொழுதும் ("எப்பொழுதும்") அவரை நேசித்து ("அவரை நேசித்து") அவரை சேவிப்பேன் ("அவரை சேவிப்பேன்"), ஆமென் ("ஆமென்")



107  (சபையிலுள்ள ஒருவர், "சகோ. பிரான்ஹாமே, என் இருதயத்தில் நான்கு சிறு பிள்ளைகள் உள்ளனர். அவர்களுக்காக ஜெபிப்பீர்களா? என்கிறார் - ஆசி) சகோ. பென், நிச்சியமாக ஜெபிப்பேன்.
பரலோகப் பிதாவே, மற்ற சிறு பிள்ளைகள் கிறிஸ்துவினிடம் வருவதை இந்த மனிதன் காணும்போது, தந்தை என்னும் நிலையில் இவர் தமது பிள்ளைகளுக்காக அழுகிறார். இந்த சிறு பிள்ளைகள் பீடத்தண்டை கொண்டு வந்த அதே ஆவியானவர் தாமே அவருடைய பிள்ளைகளையும் இரட்சிப்பாராக. அதை அருளுவீராக, பிதாவே, அவர்களை உம்மிடம் ஒப்படைக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்.



108  சிறுவர்களாகிய இவர்கள் தங்கள் இருக்கைகளுக்குத் திரும்பிச் செல்லும் போது, வரிசையிலுள்ள ஒவ்வொருவரும் கைகுலுக்க, அல்லது அவர்கள் முதுகில் தட்டிக் கொடுக்க விரும்புகிறேன். நீங்கள் எல்லோரும் இந்த வழியாக உங்கள் இருக்கைகளுக்குச் செல்லுங்கள். இங்குள்ள அனைவரும் அவர்களுடைய முதுகில் தட்டிக் கொடுங்கள். நாங்கள் உங்களை முழு மனதுடன் நேசிக்கிறோம். நீங்களும் மற்றவர்களைப் போலவே கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கத்தினராயிருக்கிறீர்கள்.
நாம் சீயோனுக்கு அணிவகுத்து செல்லுகிறோம்
அழகான, அழகான சீயோனுக்கு நாம் அணிவகுத்து
சீயோனை மேல் நோக்கி செல்கிறோம்
அந்த அழகான தேவனுடைய நகரத்துக்கு
ஆண்டவரை நேசிக்கும் நாமனைவரும் வருவோம்
நமது மகிழ்ச்சியை தெரிவிப்போம்
இனிமையான ஒரு மனதுடன் சேர்ந்து பாடுவோம்
இனிமையான ஒரு மனதுடன் சேர்ந்து பாடுவோம்
இப்படியாக சிங்காசனத்தை சுற்றி நின்று
இப்படியாக சிங்காசனத்தை சுற்றி நின்று
அருமையான பாட்டு!
இப்பொழுது நாம் கரங்களையுயர்த்துவோம்
நாம் சீயோனுக்கு அணிவகுத்து செல்கிறோம்
அழகான, அழகான சீயோனுக்கு
நாம் அணிவகுத்து சீயோனை மேல் நோக்கி செல்கிறோம்
அந்த அழகான தேவனுடைய நகரத்துக்கு
இதை நாம் பாடும் போது ஒருவரோடொருவர் கை குலுக்குவோம்
நாம் சீயோனுக்கு அணிவகுத்து செல்கிறோம்
அழகான, அழகான சீயோனுக்கு நாம்
அணிவகுத்து சீயோனை மேல் நோக்கி செல்கிறோம்.
அந்த அழகான தேவனுடைய நகரத்துக்கு



109  இப்பொழுது நாம் தலைவணங்கி ஜெபம் செய்யும் போது இந்த பாடலைப் பாடுவோம். சகோ. டெட்டி… (சகோ. பிரான்ஹாம், "நாம் சீயோனுக்கு அணி வகுத்து செல்கிறோம்" என்னும் பாடலை மெளனமாக இசைகிறார் - ஆசி).
என்னிடம் சில விண்ணப்பங்கள் உள்ளன. உறுமால்கள் போன்றவையும் உள்ளன. அவை வெளி நாடுகளிலிருந்து வந்திருக்கக் கூடும். இங்கிலாந்திலுள்ள ஒரு குழந்தையின் இத்தனை நீளமுள்ள ஒரு ஜதை காலுறை (booties) வந்துள்ளதாக பில்லி என்னிடம் கூறினான். அந்த குழந்தையின் கால்கள் ஊனமாயுள்ளன. நாம் அதற்கும் ஜெபிக்க வேண்டியவர்களாயிருக்கிறோம்.



110  எனவே… (சபையிலிருந்து சகோ. பென், "சகோ. பிரான்ஹாமே, குறுக்கே பேசுவதற்காக மன்னிக்கவும். சென்ற இரவு எங்கள் காரின் முன்னாலுள்ள 'பம்பர்'ஐ இடித்தது யார் என்று ஆண்டவர், பம்பரை வெளிப்படுத்த வேண்டுமென்று ஜெபிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்கிறார் - ஆசி) ஆமென், சகோ. பென், நான் நிச்சயம் அப்படி செய்வேன்.
(சகோ. பிரான்ஹாம் தொடர்ந்து, " நாம் சீயோனுக்கு அணிவகுத்து செல்கிறோம்" என்னும் பாடலை மெளனமாக இசைக்கிறார் - ஆசி )



111  ஆண்டவரே, நாங்கள் அணிவகுத்து செல்லும்போது, அடிக்கப்பட்ட கன்மலை எங்களோடிருக்கிறது என்றும், கன்மலையிலிருந்து புறப்பட்டு வந்த தண்ணீரின் என்றென்றுமுள்ள பிரசன்னம் சபையுடன் கூட செல்கிறது என்றும் நாங்கள் அறிந்திருக்கிறோம். ஓ, நித்திய தேவனே, எங்களிடமுள்ள இந்த தேவன் பேரிலுள்ள விசுவாசத்தை எங்களுக்கு அவிழ்த்து விடும். நீர் செய்வீர் என்று எங்களுக்குத் தெரியும். உம்மிடம் எங்களுக்கு தயை கிடைக்குமென்றும், எங்களை நம்பி அதை எங்களுக்கு அளிப்பீர் என்றும் நாங்கள் அறிவோம். ஆண்டவரே, அதை அபரிமிதமாக எங்களுக்குத் தந்தால், நாங்கள் அதை தவறாக உபயோகிக்கக்கூடும். ஆனால் உம்முடைய கண்களில் எங்களுக்கு தயை கிடைத்தால், அதை தந்தருளுவீராக.
யாரோ ஒருவர் அவருடைய காரை மோதிவிட்டதாக நம்முடைய சகோதரன் கூறினார். ஓ, தேவனே, அதை பழுது பார்க்க அவரிடம் பணமில்லை என்று எங்களுக்குத் தெரியும். காரை மோதின அந்த மனிதன் இருதயத்தில் குத்தப்பட்டவராய், அதற்காக மனஸ்தாபப்பட்டு, அவரிடம் வந்து, "நான் தான் உங்கள் காரை மோதியவன், நான் பழுது பார்த்து தருகிறேன்" என்று கூறும்படி செய்யும். சகோ. பென்னுக்கும் அவருடைய அருமையானவர்களுக்கும் உதவி செய்வீராக.



112  என் கரங்களில் உறுமால்களும் விண்ணப்பங்களும் உள்ளன. அந்த தேவன் பேரில் நான் விசுவாசம் கொண்டுள்ளேன். மோசேக்கு அந்த தேவன் பேரில் விசுவாசம் இருந்தது. அவன் சிவந்த சமுத்திரத்தைக் கடந்தான். தானியேலுக்கு அந்த தேவன் பேரில் விசுவாசம் இருந்தது. அவன் சிங்கங்களின் கெபியிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டான். சாத்ராக், மேஷாக், ஆபத்நேகோ அவர் பேரில் விசுவாசம் வைத்திருந்தனர். அது அக்கினியை குளிரச் செய்தது. பவுல் அவர் பேரில் விசுவாசம் வைத்திருந்தான். ஒரு நாள் ஆராதனை பெருகிக் கொண்டே போய், அவனால் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விதத்தில் ஜெபிக்க முடியாத நிலை ஏற்பட்டபோது, அவன் ஒரு உறுமாலை எடுத்து, "தேவன் என்னோடு கூட இருக்கிறார்" என்றான். அவன் தன் கரங்களை உறுமால்களின் மேலும் கச்சைகளின் மேலும் வைத்து ஜெபித்தான். அப்பொழுது அசுத்த ஆவிகள் ஜனங்களை விட்டுப் புறப்பட்டன. வியாதிகளும் நோய்களும் அவர்களை அகற்றவிட்டகன்றன. தேவனே, எனக்கும் அதே தேவன் பேரில் விசுவாசம் உண்டு. ஆண்டவரே, பொல்லாத ஆவிகள் புறப்பட்டு வெளியேறுவதாக! வியாதிகளும், நோய்களும், துன்பங்களும் அகலுவதாக!



113  நதியில் அக்கினி ஸ்தம்பத்தில் என்னுடன் பேசின தேவனாகிய நீர் மாறாதவராயிருக்கிறீர். என்னுடன் கூட நீர் புகைப்படம் எடுத்துக் கொள்ள சம்மதித்து, அது அந்த சுவற்றில் தொங்கிக் கொண்டிருக்கிறது. ஆண்டவரே, நீர் எங்களுடனே இருக்கிறீர். அதே அக்கினி ஸ்தம்பம் என்றென்றும் பிரசன்னமாயுள்ளது. நாங்கள் உம்முடன் ஆவியில் ஒருமைப்பட்டு, கன்மலையிலிருந்து வந்த தண்ணீரை ஒவ்வொரு நாளும் அனுபவித்து வருகிறோம். அப்படியானால், நீர் இங்கே இருக்கிறீர். ஆண்டவரே, உம் பேரில் எங்களுக்கு நம்பிக்கையுண்டு. உம் பேரில் எங்களுக்கு விசுவாசம் உண்டு. நீர் எங்களை அபிஷேகித்து உதவி செய்வீர் என்று நம்புகிறோம். ஆண்டவரே, எங்களுடைய மகிமைக்காக அல்ல. அப்படியானால் நாங்கள் தவறு செய்த மோசேயைப் போலிருப்போம். ஆண்டவரே, உமக்கு உதவியாயிருக்க நாங்கள் ஏதாவதொன்றை செய்ய விரும்புகிறோம். கூடுமானவரைக்கும் உமக்கு உதவியாயிருப்பதே எங்கள் இருதயத்தின் நோக்கமாயுள்ளது. பிதாவே, நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று எங்களுக்குக் காண்பியும்.



114  விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்த உறுமால்களும் விண்ணப்பங்களும் அடையாளமாகத் திகழும் வியாதிகளை நான் கடிந்து கொள்கிறேன். அவை ஜனங்களை விட்டுப் போய்விடும். ஆண்டவரே, நீர் அதை செய்வீர் என்று நானறிவேன். அதை என் இருதயத்தில் விசுவாசிக்கிறேன். இன்று காலை எங்கள் மத்தியில் காணப்படும் எல்லா வியாதிகளையும் சுகமாக்குவீராக!
கைகளையுயர்த்தின அனைவரையும் இரட்சிப்பீராக! தண்ணீருக்காக கன்மலையிடம் வர வேண்டுமென்று அவர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர். ஆண்டவரே, அவர்கள் இன்று அதிக தாகமடைந்து, அவர்கள் வாழ்க்கை உப்பால் சாரமேறினதாகத் திகழ்ந்து, கிறிஸ்துவுக்காக அவர்கள் தாகமடைய அருள்புரியும்.
பிதாவே, இன்றிரவு எங்களோடிரும். ஓ, தேவனே, இந்த விண்ணப்பங்களின் மூலம் ஜனங்களுடைய இருதயங்களில் என்ன உள்ளது என்பதை நான் கண்டுகொள்ளட்டும். அவர்களுடைய இருதயங்களில் ஒன்றுமில்லாமல் இருந்தால், அவர்களுடைய இருதயங்களுக்கு இன்றிரவு பிரசங்கிக்க எனக்கு ஏதாவதொன்றை தருவீராக.



115  சகோ. நெவில்லையும் அவருடைய மனைவியையும், அவருடைய குடும்பத்தினரையும் ஆசிர்வதியும். எங்கள் சிறு சபையையும் தர்மகர்த்தாக்களையும், மூப்பர்களையும். அங்கத்தினர்களையும், எல்லாவிடங்களிலுமுள்ள உமது சரீரத்தையும் ஆசிர்வதிப்பீராக. பிதாவே, எங்களோடிரும். இவைகளை உமது கரங்களில் சமர்பப்பிக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்,
நாம் அணிவகுத்து சீயோனை மேல் நோக்கி செல்கிறோம்
அந்த அழகான தேவனுடைய நகரத்துக்கு
இப்பொழுது உண்மையாக அவரிடம் பாடுவோம்,
பாருங்கள்? ஆண்டவரை நேசிக்கும் நாமனைவரும் வருவோம் நமது மகிழ்ச்சியை தெரிவிப்போம்
இனிமையான ஒரு மனதுடன் சேர்ந்து பாடுவோம் இனிமையான ஒரு மனதுடன் சேர்ந்து பாடுவோம்.
இப்படியாக சிங்காசனத்தை சுற்றி நின்று
இப்படியாக சிங்காசனத்தை சுற்றி நின்று
நமது இருதயங்களை வணங்கி
இப்பொழுது நாம் சீயோனுக்கு அணிவகுத்து செல்கிறோம்
அழகான, அழகான சீயோனுக்கு நாம் அணி வகுத்து
சீயோனை மேல் நோக்கி செல்கிறோம்
அந்த அழகான தேவனுடைய நகரத்துக்கு